New Novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 19 இரா.முருகன்

கொச்சு தெரிசா என்று தன்னை அறிமுகம் செய்து கொண்ட, தூர தேசத்திலிருந்து வந்த பெண்ணோடு ரேடியோ லைசன்ஸ் உத்தியோகஸ்தர் பேசுவதற்கு முன் பெருஞ் சத்தம் எழுப்பி கப்பி ரோடில் ஒரு சைக்கிள் தாறுமாறாக விழுந்தது. உடுப்பில் படிந்த செம்மண்ணைத் தட்டி உதிர்த்தபடி தரையில் இருந்து எழுந்த சைக்கிளோட்டி, உலகைக் கனிவாகப் பார்த்துப் புன்னகை செய்தபடி வண்டியை நிலை நிறுத்தினார்.

சக்கர வண்டிகள் நம்புதற்கு உரியவை அல்ல என்று அவரைப் பரிவோடு நோக்கியபடி ரேடியோ உத்தியோகஸ்தர் கூறினார். தன்னிடமும் அதே போல் தாந்தோன்றியான ஒரு மோட்டார் கார் இருந்தது என்று சொல்ல நினைத்த தெரிசா, இந்த நபர்களோடு உரையாடல் நீண்டால் அந்தத் தகவலைச் சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்தவளாக, கதா பிரசங்கம் செய்கிற கனவானின் வீடு இது தானே என்று மீண்டும் கேள்வியை, சைக்கிளோட்டி வந்த தியாகராஜ சாஸ்திரி என்ற மத்திய வயதைத் தொட்டுக் கொண்டிருக்கும் புரோகிதனிடம், இந்த முறை, அவள் சற்றே பழகிக் கொண்டிருக்கும் மலையாளத்தில் கேட்டாள்.

இங்கிலீஷ் புழங்கும் தேசத்துப் பெண் வந்திருக்க, ரேடியோ லைசன்ஸ் போன்ற அற்பமான சமாசாரங்களை வலியுறுத்துவதையும், அவள் பார்த்திருக்கப் பெட்டியுடைப்பை நடத்துவதையும் தவிர்க்கலாம் என்று மனதில் பட்ட லைசன்ஸ் உத்தியோகஸ்தர் கையில் ஏந்திய, ஊருணி நீர் நிரம்பிய செம்பு சகிதம் பந்தலுக்குத் திரும்ப நடந்தார். அந்தப் பாத்திரத்தில் இருந்து, சன்னமான குரலில் சுருள் சுருளாக வசனம் சொல்லி ஆசிர்வதிப்பது கேட்டது.

நல்லது, அப்புறம் வைத்துக் கொள்ளலாம் இதையெல்லாம் என்று அந்தக் கலத்தை நோக்கி அன்போடு சொல்லியபடி நடந்தார் லைசன்ஸ் உத்தியோகஸ்தர்.

அவரை வியப்போடு பார்த்தபடி நின்ற கொச்சு தெரிசாவிடம் தியாகராஜ சாஸ்திரி சொன்னார் –

அது கும்பளங்காய் மகாத்மியம் என்ற அபூர்வமான ஹாஸ்ய கிரந்தத்தில் வரும் வரிகளாகும்.

தெரிசா அதென்ன என்று தெரிந்து கொள்ளும் அக்கறை முகத்தில் தெரிய முன்னால் வந்தாள்.

அந்த கிரந்தம் பற்றிப் பிற்பாடு விசாரித்துக் கொள்ளலாம் என்று முசாபர் பின்னால் இருந்து துரைமார்களின் தோரணையோடு கூடிய ஆங்கிலத்தில் சொல்ல, சாஸ்திரிகள் ஒரு வினாடி திகைத்து நின்றார். தன் ஆங்கிலம் தன் ஆகிருதிக்கு ஒத்து வராமல் லுங்கி கட்டிய துரை பிம்பத்தை உருவாக்குவதை எப்போதும் ரசிக்கத் தவறாத முசாபர் கொச்சு தெரிசாவிடம் கூறியது –

இந்த வீடாகத்தான் இருக்கும். இருட்டுகிற முன்பு உள்ளே போய்ப் பார்த்துட்டு வா. இங்கே தங்கியிருக்க விடுதி இருக்குமான்னு வேறே தேடணும்.

காலியாகிக் கொண்டிருந்த பந்தலில் ஓரமாக ஒரு மர நாற்காலியை இழுத்துப் போட்டு முசாபர் அமர, கொச்சு தெரிசா சற்றுத் தயக்கத்துடன் பந்தலை ஒட்டி இருந்த கட்டடத்துக்குள் போனாள். வட இந்தியப் பெண் போல பைஜாமா தரித்து, மேல் துணியால் தலையில் பதவிசாக முக்காடு போட்டிருந்த அவள் உள்ளே போகும்போதே வாசலில் மரப் பரணியில் வைத்திருந்த குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்தபடி நடந்தாள். முசாபர் அதைக் கவனித்திருந்தாலும் ஒன்றும் சொல்லியிருக்கப் போவதில்லை தான்.

தினசரி பண்டிகை கொண்டாடுகிற, காலண்டரைத் தொலைத்த வீடு போல அந்த இடம் இருந்தது. கூடை நிறைத்து இருந்த பூக்களின் வாசமும், சின்னதும் பெரிதுமான பாத்திரத்தில் பாலும், வைத்தியன் சொல்லி அனுப்பியபடி வாங்கி வைத்தது போல் தேனும், தட்டு நிறைய சர்க்கரை, இனிப்புப் பதார்த்தங்களும் பண்டிகைச் சூழலை அதிகப்படுத்தியது.

பனை ஓலைத் தடுக்குகளில் உட்கார்ந்திருந்த பஞ்சாபகேச சிரௌதிகளின் சிஷ்ய கோடிகள் உண்டியலில் சேர்ந்த சொற்பக் காசையும், பொருளாக வந்த காணிக்கையையும் கணக்கிட்டுப் புத்தகங்களில் கவனமாகப் பதிந்து கொண்டிருந்தார்கள். ராத்திரி ஒன்பது மணி அடிக்க இன்னும் முப்பது நிமிடம் இருக்கிறது, இருபத்தெட்டு நிமிடம் இருக்கிறது என்று ஒருவர் சிரத்தையாக அறிவித்துக் கொண்டிருந்தார். ஒன்பது மணிக்கு இங்கே ஏதோ அற்புதம் நிகழப் போவதாக இருக்கும் என்று தெரிசாவுக்குத் தோன்றியது.

தெரிசா கைப்பையில் இருந்து நூறு ரூபாய் நோட்டையும், ஒரு பிரிட்டீஷ் பவுண்ட் நாணயத்தையும் காணிக்கை வட்டிலில் போடப் பக்கத்தில் இருந்த பெண் சிஷ்யை எழுந்து நின்று என்ன மொழி என்று புலனாகாத கோரிக்கையாகவோ பிரார்த்தனையாகவோ ஓங்கிய குரலில் சொல்லி, இன்னொரு தடுக்கை அவளருகில் பரத்தித் தெரிசாவை இருக்கச் சொன்னாள்.

கதை சொல்லி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறாரா?

தெரிசா கேள்விக்கு ஒரு சிரிப்பே பதிலாக வந்தது. சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு வாசலில் விட்டு விட்டு உள்ளே வந்த தியாகராஜ சாஸ்திரிகளை, உள்ளே இருந்தவர்கள் தன்னை வரவேற்றது போல் முகத்தில் மகிழ்ச்சியும் சிரிப்புமாக வரவேற்கவில்லை என்பதை தெரிசா கவனித்தாள்.

காலட்சேபக் காரர் போய்ச் சேர்ந்து ஒரு வருஷத்துக்கு மேலே ஆச்சே. போன மாசம் தான் ஊரோடு உக்காந்து எள்ளும் தண்ணியும் ஊத்தி பிண்டம் பிடிச்சு வச்சானது. அப்புறமா செம்புலே வரார், பைப்பிலே வரார்னு இவா ஏதோ சொல்லிண்டு இருக்கா. எல்லாம் அந்தக் கட்டேலே போற ஜவஹர்லால் நேரு கொடுக்கற தைரியம்.

தெரிசாவுக்கு மட்டும் கேட்கிற மாதிரி மெதுவாகச் சொல்லியபடி அவர் பின்னால் உட்கார்ந்தார்.

இந்த ஊருக்கும் ஜவஹர்லால் நேருவுக்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்தாள் தெரிசா. ஒரு வேளை அந்தப் பெயரோடு இங்கே யாராவது மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்களோ என்னமோ.

தியாகராஜ சாஸ்திரிகள் சொந்த சகோதரியை, மகளைப் பார்க்கும் பிரியத்தோடு தெரிசாவை நோக்கினார். இதெல்லாம் முன்பே திட்டமிடப்பட்டவை. அவருக்கு நடப்பது இப்படித்தான் என்று தெரியும்.

இந்தப் பெண்ணுக்குத் தன்னாலான உதவியைச் செய்ய வேண்டுமென்று அவருக்கு மனதில் பட்டது முதல் தடவை இல்லை என்று நிச்சயமாக நம்பினார் தியாகராஜ சாஸ்திரிகள். மூன்று நாள் முன்பே, நடுப் பகலில் திவசச் சாப்பாடு சாப்பிட்டு விட்டுத் தூங்கியபோது இந்தப் பெண்ணில் முகம், இவள் நிறையப் படி உள்ள மண்டபத்தினுள், படைக்கிற வெய்யிலில் படி ஏறி வருவதாகப் படிந்து இருந்தது.

தியாகராஜனின் அருமைச் சிநேகிதன் சின்னச் சங்கரனின் பிரியமான புரபசர் மருதையன் மாமா நேற்றுத் தியாகராஜன் அரசூர் குடும்ப வீட்டைக் கடந்து சைக்கிளில் போனபோது வாசலில் நின்றிருந்தார். அவர் இறந்து ரெண்டு வருஷம் ஆனாலும் சைக்கிளில் தியாகராஜன் அந்தப் பக்கம் போகும்போது வாசலில் உட்கார்ந்து செய்தித் தாள் படித்த படியோ, தெரு முனையில் இருந்து பச்சைப் பசேல் என்று சாளூர்க் காய்கறி வாங்கி வந்து கொண்டிருப்பவராகவும் அவர் தியாகராஜ சாஸ்திரிக்குக் கண்ணில் படுகிறார்.

சொரிய முடியாத இடத்தில் வந்த வேர்க்கூறு போல தியாகராஜனுக்கு எரிச்சல் தர வைக்கிற ஒரே பிரச்சனை என்ன என்றால், புரபசருக்கு நேரு என்ற பெயர் நாகப்பட்டணம் மிட்டாய்க் கடை நெய் ஜாங்கிரி சாப்பிடுகிறது போல் அவ்வளவு பிரியமானது. அந்தக் குல்லாக் கடன்காரனைத் துதித்துப் பரவசப்படும் கும்பலைக் கண்டாலே தியாகராஜ சாஸ்திரிகளுக்கு குமட்டிக் கொண்டு வருகிறது. ஒரு பொக்கைவாய்க் கிழவனைப் பரவசத்தோடு துதிப்பதைக் கூட அவர் சகித்துக் கொள்வார். ஆனால் வழுக்கைத் தலையில் தொப்பி தரித்த காஷ்மீரப் பண்டிதரை அவரால் சுபாவமாகவே சற்றும் பொறுக்க முடியாது போனது.

அவரும் தன்னால் இயன்ற வரைக்கும் நேருவைப் பற்றி தனக்கு உசிதமான தகவல்களைப் பேப்பரில் படித்ததாகவும், புத்தகத்தில் படித்ததாகவும் சொல்லிப் பரப்ப முயற்சி செய்து வருகிறார். அவர் படிக்கிற புத்தகங்கள் காந்தி, நேரு, அந்த மனுஷனுடைய தகப்பன் மோதிலால் நேரு, விபின் சந்த்ர பால், தாங்குதூரி பிரகாசம் என்று நிறையப் பேரைச் சகல கெட்ட குணங்களுக்கும் துர்நடவடிக்கைகளுக்கும் ஊற்றுக்கண்ணாகவும் உறைவிடமாக விவரித்தாலும், மற்ற துஷ்டர்களை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம், நேருவை முதலில் உண்டு இல்லை என்று ஆக்கி விடலாம் என்று தியாகராஜ சாஸ்த்ரிகள் சதா யோசித்தபடி இருப்பார்.

புதுசாக நேரு விரோதத் தகவல் ஏதும் ஒரு மாதத்துக்கு வராவிட்டால் அவரே விடிகாலை எழுந்து காலைக் கடன் முடித்து, குளிக்கக் கிளம்பும் முன்னால் மேற்கு நோக்கி உட்கார்ந்து நேருவும் கவர்னர் ஜெனரல் சம்சாரமும் சிநேகிதமாக இருந்தது, நேருவும் இன்னொரு பெண்பிள்ளையும் கை கோர்த்தபடி நடந்தது, வேறோடு பெண்ணோடு ஒரே சிகரெட்டை மாற்றி மாற்றிப் புகைவிட்டது என்று கிளர்ச்சி உண்டாக்கும் கதைகளை உண்டாக்கி விட்டு உடனே உடல் அசுத்தம் நீங்கக் குளித்து விடுவார். அந்த மாதிரி ஒரு ஐம்பது கதைகளைப் பரப்பி அதில் நான்கைந்து அவர் தேடி வாசிக்கும் புத்தகங்களில் கூட அச்சடித்து வந்ததில் தியாகராஜ சாஸ்திரிக்கு அலாதிப் பெருமை.

என்றாலும் இந்த ரசாபாசமான கதைகளை உற்பத்தி செய்ய நிறையப் பெண்களை அந்த மனுஷரோடு பந்தப்பட்டவர்களாகக் கொண்டு வந்து நிறுத்த வேண்டியிருந்தது. இந்தி சினிமா நடிகைகள் பெயர்களைத் தெரிந்து மனதில் இருத்திக் கொள்ள லைபிரரியில் அபூர்வமாகத் தட்டுப்படும் ஆங்கில சினிமா பத்திரிகைகளைக் கருத்தோடு படிக்க வேண்டி இருந்தது. தமிழ் சினிமா நடிகைகள் பற்றிக் கற்பனை செய்யலாம் தான். ஆனால் இவ்வளவு தேக புஷ்டியுள்ள பெண்கள் நேருவுக்குப் பிடித்திருக்கும் என்று தியாகராஜ சாஸ்திரிகளுக்குத் தோன்றவில்லை. என்னதான் கதை என்றாலும் கதாபாத்திரத்துக்கு உகந்தது இல்லாததை அதுவும் ரதிக் கேளிக்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் வலிந்து புகுத்துவது தவறாச்சே.

இப்படிக் கதாநாயகிகள் பற்றிய விவரம் சேகரிப்பது தவிர, இந்த மாதிரி கேளிக்கைக் கதைகளைக் கட்டியமைக்கும்போது ஏற்படும் கிளர்ச்சி எவ்வளவு நேரம் வென்னீரில் குளித்தாலும் மனதை விட்டுப் போக மாட்டேன் என்று அடம் பிடித்தது. பச்சைத் தண்ணீரில் குளித்தால் போய்விடும் என்று தோன்றினாலும், அது பீனிசத்திலும் ஒற்றைத் தலைவலியிலும் கொண்டு போய் விடும் அபாயத்துக்கு, கிளர்ச்சி எவ்வளவோ தேவலை. சைக்கிளில் போகும் போதும் திவச வீட்டில் நுழையும் போதும் அது மனதில் அண்டாமல் பாதுகாத்துக் கொள்ள பதிமூன்றாம் வாய்ப்பாடை முழுக்க மனதில் சொல்வதை அவர் சீலமாகக் கொண்டிருந்தார்.

சிருங்கார நேரு வேண்டாம் என்று வலுக்கட்டாயமாக மனதில் ஒதுக்கி வைத்துக் கொலைகாரனும் சதிகாரனுமான நேருவைக் கற்பிக்கக் கொஞ்சம் எளிதாக இருந்தது. காந்தியில் தொடங்கி, ஏன் அவருக்கு முன்பே கோபால கிருஷ்ண கோகலேயில் ஆரம்பித்து எத்தனையோ தேசியத் தலைவர்களை ஒழித்துக் கட்ட நேரு சதி செய்ததாக அவ்வப்போது புத்தகத்தில் வந்த தகவல் என்று எடுத்து விடுவது சமயத்தில் அபாயகரமாகக் குடை சாய்ந்ததும் உண்டு.

வினோபா பாவேயை நேரு கொன்றாரா, வினோபா இன்னும் இருக்காரே என்று கேட்டுப் பேய்முழி முழித்த டிஸ்ட்ரிக்ட் கோர்ட் அமீனா ஒருத்தனிடம் வாய்சாலகமாகச் சமாதானம் சொல்ல வேண்டிப் போனது –

இவ்வளவு சதி நடந்தாலும் அந்த மனுஷர் வினோபா சப்தரிஷி ஆசிர்வாதத்தால் பூர்ண ஆயுளோடு இன்னும் ஆரோக்கியமாக இருக்க, நேருக் கடன்காரனுக்கு பிஸ்டுலாவாமே, உமக்குத் தெரியுமோ?

ஸ்வாமி என் மூலக் கடுப்பே வேஷ்டியில் ரத்தமாகக் கசிந்து கஷ்டப்படுத்துகிறது. நேருவுக்கும் எலிசபெத் மகாராணி புருஷனுக்கும் வேறே தீத்தாராண்டிக்கும் எங்கே எது வந்தால் எனக்கென்ன உமக்கென்ன என்று அங்கலாய்த்தபடி அந்தாண்டை போனான் அந்த அமீனா. ஆனாலும், யார் பெயரையும் நேருவுக்கு எதிர் வரிசையில் நிறுத்த கொலைச் சதிக் கட்டமைப்பு பயன்பட்டது. கதைகளைக் காற்றில் தூவி விடும் தியாகராஜ சாஸ்திரிகள் அதற்கான உத்தியைப் பற்றி மூச்சு விடுவதில்லை.

அது கிடக்கட்டும். என்ன தான் நேருப் பைத்தியமாக இருந்தாலும் புரபசர் மருதையன் நல்ல மனுஷன். கைலாச பதவி அடைந்து ஒரு வருஷம் கழித்தும் அவர் தியாகராஜ சாஸ்திரிகளின் கண்ணைக் கட்டுகிற மாதிரி இன்னும் அரசூர்த் தெருவிலும் வீட்டிலும் தட்டுப் பட்டால் அவர் சாஸ்திரி மேல் வைத்திருக்கிற பேரன்பு புலனாகும். அப்படி வந்து அவர், இந்தப் பெண்ணுக்கு உதவி செய்யச் சொல்லி கேட்டுக் கொண்டபோது தியாகராஜ சாஸ்திரியால் தட்ட முடியவில்லை.

அவருக்கும் தியாகராஜனுக்கும் ஒரே ஒரு விஷயத்தில் ஒரே அபிப்ராயம் – செம்பு நீருக்குள் இருந்து நடத்துவதாகச் சொல்லப்படும் இந்த பஞ்சாபகேச சிரௌதிகளின் தினசரி கதைப் பிரசங்கம் தான் உண்டாக்கிய, நேருவும் யாரோ பெண்ணும் பங்கு பெறும் கதைகள் போல, அதைவிட நீளமாக முடியாமல் நீளும் விஷயம் என்று தியாகராஜ சாஸ்திரிகள் நினைப்பதுண்டு.

புரபசருக்கு அந்தக் கதையாடலைக் கூடச் சகித்துக் கொள்ள முடியும். சிஷ்ய கோடிகளின் பிரதாபங்கள் தான் அவரை எரிச்சல் படுத்தியவை.

நேபாளத்திலே இருந்து மகாராஜாவே பத்து வருஷம் முந்தி இங்கே நம்ம சிரௌதிகள் அண்ணாவைத் தேடி வந்துட்டா. ஆயிரத்தொண்ணு ஸ்வர்ண புஷ்பமும் ஐயாயிரம் ரஜத புஷ்பமும் காணிக்கை வச்சு, அண்ணா காலைப் பாலும் தேனும் ஊத்தி அலம்பி ரோஜாப்பூ க்ரீடம் வச்சு அவருக்கு கதாபிரசங்க சக்ரவர்த்தின்னு பட்டம் கொடுத்துட்டுத் தான் வேறே வேலை பார்க்க நகர்வேன்னு அவர் ஒரே பிடிவாதம் பிடிச்சார் பாருங்கோ அண்ணா பட்டம் எல்லாம் வேணாம்னுட்டார். பட்டம் கொடுத்தா கதை சொல்றதுலே சிக்கல் வந்து கதையோட பீமனும் கடோத்கஜனும் உள்ளே வந்துடலாம்னு அபிப்ராயப்பட்டார். அதுக்கு என்ன போச்சு, ரெண்டு கதையையும் ஜாயின் பண்ணிக்க ரெண்டு மூணு ஷண்டிங் பாயிண்ட் இருக்கேன்னு மகாராஜா கேட்டார். அதெல்லாம் ஆதிகவிக்கும் மத்தவங்களுக்கும் ப்ரீதி ஏற்படுத்தாத விஷயம்னுட்டார் ஸ்ரௌதிகள்.

இப்படி ஒரு பிரகிருதி எடுத்து விட, புரபசர் கடுப்பாகி அவனோடு மல்லுக்கட்டியதைச் சொன்னது தியாகராஜனுக்கு நினைவு வந்தது.

ஓய் நேபாள மகாராஜா வந்ததை நீர் பார்த்தீரா என்று புரபசர் அவன் வாய் நாற்றத்தையும் சகித்துக் கொண்டு சட்டையைப் பிடித்து உலுக்குகிற நெருக்கத்தில் நிற்க அந்த சோழப் பிரம்மஹத்தி ஸ்வரம் இறங்கி வளைத்து உருட்டி வார்த்தையால் ஜிலேபி பிழிந்தான் –

நேபாள மகாராஜான்னா மகாராஜா தானா? வடக்குலே இருந்து வர்ற முக்கியஸ்தர். மகாராஜாங்கறது ஒரு சீலம் தானே. வடக்குலே தெற்கை விட எல்லா சீலமும் கிரமமா அனுஷ்டிக்கறதாலே நேபாள மகாராஜாவே மரியாதை செய்யறவங்க யாரோ அவங்க மகாராஜாவுக்கு நேர் தானே.

மடியில் நாலு ஓட்டைக் காலணாவை முடிந்து கொண்டு வந்த யாராவது பேர்வழி கதையைச் சீக்கிரம் முடிக்கச் சொல்லி பட்டம் சூட்டுங்கய்யா என்று குரல் கொடுத்ததாகக் கேள்வி. அது தான் ஏகத்துக்குத் திரிந்து நேபாள மகாராஜா கதையாச்சு என்பார் புரபசர். அதுக்கு நமக்கென்ன நோப்பாளம் என்று நினைத்தபடி சுற்றுமுற்றும் பார்த்தார் தியாகராஜ சாஸ்திரிகள்.

நாலைந்து பித்தளைத் தாம்பாளங்களை ஒருசேர உயர்த்திப் பிடித்து செப்புக் கரண்டிகளால் தட்டி ஒலி எழுப்ப, நாளைக்கு நேரத்துக்கு வரணும் என்று சொல்லி சிஷ்யர்கள் சும்மா வேடிக்கை பார்க்க வந்த வெளியூர் டூரிஸ்டுகளை வெளியே அனுப்பினார்கள். குண்டுராயர் ஓட்டலில் ராச்சாப்பாடு நன்றாக இருக்கும் என்ற தகவலும் அவர்களிடம் சொல்லப்பட்டது. ஓட்டல் உரிமையாளார் அதற்காக மாதாமாதம் தனியாக ஒரு தொகையை உபகாணிக்கையாக அவர்களுக்குத் தருவது தர்ம காரியமாகத் தினசரிக் கதையில் சொல்லப்படுவதைத் தியாகராஜன் அறிவார்.

நொடி நேரம் பிரார்த்தனையில் இருந்த தெரிசா கண் திறந்து பார்க்க, சிஷ்யகோடிகளிடம் ஏதோ சொன்ன தியாகராஜன் வெளியே பார்த்து முசாபரையும் உள்ளே வரச்சொல்லிக் கைகாட்டினார்.

படமாக மாட்டியிருந்த தெய்வங்களோடு கடைசி வரிசையில் வைத்திருந்த நேரு, காந்தி படங்களை சிஷ்யை அகற்றி அவற்றை அரிசிக் காணிக்கைப் பானைக்குள் வைத்ததை சாஸ்திரிகள் திருப்தியோடு பார்த்தார்

தெரிசா பொதுவாக நோக்கிச் சொன்னாள் –

நான் என் குடும்ப வேர்களைத் தேடி அம்பலப்புழை போனேன். அங்கே அம்பலத்துலே மேல்சாந்தி உண்டு. அவரோட மனைவி என் கிட்டே இருந்த தகவல்களைப் பார்த்து, என்னை அரசூர் போ, இன்னும் நிறையத் தகவல் கிட்டும்னு சொன்னாங்க. அம்பலப்புழையிலே ஏதோ சர்க்கார் மகாநாடு நடக்கறதாம். மினிஸ்டர்கள் எல்லாம் வர்றதாலே அங்கே எதிரி நாட்டுக் காரங்க யாரும் தங்கக் கூடாதாம். இன்னும் ஒரு வாரத்துக்கு இங்கே வராதேன்னு எங்களைத் துரத்தி விட்டுட்டாங்க

சிஷ்யர் பட்டாளம் எல்லா விதமாகவும் பரிதாபத்தையும் பச்சாதாபத்தையும் வெளிப்படுத்த, தியாகராஜன் தெரிசாவைக் கேட்டார் –

நீங்க இங்கிலாந்திலே இருந்துதானே வர்றீங்க. அது எதிரி தேசம்ன்னு கோட்டுலே ரோஜாப்பூ செருகிண்ட கபோதி சொல்லிட்டானா என்ன?

ரோஜாப்பூ சூடியவர்களை எனக்குத் தெரியாது, போகச் சொன்னவர்களைத்தான் தெரியும். என் புருஷன் பாகிஸ்தானில் இருந்து குடியேறிய குடும்பத்தில் வந்தவன். அவன் ஒரு வேளை எதிரியாக இருக்கலாம்.

முசாபர் மேலே பெரிதாக வழிந்த ஜிப்பாவில் கை விட்டு ஒரு பத்து பவுண்ட் கரன்சி நோட்டை எடுத்துக் காணிக்கை வட்டிலில் வைத்துக் குனிந்து சலாம் செய்தான்.

என் தரப்பில் இருந்து இந்தச் சிறு காணிக்கையை எடுத்துக் கொள்ளுங்கள்.

அவன் நேர்த்தியான ஆங்கிலத்தில் சொன்னதை அங்கே எல்லோரும் பிரியத்தோடு அங்கீகரித்தார்கள். மற்ற எல்லாவற்றையும் விட இந்த மிலேச்ச பாஷை இங்கே சகலரையும் சேர்த்து வைக்க வல்லமை படைத்தது என்று மனதில் தோன்றியதை வலுக்கட்டாயமாகச் சொல்லாமல் மறைத்துப் புன்னகை பூத்தான் முசாபர். அவனுடைய அத்தர் வாசம் எங்கும் நிறைந்தது.

உள்ளே இருந்து வந்த ஒரு சிஷ்யன் ஏதோ புத்தகத்தின் பிரதிகளை தெரிசாவிடமும் முசாபரிடமும் கொடுத்தான்.

கும்பளங்காய் மகாத்மியம்னு உன்னத நூல. சிரௌதிகள் எழுதியதை அமெரிக்காவிலே ஒரு ப்ரபசர் இங்கிலீஷ் பண்ணினது.

அவன் விளக்க, தியாகராஜன், அந்தப் புத்தகம் இருநூறு வருஷம் முந்தி எழுதின நகைச்சுவைப் பாட்டு ஆச்சே. சிரௌதிகள் எங்கே இதிலே வந்தார் என்று விசாரித்தார்.

பழைய புத்தகமாகவே இருக்கட்டும். அண்ணா அதை ஏடு தேடி எடுத்துச் செப்பம் பண்ணி புஸ்தகமாக்கினதாலே அது அவர் எழுதியது தான்

அந்த சிஷ்யன் மூக்கு விடைக்கச் சொல்லி தியாகராஜனைத் துச்சமாகப் பார்த்தான். இந்த மனுஷன் இங்கே ஏன் வந்து எழவு கூட்டுகிறான் என்று அதற்கு அர்த்தம் என்று தியாகராஜனுக்குத் தெரியும்.

மேல்சாந்தி மகாராஜா இங்கே வந்து ச்ரொதிகளை மரியாதை செஞ்சுட்டுப் போனதாக பெரியவங்க சொல்லி இருக்காங்க.

சிஷ்யன் தன்னை முக்கியமானவனாகக் காட்டிக் கொள்ளும் ஆவலில் கைகட்டிக் கம்பீரமாக நிற்க முயற்சி செய்தபடி சொல்ல, தியாகராஜன் எகிறினார் –

ஓய், மேல்சாந்தி ஒரு புரோகிதர். அம்புட்டுத்தான். மகாராஜா எல்லாம் இல்லை. அம்பலப்புழை ஒரு காலத்திலே செம்பகச்சேரி மகாராஜா ஆட்சியிலே இருந்தது. அது அப்புறம் திருவாங்கூர் மகாராஜா கிட்டே போனது

சொன்ன வரைக்கும் தப்பு எதுவும் இல்லை என்று தியாகராஜ சாஸ்திரிக்குத் தெரியும். அந்த நேருவுக்கு ப்ரீதியான ஒரு வரலாற்று ஆசிரியன் எழுதியது தான் அவருக்குப் படிக்கக் கிடைத்திருந்தது. போகிறது, நம்பித்தான் ஆகணும்.

அப்படி இல்லை.

சிஷ்யை வீணை வாசிக்க உட்கார்ந்தது போல் பாய் போட்டு சபை நிறைந்து அமர்ந்திருந்தாள். அவள் பார்வைக்கு ரொம்ப அழகாக இருந்தாள். இப்படியான பெண்கள் பெரிய குடும்பத்தை நிர்வாகம் செய்கிறவர்களாக, கலெக்டர் போன்ற பெரும் பதவிகளில் மலேரியா ஒழிக்கும் தீவிரத்தோடு ஜீப்பில் சதா பயணப்படுகிறவர்களாக இருப்பார்கள் என்று இங்கே படிக்கக் கிடைத்த பத்திரிகைச் செய்திகளிலும், இந்த இரண்டு மாதத்தில் நாலு மலையாள, இந்தி சினிமாக்களிலும் பார்க்கக் கிடைத்ததன் அடிப்படையிலும் முசாபர் நினைத்தான், மின்சார விசிறி கூட இல்லாத கட்டடத்தில் அந்தப் பெண் வியர்ப்பின் சுவடே
இல்லாமல் இருந்ததை அவன் கவனிக்கத் தவறவில்லை.

மேல்சாந்தி உலக ஷேமத்துக்காக, சாந்தியும் சந்துஷ்டியும் நிலவப் பகவானை அனுதினம் பிரார்த்திக்கிற சாது ஜீவன். மகாராஜா செய்ய வேண்டிய இந்தக் கடமைகளை அவர் நிறைவேற்றுவதால் ராஜா போல தான். அதுக்கும் மேல்.

அவள் வேற்று மொழியில் பாட்டு மாதிரிச் சொல்லி நிறுத்தாமல் போய்க் கொண்டிருக்க, தியாகராஜ சாஸ்திரி வெளியே நடந்தார். தெரிசா அந்தப் பெண் நிறுத்தும் வரை காத்திருந்து பொதுவாக நமஸ்காரம் சொல்லி வெளியே வந்தாள்.

உன் வம்சம் பற்றி இந்தக் குடும்ப மரங்கள் சொல்வதை விட நிறைய உண்டு. சோழிகள் அதில் கொஞ்சம் தான் சொல்லும். அரசூரில் கதாபிரசங்கக் காரருக்கு ஒருவேளை அதற்கு மேலேயும் தெரிந்திருக்கலாம்.

சோழி உருட்டிப் பார்த்த மேல்சாந்தி மனைவி இப்படிச் சொல்லி, அவளை பஞ்சாபகேச சிரௌதிகளிடம் விசாரிக்கச் சொல்லி இருந்தாள், அவள் நாசுக்காகக் குறிப்பிட்ட, நான்கு தலைமுறைக்கு முந்தி ஆவி போகம் அனுபவித்த அரசூர்க்காரனைப் பற்றிய செய்தி எதையும் செம்புத் தண்ணீர்க் குரலும், சிஷ்யகோடிகளும், இல்லாத வீணை வாசிக்கும் சிஷ்யையும் தருவார்கள் என்று தெரிசாவுக்குத் தோன்றவில்லை.

சைக்கிள் ஓட்டி விழுந்து எழுந்து வந்த சிநேகிதமான புரோகிதர் மூலம் ஏதும் கிடைக்குமானால் சரி, இல்லாவிட்டால் வந்த படிக்கு ஊரைப் பார்த்து விட்டு மதுரைக்குப் போவாள் தெரிசா.

அரசூர் மட்டுமில்லை, இந்தப் பூமி முழுவதுமே அவளோடு சம்பந்தப்பட்டது தான்.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன