New Bio-fiction தியூப்ளே வீதி – அத்தியாயம் 28 இரா.முருகன்


கண் விழித்தபோது வெளியே குளிரக் குளிர மழை பெய்து கொண்டிருந்தது. ஒருக்களித்துத் திறந்து கொண்ட மேல் ஜன்னல் வழியே சின்னச் சரங்களாகச் சாரல் உள்ளே மிதந்து வந்து நனைத்தது,. தலை தொடங்கிக் கால் விரல் நுனி வரை தகித்து வெப்ப அலையுயர்த்தும் உடல் சூட்டைப் பகிர்ந்து கொண்டு நெருங்கிப் படுத்திருந்தாள் அமேலி. அவளை மேலும் இறுக அணைத்து நான் திரும்ப உறங்க முற்பட, அவள் குரல் மெதுவாகக் காதில் படிந்தது.

’கண்ணு, நீ ஹால்லே போய் படுத்துக்க’. அமேலி எழுந்து படுக்கையில் அமர்ந்து என்னிடம் சொன்னாள்.

’நீயும் வா மழைக்கு இதமா இருக்கும் அங்கே’ என்றபடி அவளை அருகே இழுத்தேன்.

’வேணாம்’யா .. இது .. வந்துடுச்சு போலே இருக்கு’.

எது என்று கேட்பதற்குள் அவள் விலக்கானதைக் காதில் சொல்லிவிட்டு கைப்பையை எடுத்துக் கொண்டு உள்ளே போனாள். .

அந்த விடிகாலை நேரத்தில் அம்மா நினைவில் வந்தாள். சமையலறையில் நான் காப்பி கலப்பதை, கூடத்துக்கு ஓரமாக இருந்து வழி நடத்திக் கொடுக்கவும், தூக்குப் பாத்திரமும் சின்ன பாசிமணி பர்ஸில் இரண்டு ரூபாயுமாக சங்கீதா மெஸ்ஸில் இட்லி வாங்கிவர அனுப்பவும், பழைய பத்திரிகைத் தொடர்கதை பைண்ட் புத்தகத்தை எடுத்துத் தரச் சொல்லிக் கேட்டும் அந்த மூன்று தினங்களில் அடிக்கடி குரல் கொடுத்தபடி இருப்பாள் அம்மா. நான் மனசே இல்லாமல் இயங்க, பின்னாலேயே பிரியமான கெஞ்சலாக நிற்பாள் அவள். அம்மா. வீட்டுக்கு விலக்காக உட்கார்ந்த போதெல்லாம் ரெட்டைத் தெரு வீட்டில் சின்னப் பையனாக எவ்வளவு நடந்தேன். பத்து வயதில், இன்னும் நடந்தபடி நான் ரெட்டைத் தெருவிலேயே இருந்திருக்கலாம்.

’அம்பி, ஏண்டா இப்படி பண்றே. நான் வளர்த்தது சரி இல்லையா? அப்பா பாவமோன்னோ. இப்படி இழுத்துப் பிச்சுண்டு வந்திருக்கியே, தப்பு இல்லியா? அந்தப் பொண்ணும் பாவம். உன்னை மாதிரி அவளும் எனக்குக் குழந்தை தான். தெற்று செய்யாதே. கேட்டியா. வேணாம்’..

அம்மாவின் குரல் உயர்ந்து தேய்ந்தது. நான் சுற்றிலுலும் தேட இருட்டும் ஒளியும் சேர்ந்து மழையோடு உள்ளே படிய வழி செய்து கொடுத்தபடி முழு ஜன்னலும் ஒரு வினாடி திறந்து காற்றில் அடித்துக் கொண்ட ஒலி. ஜன்னல் திரும்ப மூடி அடைத்துக் கொண்டபோது, என் அருகே வந்து அமர்ந்தபடிக்கு, அமேலி அழத் தொடங்கி இருந்தாள்.

’நாம ரெண்டு பேரும் செய்யறது தப்பு…இனியும் வேணாமே’.

மடித்த முழங்காலின் மேல் தலையணையைப் பரத்தி வைத்துக் கையூன்றி முகத்தை தாங்கியபடி குலுங்கிக் குலுங்கி அழுதாள் அமேலி.

’நான் உடம்பு பசி எடுத்து அலையறவ.. அப்படித்தானே நினைக்கறே’?

’இல்லே அமேலி. நான் தான் நீ தனிச்சு இருக்கறதையும் என் மேலே உனக்கு இருக்கப்பட்ட பிரியத்தையும் தப்பா பயன்படுத்திட்டேன்’..

இதை நேற்று நான் விசாலியிடம் சொல்லியிருக்க வேண்டும். அவள் என் கன்னத்தில் ஓங்கி அடித்துக் காலால் உதைக்க, எதிர்ப்பில்லாமல் வாங்கிக் கொண்டு தண்டனை கிடைத்த திருப்தியோடு வெளியேறி இருக்க வேண்டும். நேற்று விசாலி குரலை ஆகக் குறைவாகத் தாழ்த்தி, நான் வெளியே போகும் வரை என்னைப் பார்ப்பதைத் தவிர்த்து, த்ரையில் கண் பதித்து நின்றாள். நினைவில் திரும்ப வருகிறது அது.

’உனக்கும் இதெல்லாம் புதுசுன்னு எனக்கு நல்லாத் தெரியும் அமேலி. தப்பு தான்.. இந்தப் பாதையிலே இனியும் நாம் போக வேணாம்’. அமேலியின் கைகளை என் கரங்களில் ஏந்திக் கொண்டு சொன்னேன். .

சொல்லும்போதே மனது, ’மற்ற் இருள் பாதைகள் உண்டு.. சுகம் தேடிச் சேர்ந்து போக அழைத்தால் வருவாள்.. கூட்டிப் போ’ என்று காமம் வழித்துப் பூசி என்னைக் களியாக்கியதை பிடிவாதமாக ஒதுக்கினேன்.

’இனிமேல் தப்பு நடக்காது அமேலி. நான் பொறுப்பு’..

அவள் தலையில் ஆதரவாகத் தடவி முத்தமிட்டேன். என் கையை இறுகப் பற்றி, புறங்கையில் உதடு பதித்து வெகுநேரம் அமர்ந்திருந்தாள் அமேலி. நீர்த் தாரைகளின் சத்தம் வலுத்து வெளியே அடர்ந்து பெய்யும் மழை மௌனத்தை அழகு படுத்திக் கொண்டிருந்தது. உடைகளை உடுத்துக் கொண்டபோது இடியொன்று முழங்கி எங்களை அதட்டியது.

’தெற்று இனி செய்யாதேப்பா.. நீயும் இவளும். படிச்சு மேலே வரணும்’.

சின்ன ஓலைக் கொட்டானில் ஏலக்காயும், கிராம்பும், அசோகா பாக்கும், கோடாப்ரின் தலைவலி மாத்திரையும் கிடக்க, நடுவில் இருந்து அம்மா குரல் மறுபடி ஒலிக்கிறது. கொட்டானை எங்கே கை மறதியாக வைத்தேன்? மனம் தேடிக் கொண்டிருக்க, அமேலி இறங்கிப் போனாள்..

’ரொட்டி பாக்கெட் ரெண்டு நாள் முந்தியே காலாவதி ஆச்சு. பரவாயில்லே சாப்பிட்டுடலாம்’. அமேலி குரல் கிச்சனில் கேட்டது.

அமேலி வேண்டாம் என்று தூக்கிப் போட்டிருந்தாலும் பொறுக்கி எடுத்து வந்திருப்பேன். இன்றிலிருந்து கையில் காசு இல்லாத பிழைப்பு.

பேச எதுவுமில்லை என்பதாக மழையைக் காது கொடுத்துக் கேட்டபடி பிரட் ஆம்லெட் தின்று கொண்டிருக்க, அமேலி சொன்னாள் – ‘கர்னல் அங்கிள் இன்னிக்கு திரும்பறதா சொல்லியிருக்கார்’யா. அதனாலே’.

‘நான் வெளியே பாத்துக்கறேன்’. உடனடியாகச் சொன்னேன். அமேலியை தீர்க்கமாகப் பார்த்தேன். மனதில் ஏறி ஆடிக் கொண்டிருந்த மிருகம் கூக்குரல் இட்டது – திமிர்த்துத் திரண்டு நகக் கண்ணும் மின்னும் இந்த அழகு உடல் இனி எப்போது எனக்கு மறுபடி வசப்படும்?

’நாளைக்கு காலேஜ் திறக்குது.. கீப் இன் மைண்ட்… அரியர்ஸ் க்ளியா செய்யணும் அதான் இனிமேல் முக்கியமான வேலை.

அவள் சிரித்தாள். படிப்பு முடிப்பதைத் தவிர இப்போது வேறே என்ன நினைப்பு மனசில் இருக்கணும்? பட்ட மேல் வகுப்பு போக வேண்டாமா அடுத்து? எப்படிப் போக? பணம்? கவலைப் பட இன்னும் நேரம் உண்டு.

’போன வருஷமே மெடிக்கல் காலேஜ் டிரை பண்ணினேன். டாடி அதுக்கு மட்டும் பேங்க்லே கொஞ்சம் சேர்த்து வச்சிருக்கார். மத்தபடி பிரான்ஸ்லே இருந்தாலும், மிலிட்டரி பென்ஷன்லே வாயைக் கட்டி வயத்தைக் கட்டித்தான் வாழ்க்கை அங்கேயும். அவர் காசோட அருமை தெரிஞ்சு நான் இன்னும் பொறுப்பா நடந்திருக்கணும்..தப்பு செஞ்சாச்சு’.

எதுவும் பேசாமல் எச்சில் கையை நக்கியபடி வாய் பார்த்துக் கொண்டிருந்தேன். என்ன சொல்ல முடியும்? நான் உன்னை டாக்டர் ஆக்கறேன் என்றா? உங்க அப்பா பாரீஸிலோ நைஸிலோ சகல சௌகரியங்களோடும் மிச்ச் ஆயுளைக் கழிக்க நான் ஏற்பாடு செய்யறேன் என்றா? வாக்குத் தத்தம் கொடுக்க காசுக் கடவுளா நான்?

’நீ என்ன பண்ணப் போறே? சொல்றேன்னு கோவிச்சுக்காதே.. வரட்டு பிடிவாதம் வேணாம்.. வீட்டுக்குப் போயிடு. அதான் நல்லது’

முடியாது என்றேன்.

’நீ போகாட்ட, நான் அங்கே போய் எல்லாத்துக்கும் மன்னிப்பு கேக்கறேன். ஜோசபினை, கயலை, சாந்தி ருழேயை கூட்டிப் போறேன்’. அமேலி சீரியஸாகச் சொன்னாள்.
.
’யாரும் எங்கேயும் போக வேணாம். என் பிரச்சனை, நான் பாத்துக்கறேன்’.

குளித்து விட்டு வந்தேன். எடுத்து வந்த சலவைத் துணி எங்கே? ஹாஸ்டலில் விட்டு விட்டு வந்திருக்கிறேன் போல. நேற்று ப்ரான்ஸ்வா வீட்டில் துவைத்து உலர்த்தியது? காணோம். கேரியரில் இருந்து விழுந்திருக்குமோ. போகட்டும். பழைய துணிதான் அது.

விழுத்துப் போட்ட துணியைத் திரும்ப எடுத்து உடுத்திக் கொண்டு, ஹாஸ்டலுக்குப் போக சைக்கிளில் ஏறினேன். நாளை காலேஜுக்கு உடுத்துப் போக ஹாஸ்டலில் விட்ட சலவைத்துணி கட்டாயம் வேண்டும். மனது தறிகெட்டு சஞ்சரிக்க வண்டி தன் போக்கில் ஓடியது.

மறந்து விட்டால் எல்லா பிரச்சனையும் தீர்ந்த மாதிரி. மாத்திரை வேணும் அதுக்கு. எல்லாம் சரி, கையில் காசு?

சட்டென்று புத்தியில் உறைத்தது. ஓட்டிக் கொண்டே என் ராலே சைக்கிளைப் பார்த்தேன். உன்னைப் பிரிய வேண்டிய நேரம் இது.

ஹேண்டில் பாரில் தோழனாக வைத்துப் பிடித்திருந்த கைகள் சற்றே நடுங்கின. வீடும், பெற்ற தகப்பனும், உற்ற சிநேகிதிகளும் என்னை விட்டு அகன்று போன பிறகு இந்த இரும்புச் சக்கர வண்டி மட்டுமா ஆயுள் முடியும் வரை என்னோடு ஒட்டிக்கொண்டு, தர்மபுத்திரனை மகாபாரத முடிவில் தொடர்ந்த் நாய்க்குட்டி போலக் கூடவே வரும்?

மனம் ’வேண்டாம், சைக்கிளைக் கொடுக்காதே’ என்றது. அமேலியை, கயலை, ஜோசபினை அணைத்துக் கூட்டிப் போன சைக்கிள் இது.

இருக்கட்டும். ஆசை காட்டிய நினைவுகளைத் தள்ளி விட்டு சைக்கிளில் இருந்து இறங்கினேன். பளபளவென்று ஏற்கனவே இருந்த வண்டியை கைக்குட்டை கொண்டு மேலும் சுத்தமாகத் துடைத்து நிறுத்தினேன்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் தட்டாஞ்சாவடி மாரிமுத்து என்ற மீன் வியாபரிக்கு என் ராலே கை மாறியது. மீன் வாசம் அடிக்க அவரிடம் இருந்து ஐந்து ரூபாய் மற்றும் பத்து ரூபாய் நோட்டாக முப்பத்துரெண்டு ரூபாய் பெற்றுக் கொண்டேன். கண்ணில் இருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்து கன்னத்தை நனைக்க, துடைக்கக் கூடக் கை வராமல் கால் போன போக்கில் நடந்தது கடற்கரைக்கு.

கவர்னர் மாளிகை முன்னால் பாதுகாப்புக்காக அணிவகுத்த வீரர்கள் குழு ஓய்வெடுக்கப் போக இன்னொன்று பொறுப்பை ஏற்றெடுப்பதைப் பார்க்க ராஜ்பவன் தெருமுனையில் டூரிஸ்ட்கள் கூடியிருந்தார்கள். சில நிமிடங்கள் முன்பு தான் அந்த சேஞ்ஜ் ஆஃப் கார்ட் நிகழ்ச்சி முடிந்திருக்கும் போல. அவர்கள் கலையத் தொடங்கியிருந்தார்கள்.

சின்ன வய்சில் நான் போட்டிருந்தது போல் நீலச் சட்டையும், வெள்ளை டிரவுசரும், ஒட்ட வெட்டிய தலைமுடியும், வேற்றுக் கிரக வாசி போல நீட்டிக் கொண்டிருக்கும் காதுகளுமாக ஒரு சின்னப் பையன். ஐந்து அல்லது ஆறு வயது இருக்கும். உயரமாக, ட்வீட் பேண்டும், முழுக்கை பருத்திச் சட்டையும் தரித்த, நடுவயது மெல்லக் கவியத் தொடங்கும் அப்பாவின் கையைப் பிடித்தபடி அவன் நிற்க, அப்பா சொல்கிறார் –

’மணக்குளத்து வள்ளல் பாரதி பாட்டு சொல்லு பார்க்கலாம்’.

’வாழ்க புதுவை மணக்குளத்து வள்ளல் பாத மணிமலரே’. விருத்தம் முழுவதையும் பிழை இல்லாமல் சொல்கிறான் அந்தப் பையன்.

அப்பா அந்தச் சிறுவனின் தலையில் கையளைந்து அன்போடு கேட்கிறார் – ’மணக்குளத்துக் வள்ளல்ன்னா?’

’மணக்குள விநாயகர்’, பையன் துடிப்பாகச் சொல்கிறான்.

’அடுத்து அவரைத்தானே பார்க்கப் போறோம்’.

பையன் அப்பாவை சந்தோஷமாகக் கட்டிக் கொள்கிறான்.

கண் நிறைந்து போக அங்கேயே நின்றேன். அந்தப் பையன் நான் தான். அது என் அப்பா. இந்தக் காட்சி பதினைந்து வருடம் முன் இங்கே அரங்கேறியது. பாசம் மிகுந்த தந்தையும், எல்லா நியதிகளையும் எப்போதும் கடைப்பிடித்து எல்லோருக்கும் என்றைக்கும் நல்லவனாக, ஆசை கடந்த, காமம் வென்ற, உண்மையே பேசி, சத்தியத்தில் மனதை இருத்தி அறிவு தெளிவுற்று உடல் ஒளிர்ந்து பிழம்பாக நகரும் மகனுமாக நல்ல உறவுகள் இங்கே வழிவழியாகத் தொடரட்டும். எனக்கு அது இல்லை. மோகம் வளர்த்தேன். போகம் தேடி அலைந்தேன். தேகம் கலந்து சுகித்தேன். காமம் உயிர்த்தோங்கி என்னை இரை கொள்ளட்டும்.

வந்த வழியே திரும்பி நடந்தேன். அங்கே .கண்டிருந்த, கேட்டிருந்த, அனுபவித்ததெல்லாம் இனியும் திரும்பி வரப் போவதில்லை. ஜோசபின், கயல், நீங்கள் அங்கே தான் இன்னும் நிற்கிறீர்களா?

மணி அடிக்காமல் ஜாக்கிரதையாக வளைத்துத் திருப்பி என் பாதைக்குக் குறுக்கே ஒரு சைக்கிள் வந்து நின்றது. மண்ணில் பதிந்த பார்வையை மிகச் சற்றே மேலே நகர்த்திப் பார்த்தேன். இந்த சைக்கிள் சக்கரத்தின் ஒவ்வொரு ஆரமும் எனக்குப் பிரியமானது. இந்த மணி நாதம் என் கனவுகளில் எதிரொலிப்பது என் ஜோசபின் ஓட்டி வரும் பூத்தேர் இது.

ஜோஸ்ஸி, ஜோஸ்ஸி.. ஜோஸ்ஸி..ஜோஸ்ஸி.. ஜோஸ்ஸி..ஜோசபின்..

நடுத்தெரு, நாலு பேர் இருக்கிறார்கள், நாற்பது பேர் நடக்கிறார்கள். அதில் பத்து பேர் நின்று நோக்குகிறார்கள். பிரக்ஞை எதுவும் இன்றி நான் ஜோசபினை இழுத்து அணைக்க, சாய்ந்த சைக்கிளை லாகவமாக விலக்கி என் ஜோசபின் புன்னகையோடு தோளில் மெல்லத் தட்டினாள்.

கேரியரில் பட்டுப் பைக்குள் வைத்த பைபிள் பிரதியும், தோளில் போர்த்திய மெல்லிய கருப்பு சால்வையுமாக ஜோசபின் பிரார்த்தனைக்குப் போய்க் கொண்டிருக்கிறாள். ஞாயிறு மாலையில் ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அவள் மறக்காமல் சொல்வது – உனக்காக, நீ நல்லா படிச்சு நல்லா வந்து மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் செல்வமும் மனநிறைவுமாக குடும்பம் நடத்தணும்னு வேண்டிக்கிட்டேண்டா. ஒரு பிள்ளை, ஒரு பொண்ணு..அழகான ஒய்ப்…

’அதுக்கு முந்தி நாம ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சுக்கணும்னு வேண்டிக்கிட்டியா? ஒரு பொண்ணு உன்னைப் போல, பிறகு பிள்ளை..’

’விளையாடாதேடா. நான் மனசிலே இருந்து பேசிட்டு இருக்கேன்,, நீ’.

’நான் மட்டும் என்ன பம்பரம் விளையாடிக்கிட்டா சொல்றேன்? இங்கேயும் அதை விட சீரியஸ்தான்’ என்று அவளைச் சீண்டுவேன்.

எத்தனை ஞாயிற்றுக்கிழமை இதற்கு அப்புறம் ஜோசபினை முத்தமிட முயன்று அவள் மெல்ல விலகியது? எத்தனை தடவை முத்தமிட்டது!

’என்னடா ஒண்ணுமே பேசாம வந்துட்டிருக்கே என்ன ஆச்சு உனக்கு?’

ஜோசபின் சைக்கிளை உருட்டியபடி என்னைப் பார்த்தாள்.. சட்டென்று நின்று, உன் சைக்கிள் எங்கேடா என்றாள்.

நான் பாக்கெட்டிலிருந்து க்சங்கலாக முப்பத்து ரெண்டு ரூபாயை எடுத்துக் காட்டினேன்.

’ஜேசப்பா என்னடா ஆச்சு உனக்கு?.உடம்புக்கு கேடா, மனசுக்கா, ரெண்டுமா?’

‘ஒண்ணுமில்லே ஜோஸ்.. ஐ யாம் ஆல்ரைட்’

‘ஆல்ரைட்னா ஏண்டா இப்படி.. உனக்கு என்னமோ ஆகியிருக்கு.. என்கிட்டே சொல்ல மாட்டியா?’ ஜோசபின் தொடர்ந்து மெல்லிய குரலில் அரற்றியபடி வந்தாள்.

‘சொன்னேனே, ஒண்ணும் இல்லே.’ நான் எங்கோ பார்த்தபடி சொன்னேன். இவள் கண்ணைப் பார்த்தால் நான் கரைந்து விடுவேன்.

ஆள் அரவம் இல்லாத முடுக்குச் சந்தில் திரும்பும் தெருக் கோடியில் பூட்டிய வீட்டு முன்பாக சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினாள். சரக்கொன்றை மலர்கள் பூத்த வாசல். பூக்களை மிதிக்காமல் நின்றேன்.

’உனக்கு ரொம்ப மனசு பாதிச்சு இருக்குன்னு விசாலி காலையிலே சொன்னா.. நேத்திக்கு நீ வந்தியாமே.. ’

‘உன்னைப் பார்த்து ஹலோ சொல்லத்தான்..’ நான் சொல்ல, அவள் என் காதில் கிசுகிசுப்பாகச் சொன்னாள் –

‘ராஜா, எனக்கு எல்லாம் தெரியும்டா.. நீ பூ மாதிரி.. கோபப்பட்டு பர்ர்த்தா கூட குழைஞ்சு விழுந்துடுவே. அவ்வளவு மென்மை.. உன் மேலே உசிரையே வச்சிருக்கேண்டா பைத்தியக்காரா.. நீ எப்படிடா ..அதுவும் நம்ம விசாலி கிட்டே’.

’தெரியலே ஜோஸ்ஸி…மனசுலே இன்னொருத்தன் இருக்கான் மனுஷன் இல்லே.. மிருகம் எப்படியோ என்னைப் பிடிச்சுடுத்து என்னைத் தின்னாம போகாது அது.. முடியும்னா எனக்காக ப்ரே பண்ணு ஓகே?’

உனக்காக பிரார்த்தனை செஞ்சு, மாஸ் முடிஞ்சதும்.. வீட்டுக்கே வந்து உன்னை பார்க்கணும்னு. தான் புறப்பட்டேன்.. என்னடா கோலம் இது?.’

குரல் கரகரத்துத் தேய்ந்து வாய் மட்டும் அசைந்து தோற்க, அவள் இரு கரங்களையும் கொண்டு என் முகத்தின் முன் தீபம் சுற்றுவது போல் நடுக்கத்தோடு சுழற்றி, இது சரியில்லை எனத் தலை குலுக்கி நின்றாள்.

அவளுடைய சூடான கண்ணீர்த் துளி என் புறங்கையில் விழுந்து என்னை நிலை குலைத்துத் தள்ளியது. அணை உடைந்தது அப்புறம்.

அப்பாவிடம் கூட அழவில்லை. இவள் பேசப்பேச நான் கேவி அழலானேன். இடைவிடா சகாய மாதாவாக, சகோதரியாக, தோழியாக, மனைவியாக உறவெலாம் சேர்ந்து உருவெடுத்து என்னுயிர் ஜோசபின் வந்திருக்கிறாள். அழுது அழுது அவள் மன்னிப்பை நாடித் தொழுது இளைப்பாறலாம். இயன்றால் கடைத்தேறலாம். எனக்கு உண்டோ அது.

அவள் தோளில் தலை வைத்து அழுதபடி வெளிச் சுவரில் சாய்ந்து நின்றேன். ஏதோ வெறியில், அந்தக் கருங்கல்லில் தலையை மோதி உடைத்து வாதனை தீர்ந்து விலகிப் புறப்பட அவ்சரம் காட்டினேன்.

ஜோசபின் வலுவாகக் கைநீட்டி என்னைப் பிடித்து நிறுத்தினாள். ’நான் இருக்கேன் உன்னை எந்தப் பாம்பும் பிடிக்க விடமாட்டேன் சாப்பிட்டியாடா? ஏன் தலை சீவலே? டிரஸ் எல்லாம் ஏன் கசங்கி இருக்கு? என் ராஜா இல்லே.. அழாதே.. என்னடா ஆச்சு என் செல்லம்’?

ஜோசபின் சொல்லச் சொல்லப் பேச முடியாமல், அழுகையை அடக்கப் பார்த்துத் தோற்று விசும்பியபடி உடல் நடுங்க நின்றேன்.

’வேணாம் கண்ணப்பா எல்லாரும் பார்க்கறாங்க. நம்ம இடத்துக்குப் போயிடலாம். வா, பின் சீட்லே ஏறிக்க’..

சுங்கச் சாவடிக்குப் பின்னால் அடைத்த கதவுகள் மௌனம் காக்கும் ஆள் வராத கடல்புரம். . பிரார்த்தனை நேரத்தில் தரையில் பரத்தி மண்டியிடச் சுருட்டி எடுத்து வந்திருந்த சின்னஞ்சிறு பத்தமடைப் பாயை விரித்து உட்காருடா என்றாள் ஜோசபின். நான் அவளுக்கும் இடம் விட்டு அமர, என் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள்.

கடவுளே என்னடா இது..காய்ச்சல் போலே இருக்கே’.

சட்டென்று கைப்பையில் இருந்து பாரசெடமால் குளிகை எடுத்துக் கொடுத்தாள். ’இரு வரேன், அப்படியே முழுங்க ட்ரை பண்ணாதே’

சைக்கிள் காதில் மாட்டியிருந்த சிறிய பிளாஸ்கை எடுத்து வந்தாள்.

’போன வாரம் பிரான்ஸ்லே இருந்து என் சிநேகிதி வந்தா.. எனக்கு அவ பரிசா கொடுத்தது.. காலேஜ் திறக்கற நேரம் உனக்குத் தரலாம்னு எடுத்து வந்தேன். இப்படி உன்னைப் பார்ப்பேன்னு தெரியாது’,

நான் யந்திரமாக மாத்திரை விழுங்கினேன்.

’ஜோசபின் நீ பிரார்த்தனைக்கு போய்ட்டு வா. நான் இங்கேயே இருக்கேன். எங்கேயும் போகல்லே. போக வேறே இடம் இல்லை’.

அதற்கு மேல் பேச முடியவில்லை. கண்ணில் திரையிட்டு மறைத்த நீர்ப் பரப்புக்கு அப்பால் நெகிழ்ந்து அசையும் பிம்பமாக ஜோசபின். நின்றாள். என்னை அன்போடு தோளில் சார்த்திக் கொண்டாள் அவள்.

’அடுத்த ஞாயிறு மாஸ் போகலாம். ஜேசப்பா எல்லாம் புரிஞ்சுப்பார்… சொல்லு ராஜா. என்னம்மாடி ஆச்சு என் கன்னுக்குட்டிக்கு’?

அவள் தாடையைத் தாங்கி வருட், தயங்கித் தயங்கி எல்லாம் சொல்லி முடித்தேன். அமேலி, அப்பா, விசாலி எல்லாம் எல்லாம் சொன்னேன்.

நடுவில் ஒரு வார்த்தை பேசாது, பார்வையாலோ உடல் அசைவாலோ கூடக் குறுக்கிடாது முழுக்கக் கேட்டுக் கொண்டிருந்தாள் ஜோசபின்.

நான் சொல்லி முடித்து திரும்ப மௌனமானேன். ஜோசபின் முகத்தில் இருந்து தற்காலிகமாக விலகிப் போயிருந்த சிரிப்பு திரும்ப வந்திருந்தது. ஆனால் அதில் ஒரு துளி விரக்தி ஒட்டியிருந்தது.

’அப்புறம்’? அவள் என்னை அந்தச் சிரிப்போடு பார்த்துக் கேட்டாள்

’அவ்வளவுதான். போதாதா?’ அவள் கைகளைப் பார்த்தபடி இருந்தேன்.

’போதும் போதாது நீதான் சொல்லணும் ராஜா. பாம்பு ஏணி ஆட்டத்துலே மறுபடி முதல் கட்டத்துக்கு வந்திருக்கே.. வாழ்த்துகள்’. என் தோளை உலுக்கிச் சிரித்தாள் ஜோசபின்.

’மேலே வரமுடியாது இனிமேல்..தெரியும்’என்று சொல்ல நினைத்தேன்.

’போன முறை ரெண்டு பேரும் தப்பிச்சீங்க. இப்போ எல்லா சிகரமும் பாதாளமும் கடந்தாச்சு.. ஒரு ராத்திரி இல்லே ரெண்டு.. சரியா தப்பா?’

ஒன்றும் பேசவில்லை.

’அந்த நல்ல மனுஷரை… உங்க அப்பாடா .. அவரை நோவிச்சு வீட்டை விட்டு இறங்கி வந்தது அடுத்த தப்பு. அப்புறம்…’

விசாலி என்றேன்

’என் தோழியை, எனக்கு பிரியமான்வன்கற ஒரே விஷயத்தாலே உன் மேல் அன்பு வச்ச பொண்ணை.. அசிங்கமா சொல்லவே கூசுது எதுக்கு கூச்சம்.. செஞ்ச உனக்கு கூசலியே.. அவ ப்ரஸ்டை இறுக்கப் பிடிச்சு.. அதென்னடா ஊர் உலகத்திலே வடிவா ஒரு பொண்ணு இருந்தா அவ மாரைப் பிடிப்பே.. பிடிச்சா அந்தப் பொண்ணு மறு பேச்சு பேசாம உன்கிட்டே மயங்கி உன்னோடு படுத்துக்க வந்துடணும்.. என்ன மாதிரி சுயநம்பிக்கைடா அது.. திருவிழா கூட்டத்திலே தொடறானே அவனுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம், சொல்லுடா என் செல்லம்..’

’தப்புதான் ஜோசபின்’

’விசாலி பத்தி உனக்கு என்னடா தெரியும்? வீட்டுலே அப்பளம் போட்டு வித்து, மெஸ் வச்சு நடத்தி அவங்க அம்மா அவளை படிக்க வச்சாங்க. உன் வய்சு தான். ஆனா உன்னால் ஒரு பைசா சம்பாதிக்க முடியாது. அவ மாசச் சமபளமா அறுநூறு ரூபா ரெவென்யு ஸ்டாம்ப்லே கையெழுத்து போட்டு வாங்கறா. அடுத்த வருஷம் ஸ்காலர்ஷிப் எம்பிபிஎஸ் கிடைச்சிருக்கு. ஐந்து வருஷத்துலே அவ டாக்டர் ஆயிடுவா? நீ? போற இடத்துலே எல்லாம் பொண்ணு வாடை பிடிச்சுக்கிட்டு திரியப் போறே. என் பின்னாலேயும் வருவே. சரியா?’

நான் தரையில் விரல் தீற்றியபடித் தலை குனிந்து கேட்டுக் கொண்டிருந்தேன். வேண்டி இருந்தது.

’இங்கே நீ காலேஜ்லே சேர வந்தபோது நீதான் பியூசியிலே யூனிவர்சிடி பர்ஸ்டுனு பெருமையாம். இப்போ..’ அவள் என் கன்னத்தில் தட்டினாள்.

’யார் சொன்னது ஜோ? அப்பாவா’? நம்பிக்கையில்லாமல் கேட்டேன்.

’அவரை நான் இன்னும் பார்க்கலே.. விக்தோ அங்கிள் சொன்னார். தப்பு செய்யறார்னு அவர் கிட்டே நீ சொன்னதுமே திருத்திக்கிட்டு என் லைப்லே குறுக்கிட மாட்டேன்னு வாக்கு கொடுத்து டீசண்டா நடக்கற அவர் எங்கே, வாக்குக் கொடுத்துட்டு திரும்ப தப்பு பண்ணிட்டு வர நீ எங்கே? எனக்கு வெட்கமா இருக்குடா. நான் உனக்கு நல்ல நட்பைத் தரலே. உனக்கான அத்துகளை கொஞ்சம் அதிக தூரத்திலே போட நான் இடம் கொடுத்திட்டேன் போல. நீ மத்தவங்க கிட்டே அதை விட கூடுதலா எதிர்பார்க்க ஆரம்பிச்சுட்டே. அமேலி அல்டிமேட் உரிமையை உனக்கு சாக்லெட் ட்ப்பாவிலே ரெண்டாவது அடுக்கிலே வச்சு கொடுத்துட்டா. கல்யாணமான தம்பதிங்கன்னா இப்படி ராத்திரி முழுக்க.. உறவு வச்சுக்கிட்டா, எழுந்து குளிச்சு அடுத்த நாள் எப்படிப் போகும் எப்படி காசு கிடைக்கும் .. வர்ற காசுக்கு எவ்வளவு செலவு, எவ்வளவு சேமிக்கணும்னு திட்டம் போடுவாங்க. அது குடும்பம்…பாரு, நீ ஊர் சுத்திட்டிருக்கே. அந்தப் பொண்ணு படுத்துத் தூங்கிட்டு இருப்பா. திரும்ப சாயந்திரம் அரிப்பெடுத்து, லலி தொலெந்தால் தெருவுக்கு பம்மிப் பம்மி நடப்பே. இன்னும் எவ்வளவு காண்டம் பாக்கி வச்சிருக்கே’?

’ஜோசபின் வார்த்தையாலே என்னைக் கொல்லாதே இன்னிக்கு போகப் போறதில்லே. கர்னல் வ்ந்தாச்சு. வீடும் கிடையாது. நாளைக்கு காலேஜ் எப்படிப் போறது அதான் என் உடனடி பிராப்ளம்’ என்றேன் மெதுவாக.

’நீ வேணாம்னாலும் அவ விடுவாளா? சின்னப் பொண்ணு. உசுப்பி விட்டுட்டே. ஆடி அடங்க எவ்வளவு காலமாகுமோ’.

’அமேலி மேலே தப்பு ஒண்ணும் இல்லே ஜோசபின். மிருகம் என் மனசுலே தான் மறைஞ்சு திரிஞ்சுக்கிட்டிருந்தது. நீயும் கயலும் இருக்கற்போது அது தலை காட்ட பயந்து உள்ளறைகளிலே பதுங்கிக் கிடந்தது. அமேலி வந்து என்னை சந்திக்காமல் இருந்தா அது நாளாவட்டத்திலே செத்துச் செல்லரிச்சுப் போயிருக்கும். திரும்பி வந்தது தான் அவ செஞ்ச தப்பு. அபபடி எடுத்துக்கற்து சரியில்லே தான்.. சரியாச் சொன்னா அவ வந்ததை அவ தனியா இருக்கறதை என்மேலே அவளுக்கு ஒரு கிரஷ் இருக்கறதை எனக்கு சாதகமா எடுத்து அவளோடு போய் படுக்கையிலே… ரெண்டு உடம்பும் ஒண்ணாகிக் கலந்து…அமேலி கொடுத்த குளிகையை சாப்பிட்டது என் தப்பு தான்.. அவளும் அதைத்தான் சாப்பிட்டா..அங்கே தான் தொடக்கம்’.

’என்ன மாத்திரைடா? ரெண்டு பேரும் சாப்பிட்டீங்களா? பேரு என்ன’? ஜோசபின் பரபரப்பாகக் கேட்டாள்.

நான் என் சட்டைப் பையில் தேடி, கசங்கிய காகித உறையை எடுத்து நீட்டினேன் அதைக் கூர்ந்து பார்த்துப் படித்தாள் ஜோசபின்.

’டேய் இது என்ன தெரியுமா’?

’பிரான்ஸ் மேக் ஆஸ்ப்ரின்? பாரசெடமால்’?

’ஹை பொடன்ஸி போதை மாத்திரை. ஒரு வாரம் சாப்பிட்டா அடிக்ட் ஆகி இதுவே சரணம்னு ஆயிடுவே. நீ கல்யாணம் செஞ்சுக்காமே குடும்பம் நடத்தறதைக் கூட ஒரு விதத்திலே மன்னிச்சுடலாம். காண்டோம் யூஸ் பண்ணினீங்களே அது நல்லதுக்குத்தான். .. இல்லேன்னா அவ வயத்துலே பிள்ளை உண்டாகியிருக்கும்.. என்ன பண்ணியிருப்பீங்க? கலைச்சுடலாம்னு மேரி ஸ்டோப்புக்கு போயிருப்பீங்க.. அது மகா பெரிய பாவம்டா. அறியாத சிசுவை உயிர்ப்பிக்க விடாமல் கொல்றது..அதோட ஒப்பிட்டா காண்டோம் பரவாயில்லே….ஆனா இந்த போதை மாத்திரை …வாழ்க்கையே இல்லாம தொடச்சுடும்.. என்னடா சொல்றதை கவனிக்கறியா’?

என் முன்னால் பாறையில் மோதிச் சிதறும் கடல் அலைகள் போல் காதில் அவள் வார்த்தைகள் மோதி அதிர, நான் மொழி புரியாத சிசுவாக அவள் வாயசைவையே பார்த்து ஒரு புன்னகையை யாசித்திருந்தேன்.

’முதல்லே எனக்கு ஒரு சத்தியம் செஞ்சு கொடு’. ஜோசபின் கேட்டாள்.

என் கையை நகர்த்தித் தன் கை மேல் வைத்துக் கொண்டாள் அவள். எல்லாம் மறந்து இப்படியே கையோடு கை சேர்த்து கடல் பாலத்தில் கப்பல் வரும் என்று எதிர்பார்த்து காலமெல்லாம் இருந்து விடலாமா?

’சொல்லு, இனிமேல் கடவுள் சத்தியமா, அம்மா சத்தியமா, கிறுக்கச்சி ஜோசபின் சத்தியமா, போதை மாத்திரை சாப்பிட மாட்டேன் வேறே யாரும் சாப்பிட உதவி செய்ய மாட்டேன். யாராவது என்னையோ பிறரையோ ஆசை காட்டினா, அவங்களை நல்வ்ழிப் படுத்துவேன்’.

நான் சூழ்நிலையின் அபத்தத்தை உள்வாங்கியபடி அவளிடம் மெல்ல அவள் வார்த்தைகளை, கிறுக்கச்சியை மட்டும் தேவதையாக மாற்றிச் சொல்லும்போது கடல் அலைகள் மெதுவாகக் குதித்து உயர ஆரம்பித்தன. ஒட்டுக் கேட்கும் ஆர்வத்தில் எங்கள் கால்களை நனைத்து குசலம் விசாரித்துச் சிரித்துப் போயின அவை..கிறுக்குதான்.

’ஹை டைட் .. வா போகலாம்’

ஜோசபின் எழுந்தாள்.

’அமேலி செஞ்ச தப்பு இதுலே எதுவும் இல்லே. ஜோஸ்ஸி…’ திரும்ப ஏனோ சொல்லத் தோன்றியது. சொன்னேன்.

’சரிடா அவ தப்பு ஒண்ணுமில்லே. நான் யார்கிட்டேயும் சொல்லவும் போறதில்லே’. கடல் பாலத்தை வெறித்தபடி ஜோசபின் கூறினாள்.

’விசாலம் கிட்டே நான் நேர்லே வந்து’.

’அதைப் பார்த்துக்கலாம். நான் சொல்லிக்கறேன். நல்ல பொண்ணு. அவளே காரண காரியம் எல்லாம் புரிஞ்சுக்கிட்டா’..

சரி என்று ஈன ஸ்வரத்தில் சொன்னேன்.

’கயலுக்கு தெரியுமாடா?’ ஜோசபின் என்னைக் கூர்ந்து பார்த்தாள்.

’சொல்லலே சொல்லவும் மாட்டேன் இது என்னோட கருத்த அத்தியாயம். உன் கிட்டே சொல்லி என் பாரத்தை இறக்கி வச்சாச்சு. எனக்கு இது இனி இல்லே. அப்படி எடுத்துத்தான் காலேஜ் போவேன்’.

’நல்லா போ. என்னாலே உன்னை திட்டவோ அடிக்கவோ முகத்திலே முழிக்க மாட்டேன்னு பிரிஞ்சு போகவோ முடியாது. நான் உனக்கு பாதிரியார் ..பாவத்தைச் சொல்லி மன்னிப்பு கேக்கற முந்தியே மன்னிச்சுட்டேன்.. நீ மன்னிப்பு வாங்கியாச்சு. இனி புதுசா தப்பு செய்ய போ.. திரும்பி வந்து அழுதுட்டு நில்லு… சிநேகிதி எதுக்கு? மன்னிக்க’.

இரு கை எடுத்து ஜோசபினைக் கும்பிட்டேன். மாட்டேன் என்றேன்.

’சாப்பிட்டியாடா? களைச்சு இருக்கே. ஜுரம் வேறே இருக்கு’. ஜோசபின் மறுபடி ஜோசபினானாள். நான் தான் நானாக முடியாது நின்றேன்.

திட்டினாலும் அடித்தாலும் அவளால் என்னை வெறுக்க முடியாது. கனிவு தவிர்க்க மாட்டாள் இந்த்ப் பரிதவிப்பு கருணையில் எழுந்தது.

’சாப்பிட்டாச்சு . பிரட் ஆம்லெட். பிரட் செத்துப் போச்சுடா… யூஸ் பை டேட் எக்ஸ்பயர் ஆயிடுச்சு’. சிரிக்க முயன்றேன். வாய் கோணியது.

’சாப்பிட்டாச்சா? எங்கே..’. என் கையைப் பற்றி முகர்ந்தாள் ஜோசபின். ’சைக்கிள் க்ரீஸ் வாடை தான் அடிக்குது’ என்றாள்.

’வண்டியை நல்லாத் தொடச்சா அஞ்சு ரூபா கூடக் கிடைக்கும்னு தோணிச்சு அதான்’ என்றேன். சிரிப்பு மறுபடியும் பழகியிருந்தது..

ஜோசபினுக்கு முன்னால் நான் நடக்க, கூப்பிட்டு நிற்கச் சொன்னாள்.

’என் சைக்கிள் உன் கிட்டே இருக்கட்டும். வேணும்கிற போது வாங்கிக்கறேன்’.

நான் ஒன்றும் சொல்லவில்லை.

’ராஜா, கோபிச்சுக்காதே. சட்டையிலே வியர்வை வாடை அதிகமா வருதுடா.. கொண்டு போய் துவைச்சு எடுத்து வரட்டா’? கெஞ்சினாள்.

’நானே துவைச்சுக்கறேன் உனக்கு இன்னும் எவ்வள்வு தொந்தரவு தர’?

’வீட்டுக்குப் போயிடுடா’

’வீடு இல்லே’

’நம்ம வீட்டுக்கு வா’.

விசாலம் இருக்கும் இடத்தில் குற்ற உணர்ச்சியில் குமைந்து குமைந்து ஒவ்வொரு நிமிடமும் போக்க வேண்டி வரும். அதற்கு சித்தாந்தசாமி மடம் தேவலை. குளிக்க, துணி துவைக்க, மஞ்சள் நிறமாக நீர்க்காவி அப்பி உடுத்திக் கொள்ள, மணி அடித்தால் பட்டை சோற்றுக்கு நிற்க..

’கையிலே கொஞ்சம் காசு தரட்டாடா? தப்பா நினைக்காதே’

’வேணாம் மீன்காசு இருக்கு.. கம்முனு வாச்னையா ஒரு வாரம் வரும்’.

என் இமைகளை நீவினாள். கையை உயர்த்திப் பிடித்து சிதார் வாசிப்பது போல் மெல்லத் தடவி மடித்து அவள் கன்னத்தில் அணையாக வைத்துக் கொண்டாள். கண்களில் கண்ணீர் பார்த்தேன்.

எதுக்கு அழறே ஜோஸ்ஸிம்மா என்று கேட்டேன்.

’ஒண்ணுமில்லே’. என் கையை எடுத்துத் தன் கண்ணீரை ஒற்றினாள்.

’நான் தளர்ந்து கிடந்த போது நீ தோழனா தோள் கொடுத்தே.. விக்தொ அங்கிள் கிட்டே சண்டை போட்டு எனக்காக என்ன எல்லாமோ செய்தே. உனக்கு ஒரு கஷ்டம் வரும்போது நான் ஒண்ணுமே செய்யலேடா’

அடக்க முடியாமல் ஜோசபின அழுதாள்.

என் கைகள் தாமே ஜோசபின் கண்ணைத் துடைத்தன. கண்ணம்மா, நீ அழுதா நான் உடஞ்சிடுவேன். வேணாம். சந்தோஷமாப் போ ராஜாத்தி.

அவள் சைக்கிள் ரிக்ஷாவில் ஏறும் வ்ரை பொறுமையாக அவள் சைக்கிளை உருட்டியபடி வந்தேன். என்னிடம் முரண்டு பிடித்தது அந்த வண்டி. ஜோசபினைப் பிரிந்திருக்க அதற்கு மட்டும் பிடிக்குமா என்ன?

’ரூ லலி தொலெந்தால்’ அவள் சொன்னதைக் காதில் வாங்கியபடி ஜோசபினுடைய சைக்கிளில் கடற்கரைச் சாலையூடே பயணமானேன்.

பட்டீசரி ரொட்டிக் கடை திறந்திருந்தது. இரண்டு துண்டு கேக்கும், ரெண்டு பன்னும் இன்று மதிய உணவாக இங்கே வாங்கிக் கட்டிக் கொண்டு குயில் தோப்பு போகலாம் என்று திட்டமிட்டேன். பாரதியார் பாடலில் வரும் அந்த இடத்தை நான் இதுவரை பர்ர்த்ததில்லை. நடந்தோ, பஸ்ஸிலோ போய் விட்டு ராத்தங்க என்ன செய்யலாம் என்று வரும்போது யோசிக்கலாம்.

யாரையோ யாரோ கூப்பிடும் சத்தம். கீச்சென்று வந்த மாதிரி இருந்தது. திரும்புவ்தற்குள் பியானோ அக்கார்டியன் சத்தம் இனிமையாக காதில் வந்து புகுந்தது. எனக்குப் பிடித்த பாடலும் கூடவே வந்தது

கட்ட்டம் கட்டிடும் சிற்பிகள் நாம்
கட்டிடுவோம் கிறிஸ்து ஏசுவுக்காய்

வேகமாக நகரும் அந்தக் கிறிஸ்துவ பக்தி கானத்தைப் பாடியபடி மேலே கான்வாஸ் கூரை போடாத சைக்கிள் ரிக்ஷாவில் எழுந்து நிற்கிறார் விக்தொ அங்கிள். தோளில் மாட்டிய அகார்டியன்.

நான் வண்டியைத் திருப்பிக் கொண்டு அவரை நோக்கி விரைந்து போனேன். அகார்டியனை ரிக்‌ஷாவில் இறக்கி வைத்தபடி பாட்டைத் தொடர்கிறார் விக்தோ.

உத்தமர் ஏசுவின் அஸ்திவாரம்
பத்திரமாகத் தாங்கிடுவார்

விக்தோ ரிக்‌ஷாவை விட்டு இறங்கி இரண்டு கையையும் அகல விரித்து என்னை வரவேற்றபடி பாடுகிறார்.

பாவமாம் மணலில் கட்டப் பட்ட
பற்பல வீடுகள் விழுந்திடுமே
ஆவலாய் ஏசுவின் வார்த்தை கேட்போம்
அவரே மூலைக்கல் ஆகிடுவார்

எல்லா துக்கமும்ம் கரைய அவருடைய இசையைக் காதில் வாங்கி மனதில் நிறைத்துக் கொண்டு கூடவே பாடுகிறேன். சைக்கிளை விட்டு விட்டு அவர் பக்கத்தில் போக விக்தோ ஒரு குழந்தையைத் தூக்குவது போல் என்னைக் கட்டித் தூக்கிச் சுற்றினார்.

’அங்கிள், கீழே போட்டுடாதீங்க. படாத இடத்துலே பட்டுதுன்னா எதிர்காலமே கேள்விக்குறியாகிடும்’.

’நான் தான் உன் தலையை பத்திரமா பிடிச்சிருக்கேன். அங்கெல்லாம் அடிபடாது’ என்றார் அவர் பெருந்தன்மையாக. புரிஞ்சுக்கலியா அங்கிள்?

’நீங்க கல்லுளிமங்கன். ரெண்டு பாறைக்கு நடுவே வச்சு நச்சுடுவீங்க’, அவரைக் கிண்டினேன்.

’அங்கே தான் தூக்கிட்டுப் போறேன்’.

விக்தோ சிரித்தபடி என்னைத் தாழ்த்த, நான் குதித்து இறங்கினேன். அடுத்த நிமிடம், ஒத்த வயதுத் தோழர்கள் போல கடற்கரையில் கை கோர்த்து ஓடிக் கொண்டிருந்தோம் நாங்கள்..

சர்ச் போகலியா அங்கிள்?

’போகலியா? இன்னிக்கு தான் பெஸ்ட் பெர்பார்மென்ஸ். கர்த்தருக்கு ஸ்தோத்ரம். சர்வீஸ் முடிஞ்சு இன்னிக்கு வாசிச்சதுக்கு எவ்வளவு கைதட்டல் தெரியுமா? பாதிரியார் ஆரம்பிக்க மாஸுக்கு வந்தவங்க எல்லாரும் எழுந்து நின்னு கை தட்டினாங்கன்னா பாரு’.

நித்திய இளைப்பாறுதலை அவங்க்ளுக்குக் கொடு ஜேசப்பா என்று வாய் விட்டுப் பிரார்த்தித்தேன்.

’அது போய்ச் சேர்ந்த அப்புறம் தானே? என் பாட்டைக் கேட்டுக்கிட்டே சவாரி விட்டுடுவாங்கன்னு சொல்றியோ’?

விக்தொவோடு சேர்ந்து நானும் ஓடிக் கொண்டே சிரித்தேன்.

’காலையிலே ஜாகிங்க் போகலே அதான் இப்போ’ என்றார் விக்தோ..

’ஏன் என்ன ஆச்சு’ என்று விசாரித்தேன்.

’நீ இல்லாம நான் மட்டும் ஏன் ஓடணும்’? அவர் உரிமையோடு கேட்க என்னிடம் பதில் இல்லை.

’மிசியே நானு போவட்டா?’

பின்னால் இருந்து ரிக்ஷாக்கார கேட்க, விக்தொ திரும்பிப் பார்த்துச் சொன்னார் – பரீ போற அவசரமா இல்லே லண்டனா? இரு வந்து துட்டு தரேன். தம்பி சைக்கிளையும் பக்கத்திலே எடுத்து வச்சுக்கோ

உய் மிஸ்ஸே பின்னால் இருந்து உத்தரவாதம் கேட்டது.

’சாப்பிட்டியா கண்ணு’?

நீங்களுமா? அவரை ஆச்சரியத்தோடு பார்த்தேன்.

ஆச்சு அங்கிள்.

’ஏம்ப்பா உனக்கு இந்தக் கஷ்டம்.?’

நான் சும்மா இருந்தேன். ’வீட்டுக்கு வந்துடுப்பா புண்ணியமாப் போகுது’.

அவர் என் கையை இறுகப் பற்றி வேண்டுகோள் விடுத்தார். ஏதோ கடல் பறவை கூராக ஒலியெழுப்பி மேலே பறந்து போனதைப் பார்த்திருந்தேன். ஒற்றைப் பறவை. கூடு அநேகமாக இருக்காது.

’அப்பா ரெண்டு நாளா சாப்பிடவே இல்லை. தூக்கமும் கிடையாது. ஆபீசிலேயே உட்கார்ந்து இருபத்து நாலு மணி நேரமும் வேலை செஞ்சுக்கிட்டிருக்காரு. சாத்தான் நடத்தற பேங்குலே அவர் ஆயுசு பூரா இப்படி உழைச்சாலும் இன்னும் வேலை இருக்கத்தான் செய்யும்’.

ஓடி ஒரு சிறிய வட்டம் அடித்து விட்டு ரிக்‌ஷா நின்ற இடத்துக்குத் திரும்ப வந்து கொண்டிருந்தோம்.

’விக்தொ அடிகளே’.

பின்னால் இருந்து கூப்பிட்டது பழக்கமான குரல். திரும்பிப் பார்த்தேன். பார்வேந்த்னார்.

உன்னைத் தான் தம்பி பார்க்க வந்தேன். அப்பா சொன்னாரு. சின்ன விடயத்திலே சினம் கொண்டு புறப்பட்டு விட்டாயாமே? ஆறுவது சினம் கூறுவது தமிழ். அறிவாய் தானே நீ?

விக்தொ விடை வாங்கிப் போக பார்வேந்தனார் என்னை ஆற்றுப் படுத்தத் துவங்கினார். இல்லை, விக்தொவிடம் காட்டிய அதே உறுதிதான் இவரிடமும் காட்டுவேன். அப்பாவுக்குத் தெரிய வேண்டும். ஏப்பை சாப்பையாக எல்லாவற்றுக்கும் பயந்து நடுங்கிக் கண்ணை உருட்டி முழித்ததுமே கட்டுப்பட்டுக் காலைப் பிடிக்கும் பிள்ளை இல்லை அவர் பெற்றது என்று. என் காலில் நிற்கிறேன். நிற்பேன்.

பேசித் தீர்த்தார் பா.வே. குரல் பலவீனமாக இருந்தது. ஒரு வாரமாக தேங்காய்ப் பாலும் முருங்கை இலைச் சாறும் மட்டும் சாப்பிட்டு வந்தால் நானெல்லாம் ஊர்ந்து போவேன். தள்ளாடி நிற்பேன். அடுத்த வேளை சாப்பிட, பூசணம் உதிர்க்கும் பந்தலில் அவரைக்காய் பறிப்பேன்.

பார்வேந்தனார் பளபளவென்று மின்னும் புத்தம்புது ஸ்கூட்டரில் வந்திருந்தார். எனக்கு மிகவும் பிடித்த லாம்ப்ரட்டா ஸ்கூட்டர் அது. நல்ல ஆரஞ்சு நிறத்தில் கண்ணைப் பறிக்கிற இறகுகளோடு வண்டி. நான் வேலைக்குப் போய், கல்யாணம் செய்து கொண்டு கயலை ஸ்கூட்டரில் தான் இங்கிலீஷ் சினிமாவுக்குக் கூட்டிப் போவேன்.

இந்த உந்தியையே வைத்துக் கொள் தம்பி.

வேணாம் பார்வேந்தனார் பழைய ஸ்கூட்டரை தலையில் கட்டி விடலாம் மோட்டார் பைக் வாங்கிக் கயலைச் செல்லமாக பக்கவாட்டில் உட்கார்த்தி இட்டுப் போவேன்.

’தம்பி, மதிமுகத்தாள் உன்னை உடனே உணவுக்கு இட்டுவரச் சொன்னாள்’.

பார்வேந்தனர்ர் பெருமையோடு அறிவித்தார்.

’ஏன் சார், சாத்வீகமாக் காய்கறி சாப்பிட்டு வந்ததை விட்டு நரமாமிசத்துக்கு போயாச்சா’ என்று கேட்டேன்.

கடவுளே, மதிமுகத்தாள் உன்னை திங்கறதுக்காகக் கூப்பிடலே. நீ வந்து சாப்பிடணும்னு கூப்பிடறாங்க என்று என் ஐயத்தைத் தெளிவித்தார்.

விக்தொ, பார்வேந்தனார், இன்னும் யார்யாரோ. அப்பா நான் சந்திப்பேன் என்று யூகித்த தனக்குப் பழக்கமான எல்லோரிடமும் என்னைப் பற்றி குறைந்த பட்சம் தகவ்ல அறிவித்து, வந்தால் கவனித்துக் கொள்ளச் சொல்லி இருக்கிறார். நல்ல புத்தி சொல்லி வீட்டுக்கு அனுப்பி வைப்பதுவும் அவர்கள் செய்தாக வேண்டிய உதவியில் அட்ங்குவதாக இருக்கும். அவர் ஆற்றாமை புரிகிறது.

பா.வே ஸ்கூட்டரை மெதுவாக ஓட்டிய்படி முன்னால் போக, நான் சைக்கிளில் அவருக்கு முன் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்து விட்டேன்.

கயலைச் சந்திக்கக் கூடாது என்று வைராக்கியத்தோடு பதுங்கி ஓடிய ஒரு மனம் தாழ்ந்து போக, கயல் கயல் என்று ஓலமிட ஆரம்பித்தது இன்னொரு மனது. இரண்டு நாளுக்கு முன் எந்தக் கசடும் பற்றாத மனநிலையில் அவளை இங்கே விட்டுப் போனபிறகு அதே சூழலும் மனமும் எண்ணமுமாக இங்கே வருவதாக நம்ப முயற்சி செய்தேன்.

ஆளையே காணோம். தேங்கா தின்னச் சொல்லுவாங்கன்னு ஓடிட்டியா?

கயல் அன்போடு விசாரித்தாள்.

’இவரா, தகப்பன்சாமி. அப்பாரு கோவிச்சுக்கிட்டார்னு வீட்டை விட்டுப் போயிட்டாராம்’. பார்வேந்தனார் சிரிக்காமல் சொல்ல, கயல் என்னை ஆச்சரியத்தோடு பார்த்தாள். இது என்னடா புதுக் கிறுக்கு என்பது போல் அதில் ஒரு அழகான சுவாரசியம் தெரிந்தது.

பார்வேந்தனார் நாங்கள் பேச விட்டுவிட்டு வாசலில் இருந்த ஒரு பெரிய சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாக்கைத் தூக்கிக் கொண்டு உள்ளே போக, உங்க லஞ்ச் ரெடி போல இருக்கு என்றேன் கயலிடம்.

’ஏன் கேக்கறே. கல்லாடச் சித்தர் ஆஸ்பத்திரியிலே படுத்தாச்சு. டிஹைட்ரேஷன். வாந்தி பேதி’.

ஆஸ்பத்திரியே மல்லிகைப்பூ மணத்தோட திகழுமே என்று விசாரித்தேன்.

‘உனக்கு வேடிக்கையா இருக்காக்கும். சிரி. ஆமா, அப்பா கூட என்னடா சண்டை? கனவிலே ஜோசபின் .. ஜோசபின்னு உளறினியா’?

’கயல்னு தான் உளர்றது வழக்கம்’.

’சுத்துடா நல்லா ரீல் சுத்து’. அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே மதிமுகத்தம்மாள் உள்ளே இருந்து பெரிய கேரியரில் சாப்பாட்டோடு வந்து ஸ்கூட்டர் பெட்டியில் வைத்தாள். பா.வே திரும்பக் கிளம்பினார்.

’கல்லாடச் சித்தருக்கு குழைய வடிச்ச சாதமும் ரசமும் இங்கே இருந்துதான் போவுது. அப்பா இப்படியான வேலைக்கெல்லாம் போக மாட்டார். புது ஸ்கூட்டரை ஓட்ட இதெல்லாம் சாக்கு இல்லையா. அதான் இழுத்துப் போட்டுக்கிட்டு ஓடறார்’.

கயல் சிரித்தாள். அவளுக்கு ரெண்டு நாள் நான் அனுபவித்து வந்த சுகமும் துக்கமும் தெரியாமல் இருப்பதில் எனக்கு சின்னதாக நிம்மதி.

புத்தக அல்மாரியில் இலக்கு இல்லாமல் புத்தகம் புரட்டிக் கொண்டு நின்றேன். கையில் கிடைத்த மூவரையன் விறலிவிடு தூது புத்தகத்தைப் புரட்டுவதற்குள் கயல் பறித்து வைத்தாள்.

’எப்படிடா இதெல்லாம் உன் கண்ணுலே படுது. விவரமான ஆளுடா நீ’..அவள் என்னை விழுங்கி விடுவது போலப் பார்க்க, தழுவிக் கொள்ள எதிர்பார்ப்பு புரிந்தது. இல்லை, இப்போது எனக்கு எந்தத் தகுதியும் இல்லை அதற்கெல்லாம்.

’கோபிச்சுக்கிட்டுப் போன சாமி கோவணத்தோட இல்லே போகணும்.?’.கயல் கலகலவென்று சிரித்தாள்.

அவளுடைய உற்சாகம் எனக்கு இனி தொற்றுமோ என்னவோ. அதனாலென்ன, அதைப் போலியாக முகத்தில் பூசி நிற்கலாம். கயலை வருத்தப்பட விடக் கூடாது. அவளுக்காக ஆடுடா ராமா என்று ஆடவும் தயார்தான். ஓடுடா நாயே என்று விரட்டினால் ஓடி ஒளியவும் ரெடியே

’சாப்பிட வாங்க தம்பி’

மதிமுகத்தம்மாள் விளிக்க, சர்க்கரை வ்ள்ளிக் கிழங்கா அம்மா என்று கேட்டேன். இல்லேப்பா, சோறு ரசம் வாழைக்காய். அமாவாசையாச்சே

அவள் உள்ளே போக கயல் என் உதடுகளில் மெல்ல மிக மெல்ல ஒரு முத்தம் ஈந்தாள். திருப்பித் தருவதா நன்றி சொல்வதா என்று குழம்பி கண் மூடி நின்று கொண்டிருந்தேன்.

’என்னடா சட்டை எல்லாம் ஒரே கப்பா இருக்கு? ஓ நீ தான் வீட்டை விட்டு ஓடி வந்துட்டே இல்லே?’

உள்ளே போய் ஒரு நாலு முழ வேட்டியும் கதர்த் துண்டுமாக வந்தாள்.

’இதை உடுத்திக்கிட்டு துணியை விழுத்துக் கொடுடா’.

வேணாம் கயல் என்று அவசரமாக மறுத்தேன்.

’போடறியா, நானே கழட்டட்டா’?

வேட்டி துண்டுக்கு மாறினேன். விழுத்துப் போட்ட துணிகளை பிளாஸ்டிக் வாளியில் போட்டு, கணுக்கால் தெரிய இழுத்துச் செருகிய பாவாடையோடு நகர்ந்த கயல் நின்றாள். திரும்பினாள்.

’உள்ளே போட்டிருக்கறதை யாரு துவைப்பா? போடுறா அதையும்’.

’கயல் கயல் ஓ கயல்’

’என்னடா கயல் கயல்னு ஜபம்’?

’நீ எதுக்கு அதை எல்லாம்’?

’அது உனக்கு தேவை இல்லாத கவலை’.

’சரி அப்படியே இருக்கட்டும். துவைக்கப் போட்டுட்டு எப்படி சாப்பிட உட்கார்றது? உங்க அம்மா பரிமாறினா எனக்கு கூச்சமா இருக்கும்’.

’சரி அவங்க சோறு போட வேணாம். நான் வந்து போடறேன்’.

’அய்யய்யோ அது இன்னும் கஷ்டம்’.

என்ன கஷ்டம்? அவள் கண்ணை விரித்துக் கேட்டு விட்டுச் சிரித்தாள்

’சரிடா, நல்ல ஒட்டப் பிழிஞ்சு தரேன் அதை மட்டும்’

’மெர்சி கயல்’

’ஏண்டா வீட்டை விட்டு ஓடற்துதான் ஓடறே ஒத்தை அண்டர்வேரோடயா இறங்குவே’?

நான் சங்கட்மாகச் சிரித்தேன்.

’ஆமா உன்னை லலி தொலெந்தால் வீதியிலே பார்த்ததா யாரோ சொன்னாங்களே? சாக்லெட் கடிச்சுக் கொடுக்கறேன், வான்னு கூப்பிட்டாளா உலக அழகி? மறுபடியும் திருவிளையாடல் ஆரம்ப்மா’?

’சே சே அதெல்லாம் இல்லே கயல்.. அரியர்ஸ் கிளியர் பண்ண பாடம் சொல்லிக் தரேன். ரொம்ப கேட்டா.. டிகிரி இல்லாம பிரான்ஸிலே வேலை தேட முடியாதாம்…வேலைக்குப் போயே ஆகணும்னு க்ட்டாயமாம்.. கேட்க கஷ்டமா இருந்தது’..

அது உண்மையும் தான். ஆனால் அது மட்டும் உண்மை இல்லை.

’அரியர்ஸ் கிளியர் பண்ண உதவி செய்யறது பாடத்தோட நிக்கட்டும். வேறே அரியர்ஸ் எல்லாம் அவளோட கூட இருந்து ஆனந்தமா முடிச்சுக்கலாம்னு மோப்பம் பிடிச்சு அங்கே போனே, மவனே’

உள்ளாடையை எந்த அருவறுப்பும் இல்லாமல் எடுத்து வாளித் துணிகளோடு இட்டாள் கயல். என் பக்கத்தில் வந்து சொன்னாள் –

’அறுத்துப் போட்டுடுவேன். ஜாக்கிரதை’.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன