மாதவன் என் மணியினை
வலையிற் பிழைத்த பன்றி போல்
ஏதும் ஒன்றும் கொளத் தாரா
ஈசன்தன்னைக் கண்டீரே?
பீதக-ஆடை உடை தாழப்
பெருங் கார்மேகக் கன்றே போல்
வீதி ஆர வருவானை
விருந்தாவனத்தே கண்டோமே.
மடிக் கணினியில் சஞ்சய் சுப்ரமண்யன் குரலில் ஆண்டாளின் நாச்சியார் திருமொழி (சாமா ராகம்) ஒலிக்கிறது.
’வாழ்ந்து போதீரே’க்கு அடுத்து எழுத இருக்கும் நாவலுக்கான கள ஆய்வு செய்ய மங்களூர்-ரத்னகிரி வழிப் பயணத் திட்டத்தை வகுத்துக் கொண்டிருக்கிறேன். கூரியர் சர்வீஸ் அழைப்பு.
கோதை தான். இப்போது நூல் வடிவில்.
புரட்டிப் பார்க்க, அரங்கனுக்கும் நாச்சியாருக்கும் நிகழ்ந்த கடித உரையாடலாக, ஸ்ரீமுகங்கள்.
//மாமாயனுக்குக் கோதை வரைவது. பொருத்தமுடைய நம்பி என உமைக் குறிப்பிட்டதற்கு மகிழ்ந்தீர்கள்.
தருமம் அறியாக் குறும்பனைத்
தன்கைச் சார்ங்கம் அதுவே போல்
புருவ வட்டம் அழகிய
பொருத்த மிலியைக் கண்டீரோ
என்று பட்டி மேய்ந்து என்னும் பதிகத்து ஆறாம் பாடலுள் உம்மைப் பாடியிருப்பதைக் கண்ணுறவில்லையோ. . நாணிலி
//
ஆண்டாள் கடிதத்தில் வெட்கமும் கிண்டலும் சீண்டுதலுமாக மொழி அமைந்தால் அரங்கன் கடிதம் கனகம்பீரம்.
//
’நம் வீட்டில் உள்ள குடவரும், கோவணரும், பூவிடுவோர், தழைவிடுவார், தண்ணீர் சுமப்பார், தண்டெடுப்பார் முதலியவர்களும், அணுக்கரும், கணக்கரும் நம்பால் வந்தனர். கோதை வீட்டினின்றும் அர்ச்சகரும், குடவரும், கோவணரும், தண்டெடுப்பாரும் ஸ்ரீராமானுஜ உடையாரும் வந்தார்கள் என விண்ணப்பித்தனர்’.
//
அருமையான புத்தகம் என்று புரட்டும் போதே தெரிகிறது.
நம் நண்பர் Naan Rajamagal நான்ராஜாமகள் எழுதியது.
விரைவில் படிக்க எடுக்க வேண்டும்.
ஜெயந்தி சங்கரின் அனைத்துப் படைப்புகளும் சேர்ந்த நூல், வித்யாசுப்ரமணியம் (உஷா மேடம்) எழுதிய உப்புக் கணக்கின் இறுதி அத்தியாயங்கள், துளசி சேச்சியின் அக்கா .. படிக்க வேண்டிய வரிசை இது.
இப்போது ராஜாமகள் (திருமதி தேன்மொழி) எழுதிய இப்படிக்கு ..கோதை நூலும்