New Bio-fiction தியூப்ளே வீதி – அத்தியாயம் 27 இரா.முருகன்

நடராஜன், நீங்க கிளம்புங்க

அப்பா என் பக்கம் திரும்பாமல் நேரே வின்செண்ட் நடராஜனைப் பார்த்தபடி சத்தமாகச் சொன்னார்.

சார், டியூட்டி முடிய நேரம். இருக்குதுங்களே.’

வின்செண்ட்.தயங்கித் தயங்கிச் சொன்னார். அவர் பார்வை என் பேரிலேயே முழுக்க இருந்தது.

‘இன்னிக்கு ஒரு நாள் சீக்கிரம் வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுங்களேன்.. மத்தவங்களுக்கு உழைச்சு உழைச்சு என்னத்தைக் கண்டோம். நம்மை நாமே தான் பார்த்துக்கணும். இல்லையோ மரியாதை கெட்டு சாவோம்’.

அப்பா அவச்சொல் சொல்லிக் கேட்டதே இல்லை. மனம் நொந்து போயிருக்கிறார். நான் தான் காரணம். அவர் சொல்லாமலேயே தெரியும். மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

வின்செண்ட் நடராஜன் என்னையும் அப்பாவையும் மாறி மாறிப் பார்த்தபடி காம்பவுண்ட் ஓரமாக வைத்த சாக்குப் பையில் இருந்து வண்டி மாட்டுக்குப் போடும் கூளத்தை அள்ளிக் கொண்டு நடந்தார்.

‘நடராஜன், நீங்க போகிறபோது வெளியாள் யாரும் உள்ளே வேணாம். கதவை இழுத்துச் சாத்திட்டுப் போங்க’

அதற்குள் நடராஜன் வண்டி பூட்டிக் கிளம்பி விட்டார்.

‘அப்பா நான் வெளியாளா?’

யார்டா அப்பா? நீ என் பிள்ளையா? காவாலிப் பய. நடுத்தெருவிலே வெக்கமே இல்லாம பொம்மனாட்டியைக் கட்டிப் பிடிச்சுண்டு உருளற கழுவேறி.. நாய் கூட நாலு பேர் பக்கத்திலே இருந்தா இங்கே வேணாம், ஜனம் கல்லு கொண்டு எறியும்னு ஓரமா ஓடும். நீ? உசிருக்கு ஆபத்துலே பெத்தவன் இருந்தாக் கூட பொம்பளை வாடை பிடிச்சுண்டு ஓடற கிராதகன். எங்கே எங்கேன்னு நெட்டை விட்டுண்டு உடம்பு தேடற சுகம் தானாடா சகலமும்? அப்படி என்னத்துக்காக அதுக்கு தீனி போடணும்? உனக்கு மட்டும் அரைக்கெட்டுலே இல்லாம தலையிலேயா மொளச்சிருக்கு தறிகெட்டு திரியறதுக்கு? அப்படி இருந்தா அந்த அசிங்கத்தை அறுத்துப் போட வேண்டியது தானே? படிக்கற காலத்துலே பொண்ணு சகவாசத்துக்கு அலையற தெம்மாடி,. நீ எவ்வளவு கேவலமானவன் புரியற்தா? இந்தக் கண்றாவியை எல்லாம் நான் பார்க்கணும்னு விதிச்சிருக்கே. என் கண் காணாமே ஒழி. பிள்ளையே பிறக்கலேன்னு வைச்சுக்கறேன் போ புழுத்த தெருவு பட்டி.’.

நாயே என்று சொன்ன பிறகு இங்கே எனக்கென்ன வேலை? வெளியே வந்தேன். மனசு வெறுமையாக இருந்தது.

காம்பவுண்ட் ஓரமாக சைக்கிளை ஸ்டாண்ட் எடுக்கும்போது தோன்றியது, இதையும் விட்டுவிட்டுப் போக வேண்டுமோ?

பின்னால் திரும்பிப் பார்த்தேன். மாடிக் கதவுகள் ஆச்சரியப்பட்டுக் கூட்டாகச் ச்த்தமெழுப்பி, அடைத்து மூடிக் கொண்டன.

ராலே சைக்கிளை பிரியத்தோடு தடவிக் கொடுத்தேன். நீ என்னோடு இருப்பியா? என் சுகம் எல்லாம் கூட இருந்து பகிர்ந்தாச்சு. துக்கத்க்கும் நீ தான் இனி என் கூட வரணும்.

மௌனமாக சைக்கிள் ஓட்டிப் போக, மனதில் அடங்காமல் எழுந்து வந்த அழுகையைப் பிடிவாதமாக நிறுத்தினேன். அதற்கான வயது கடந்து போய் விட்டது.

புஸ்ஸே தெருவில் ஜபமேரி லாண்டரியின் கதவுப் பலகைகளை ஒவ்வொன்றாக எடுத்துத் திறந்து கொண்டிருந்தார் கடைக்காரர். ஒரு வினாடி நின்றேன். இன்னும் இரண்டு நாளில் காலேஜ் திறக்கிறது. மற்றது எல்லாம் எப்படியாவது சமாளித்தாலும் உடுப்பு? ஜபமேரி லாண்டரியில் வெளுக்கப் போட்டிருந்த துணி வந்திருக்குமா?

வந்திருந்தது.

’என் துணியை மட்டும் கொடுங்க. மத்ததை எல்லாம் வீட்டுலே கொடுத்திடுங்க அண்ணே. நான் ஊருக்கு போயிட்டிருக்கேன்’.

என்னை ஏற இறங்கப் பார்த்த லாண்டரிக்காரர் டோபி மார்க் பார்த்து பிரித்தெடுத்த துணி அடுக்கைக் காட்ட ரெண்டு பேண்டும் ரெண்டு சட்டையும் மட்டும் என்னுடையது. இனிமேல் எத்தனை காலம் இது ரெண்டு மட்டும் தான் உடுத்தி வலம் வரவேண்டுமோ தெரியவில்லை.

சட்டைப் பையைப் பார்த்தேன். லாண்டரிக்கு ஐந்து ரூபாய் கொடுத்தது போக, பர்ஸில் மொத்தமே முப்பத்தைந்து ரூபாய் தான் பணம். இன்னும் எத்தனை நாளைக்கு இது கூட வருமோ.

எங்கே போகலாம்? அமேலி வீட்டுக்கு? வேண்டாம். அங்கே போய்க் குடியேற உத்தேசம் இல்லை. அதுவும் அவள் வாடகைக்கு இருப்பிடமும் காசுக்குச் சாப்பாடும் வாங்கித் தங்கி இருக்கும் வீட்டில்

ஜோசபின்? மறுபடி கண் நிறைகிறது. ஜோசபின் என்ற ஆருயிர் சிநேகிதி கிடைக்க எனக்கு என்ன தகுதி? அவளை நினைக்கவும் எனக்குத் தகுதி இருக்கிறதா? தெரு நாய் நான். இதை விட நான் சுய மதிப்பிலும் மற்றவர் மதிப்பிலும் தாழ்ந்து போக முடியாது. இல்லை, நரகத்துக்குள் தலைகீழாக, போய்க் கொண்டிருக்கிறேன். குப்புற விழுவது நானாக மட்டும் இருக்கட்டும். என் கசடு எதுவும் தொடாத பரிசுத்தத்தோடு ஜோசபின் உயிர்க்கட்டும்.

கயல்? அந்தக் குழந்தையை நான் சந்தித்திருக்கவே கூடாது. அன்பைப் பொழிந்து ஆதரவாக அணைத்துப் புதுத் தும்பைப் பூவாகக் கண்ணுக்குள் வைத்துப் பாதுகாக்க வேண்டியவள் என் கயல். அணைக்கவும் அன்பு செலுத்தவும் இந்த நாய்க்கு என்ன உரிமை இனி? அவளை விட்டு விலகி இருப்பதே அவளுக்கு இப்போது செய்யக்கூடிய பெரிய உதவி.

கூட்டிக் கழித்து நடந்ததெல்லாம் அமேலி தலையிலா விடிய வேண்டும்? நிச்சயம் இல்லை. நான் அவளைச் சரியாக வழிநடத்தி இருக்க வேண்டும். அவளுடைய வலிமையற்ற நிலையைச் சாதகமாக்கி ருசித்து அவள் தசை சுவைத்த, காமமே உருவெடுத்த நாய் நான்.

கல்லூரி போகிற பாதையில் சைக்கிள் திரும்பியது. அதுவும் சரிதான். இன்னும் இரண்டு நாளில் காலேஜ் திறப்பதால், ஹாஸ்டல் முன்னதாகவே திறந்திருக்கும். கூடப் படிக்கிற எத்தனை பேர் அங்கே.

சைக்கிள் காலேஜ் மண்மேடு ஏறும்போது கயல் நினைவு. புயல் மழை நேரத்தில் அவளோடு இந்த ராலே சைக்கிளில் தான் நெருங்கி உட்கார்ந்து முழுக்க நனைந்தபடி பயணம் போனது. கயல் கண்ணம்மா என்னடி செஞ்சுக்கிட்டிருக்கே. என்னை நினைக்கறியா? வேணாம். மற.

ஹாஸ்டல் வாசலில் எப்போதும் போல் சகஜமாக உள்ளே போக அனுமதி கிடைக்கவில்லை. புதுசாக வாசலில் ஸ்டூல் போட்டு உட்கார்ந்திருந்த நேபாளி கூர்க்கா இந்தி மட்டும் தான் பேசினான். அவனுக்கு நான் உள்ளே போவதில் எந்த அக்கறையும் இல்லை. நான் இந்தக் காலேஜில் படிக்கிறேன் என்ற சுய அறிமுகமும் சல்லிக் காசுக்கு அவ்னுக்கு பிரயோஜனமில்லாத ஒன்று. என்னைப் போலவே.

’என்ன முஸ்யே இங்கே நிக்கறீங்க’?

ராஜராஜ பூபதி. போன வருடத்தோடேயே படிப்பு முடித்தவர்.

’என்ன அண்ணே, டிகிரி முடிச்சும் ஹாஸ்டலை விட மனசு வரலியா?’ என்று கேட்டேன்.

’தம்பி, டிகிரி ஓஞ்சுது இனி போஸ்ட் கிராஜுவேஷன்’, உலகமே வசப்பட்ட திருப்தி குரலில் தொனிக்கச் சிரத்தையாகச் சொன்னார் அவர்.

’அதுக்கு நீங்க மெட்ராஸ், சிதம்பரம், திருச்சின்னு போகணுமே’.

’யார் சொன்னது? இந்த வருஷத்திலே இருந்து நம்ம காலேஜிலேயே எம் ஏ எகனாமிக்ஸ், இங்கிலீஷ் லிட்டரச்சர். அடுத்த வருஷம் எம் எஸ்ஸி பிசிக்ஸ், அப்புறம் அறுத்துக் கட்டறது’.

’கல்யாணமா, சோஷியாலஜியா?’ ஆவலோடு விசாரித்தேன்.

’அட பூச்சி பொட்டு எல்லாம் மல்லாக்கப் போட்டு கத்தியாலே கிழிச்சு’.

’எம் எஸ்ஸி ஸுலஜியா’?

’அதான்.. ஜுவாலஜின்னு சரியா சொல்லணும்’, கற்றுக் கொடுத்தார்.

’ஒண்ணும் பிரச்சனை இல்லேண்ணே, சொல்லிடலாம்’.

மனசு முழுக்க இருண்டு கிடக்க, திடீரென்று நூறு வாட்ஸ் பல்ப் எரிய விட்ட மாதிரி ஒரு பிரகாசம். டிகிரி முடித்ததும் இந்த ஊரை, காலேஜை விட்டுப் போக வேண்டியதில்லை. இன்னும் ரெண்டு வருஷம் இங்கேயே குப்பை கொடட வழி பிறந்திருக்கிறது. நல்வாக்கு சொன்ன ராஜராஜ பூபதியைக் கட்டிக் கொண்டேன்.

’தம்பி செண்டிமெண்டு ஆகிட்டீங்க போல… என் பேரிலே இவ்வளவு பிரியம் வச்சுருக்கறவங்க எங்கம்மா மட்டும் தான்னு நினைச்சேன்’.

பூபதி நெகிழ்ந்து போனார். எனக்காக எதுவும் செய்வார் என்று தோன்றியது. நேப்பாளி கூர்க்காவை அலட்சியமாகப் பார்த்து ராஜராஜ பூபதியோடு ஹாஸ்டல் உள்ளே நுழைந்தேன்.

பழைய ரூம் மேட் யாரையோ வழியில் பார்த்து அவர் உடனடி ப்ரேக் போட்டு சாவகாசமாகக் குசலம் விசாரித்தபடி நிற்க நான் அவரிடம் சொல்லிக் கொண்டு முன்னால் நடந்தேன்.

ஒவ்வொரு அறையாகத் தேட வேண்டும். எப்படியும் நாலைந்து சகாக்களாவது வந்திருப்பார்கள். ஒவ்வொருத்தருடன் ஒரு வாரம் தங்கினால் ஒரு மாதம் தானே கடந்து போய்விடும். அவ்வளவு ஹாஸ்டல் நண்பர்கள் உண்டு. அதற்கு அப்புறம் எப்படி என்று நேரம் வரும்போது யோசித்துக் கொள்ளலாம்.

எல்லாம் சரி, இங்கேயே இன்னும் ரெண்டு வருஷம் டேரா போட, யார் என்னைப் பட்ட மேல்படிப்பு படிக்க வைக்கப் போகிறார்கள்?

நான் செய்யறேண்டா என்று மனதில் ஒரு பக்கத்தில் இருந்து மேகலாவும் மற்றதில் இருந்து ஜோசபினும் முன்னால் வந்தார்கள்.

முதல் காதலை எப்படி மறக்கப் போச்சு என்று மேகலா தெற்றுப் பல் சிரிப்போடு ஜோசபினிடம் சொன்னாள். ’இவனா? காதலா? முகத்தை வச்சு அடையாளம் காணறதை எப்பவோ விட்டுட்டான் தெண்டி.. படம் வரைஞ்சு பாகங்களைக் குறின்னு சொன்னா குஷியா நம்ம எல்லோரையும் ஒரு வழி பண்ணிடுவான். அமேலி தான் ஆரம்பம்’. கயல் அவர்களோடு சேர்ந்து நின்று என்னைக் கைகாட்டி இகழ்ந்தாள்.

அழகான பெண்களே, என் இன்னுயிர்த் தோழிகளே, எல்லா கசடுகளோடும் நான் இன்னும் உயிர் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறேன் என்றால் உங்கள் அன்பும் உங்கள் மேல் என் தீராக் காதலும் தான் காரணம். உடலும் காமமும் எரிந்து தீரும். நான் இருப்பேன் நீங்களாக.

ஒரு வாரம் பொள்ளாச்சி போய் மேகலா வீட்டில் இருந்து விட்டு வரலாமா? காலேஜுக்கு யார் போவது?

ஹாஸ்டல் கீழ்த் தளத்து அறைகளில் யாரும் வந்திருக்கவில்லை. மேலே நாலு ரூம் பூட்டியிருந்தது. யாரோ வந்து வெளியே போயிருக்கலாம். நாலாவது அறையில் மூன்று சகாக்கள் சிங்கப்பூர் லுங்கி கட்டி, மும்முரமாக சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

’லிங்கம், நல்லா இருக்கீங்களா? பாவெல் எப்படி இருக்காபல? அப்பாண்டை நயினார், சௌக்கியமா’?

ஹாஸ்டல் நண்பர்கள் கிட்டத்தட்ட எல்லோருமே வாங்க போங்க மரியாதைக் காரர்கள். வீட்டில் இருந்து தினசரி பஸ் ஏறி வந்து, சைக்கிள் சவட்டி வந்து படித்துப் போகிற டே ஸ்காலர்களோடு உருவாகிற வாடா, போடா, மச்சான் மாமன் உறவுகள் இங்கே அபூர்வமானதாகவே இருக்கிற உண்மையை ஆச்சரியத்தோடு நினைத்தபடி போன்ஷூர் சொன்னேன் மூவருக்கும்.

முகம் மலர்ந்து அவர்கள் எனக்குக் காலை வணக்கம் சொன்னார்கள் என்றாலும் ஏதோ குறைகிறது அவர்களின் குரலில். கண்ணில் உற்சாகம் குறைவாகத்தான் தட்டுப்படுகிறது. அப்படி ஒரு தோற்றம்.

’அதென்ன தம்பி, நாங்க தான் வெளியூர் ஆளுங்க. ரெண்டு நாள் முன்னாடியே கிளம்பி வந்து செட்டில் ஆகிட்டு இருக்கோம். நீங்க டே ஸ்காலர். காலேஜ் திறக்கற அன்னிக்கு கெத்தா வந்தா போதாதா’?

சீட்டை மார்போடு அணைத்துப் பிடித்தபடி நயினார் விசாரித்தார். கயல் வகுப்பு. பயமின்றி தவளை அறுத்து ஜூவாலஜி படிக்கிறார். கயல் என் பிரியமான தோழி என்று தெரிந்தவர். யாருக்குத் தான் தெரியாது?

பாவல் சீட்டை மடியில் வைத்துக் கொண்டு கள்ளச் சிரிப்பு சிரித்தார். வேதியியல் படிக்கிறார். வ்ல்லூரி சார் காப்பர் சல்பேட் திரவத்தை லேபரட்டரியில் ஆறு போல பெருக விட்ட தினத்தில் அவரைக் காப்பாற்றிக் கரை சேர்த்த தொண்டர்களில் இவரும் அடக்கம்.

’தம்பி பத்தி தெரியாது உங்களுக்கு நயினார். அவர் முகத்தைப் பாருங்க. பால் வடியுது இல்லே. ஏமாந்திடாதீங்க. மகா கள்ளன். நீரும் தான் மூணு வருஷம் இங்கே டிகிரி சிங்கி அடிச்சுட்டு இப்போ எம் ஏ வந்திருக்கீங்க. ஒத்தையா ஒரே ஒரு பொம்பளை பிரண்டு உண்டா உமக்கு? ஆனா, தம்பிக்கு? கேட்டுப் பாருங்களேன் லிஸ்ட்டே உண்டு’.

’அய்யே களியாக்காதீங்க அண்ணே. காலேஜ் முழுக்க சிநேகிதங்க தான் எனக்கு. அதுலே ஆணென்ன பொண்ணு என்ன? பிரண்ட் பிரண்ட் தானே’. நான் வெட்கப் பட்டதாக நடித்தேன். வெட்கப்பட வேண்டியதற்கே வெட்கப்படவில்லை. இதுக்கென்ன போச்சு?

’நீங்க சரின்னா இங்கே ரெண்டுநாள் தங்கலாம்னு யோசனை’. இது கேண்டீனில் காராபூந்தி கொறிப்பது போல மிக சாதாரணமான விஷயம் என்பது குரலில் தொனிக்க வெகு ஜாக்கிரதையாகச் சொன்னேன். அதுக்கென்ன, ராஜா மாதிரி இருங்க என்று கட்டாயம் பதில் வரும். அப்புறம் இருக்கும் இடம் தவிர மற்றது பற்றி மட்டும் யோசிக்கலாம்.

மூன்று பேரும் சீட்டைப் பார்க்காமல் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டார்கள். சங்கடமான ஒரு மௌனம் அங்கே நிலவியது.

நயினார் தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார். மற்றவர்கள் அவர் வாயைத் திறக்கும் முன்பே அவரோடு அனுசரணை கொண்டவர்கள் என்ற முகக் குறிப்பு புலப்படுத்தி இருந்தார்கள்.

’தம்பி ஒரு வருஷம் முந்தின்னா, நீங்க தங்கறேன்னு சொன்னதும் ரத்தினக் கம்பளமே வாடகைக்கு எடுத்து விரிச்சிருப்பேன்.. இப்போ நிலைமை மாறிப் போச்சே.. காலேஜ் ஆஸ்டல்லே தீவிரவாதிங்க அடைஞ்சு நாடு கெட்டுப் போயிட்டிருக்குன்னு புகாராம். கவர்மெண்ட், காலேஜ் நிர்வாகம், போலீஸ், கல்லூரி ஊழியர் சங்கம் இப்படி எல்லாத் தரப்பிலேயும் கெடுபிடி அதிகமாகிப் போச்சு. ஹாஸ்டல்லே பணம் கட்டிப் பதிவு செஞ்சு குடி இருக்கறவங்க தவிர வெளியாருக்கு இருக்க அனுமதி இல்லேன்னு வாசல்லே கட்டம் கட்டி கண்ணாடிப் பெட்டிக்குள்ளே வச்சு மாட்டி இல்லே இருக்காங்க. நீங்க பார்க்கலியா? குட்டி போட்ட பூனை மாதிரி வார்டன் அந்தோணிசாமி சுத்திச் சுத்தி வரார் தினமும்..பரீட்சைக்கு நாலு நாள் முந்தி நடு ராத்திரிக்கு வார்டன் ரெய்ட். என் ரூம்லே எலக்ட்ரிசிட்டி போர்ட்லே வேலை பார்க்கற ரெண்டு சிநேகிதங்க இருந்தாங்க. அவ்ங்களை எழுப்பி விட்டு தூக்கக் கலக்கத்துலே சுவர் ஏறிக் குதிச்சு வெளியே போக வச்சு.. ஒருத்தர் வேட்டியே கட்டாம ஓடினார்.. இன்னொருத்தர் தடுக்கி விழுந்து காயத்தோடு காணாமப் போனார் பாவம்..எளவு இது வேணுமா நமக்கு’?

நயினார் சீட்டைக் கவிழ்த்து வைத்து விட்டுக் கழிப்பறை போனார். என் பதிலைக் கேட்காமல் தவிர்க்க நினைத்திருக்கலாம்.

’அப்படி எல்லாம் உங்களை மாட்டி விட மாட்டேன் அண்ணே.. ரெண்டே ரெண்டு நாள்..’. பாவலிடம் சொன்னேன். சொன்னேனா, பிச்சைக்காரன் மாதிரி கூனிக் குறுகி யாசித்தேன்.

’கஷ்டம் தம்பி.. வேணும்னா ஒண்ணு செய்யலாம். இன்னிக்கு ஈவினிங் வரைக்கும் இருங்க. ராத்திரி ஒம்பதுக்கு வெளியேறிட்டு பெறகு காலையிலே எட்டுக்கு வந்துடுங்க. நாளைக்கு சாயந்திரத்தோட வேறே இடம் கிடைக்காமலா போயிடும்’? லிங்கம் நைச்சியமாகச் சொன்னார்.

சே என்று வெறுத்துப் போனது. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. அங்கே வெளியிலிருந்து வரும் யாருக்கும் தங்க என்ன, ஹாஸ்டல் அறையில் மணிக் கணக்காக உட்கார்ந்து பேசிப் பொழுது போகவும் இப்போது அனுமதி இல்லையாம். நான் வெளியே போகும் வரை இவர்களுக்கு நிம்மதி இருக்காது. இருக்க் இடம் இன்றி அலைந்து திரியும் யூதன் நான். Wandering Jew. வந்தாகி விட்டது. போயாக வேண்டும். இருக்குமிடம் இல்லை, தேடும் இயக்கம் மட்டும் நிரந்தரம்.

‘அண்ணே இப்போ நான் இங்கே குளிச்சுக்கலாமா?’ பாத்ரூமில் இருந்து வந்து கொண்டிருந்த நயினாரை பணிவாக விசாரித்தேன். மூத்திரம் போக இட வ்சதிக்குக் கூட கெஞ்சிக் கூத்தாடி நிற்பதாக ஒரு அச்சமூட்டும் எதிர்காலம் தெளிவில்லாமல் முன்னால் எழுந்து நின்றது.

’தண்ணி இப்போ தான் வர ஆரம்பிச்சிருக்கு. ஒரு பக்கெட் பிடிச்சு வச்சிருக்கேன். நீங்க குளிங்க தம்பி. முடிச்சு தண்ணி பிடிச்சு வச்சுடுங்க. வரல்லேன்னா, மொட்டை மாடி டேங்குக்கு வாளியை எடுத்துப் போய் பிடிச்சு வந்தா குளிச்சிடுவேன். நான் பார்த்துக்கறேன் நீங்க குளிங்க’.

நயினார் சீட்டுக் கட்டை பத்திரமாக சுவரில் வரிசையாகப் பதித்த சிமெண்ட் பலகைகளில் ஒன்றில் வைத்தபடி சொன்னார். மடித்து வைத்த ச்ட்டைகளும், ஷேவிங் பிரஷ்ஷும், பயோரியா பல்பொடியும், சித்தநாதன் வீபுதி பாக்கெட்டுமாக சுவர் அலமாரி முழுக்க இரைந்து கிடந்தது. ஒரு பேட்மிண்டன் மட்டையும் அழுக்கான இற்குப் பந்தும் கூட அங்கே உண்டு.

அவசரக் குளியல். வீட்டிலிருந்து சடுதியாக வெளியேறிய போது சோப் டப்பா எடுத்து வைத்துக் கொள்ளாமல் போனது உறைத்தது. பிக்னிக் வந்திருக்கிறேனா என்ன? அலையும் யூதன் குளிக்காவிட்டால் யாருக்கு நஷ்டம்? சோப் தேசலாகக் கிடைத்தாலும் சரி. இங்கே இருந்தால் எடுத்துத் தேய்த்துக் கொள்ளலாம் என்று ஈரக் கையால் தேடினேன். நயினாரோ யாரோ புது சந்தன சோப்பை டப்பாவில் வைத்திருந்தார்கள். அது வேண்டாம் என்று பின்னும் தேட, அலமாரியில் சோப்பு டப்பாவைச் சுற்றி நாலைந்து தேசல் சோப்புத் துண்டங்கள் தட்டுப்பட்டன. தண்ணீர் விட்டு அழுத்தி அதை எல்லாம் சேர்த்து கதம்பமாக ஒட்ட வைத்து இழுத்து தேய்த்துக் கொண்டு தண்ணீர் விட சோப் திட்டுத் திட்டாகத் தேமல் போல உடம்பில் தேங்கி நின்றது. தியூப்ளே வீதி வீட்டில் கொட்டு கொட்டென்று ஷவரில் அருவி விழக் குளிக்கிற சுகமெல்லாம் இனிமேல் கயல் போல் கனவில் தான்.

சலவை உடுப்பு மாட்டிக் கொள்ளும்போது விழுத்துப் போட்ட துணியைத் துவைக்கவில்லை என்று நினைவு வந்தது. உள்ளதுக்கே தண்ணீர் இல்லாத இடத்தில் துணி துவைக்க எங்கே போக? விழுத்துப் போட்ட துணிகளைச் சுருட்டி வைத்தேன். அதுகளுக்கு நேரம் காலம் வரும்போது அலக்கி உலர்த்தி அயர்ன் செய்து மாட்டிக் கொள்ளலாம்.

’தம்பி இங்கேயா இருக்கீங்க, தேடிட்டு இல்லே இருந்தேன்’.

ராஜராஜ பூபதி உள்ளே வேகமாக வந்தார்.

’ஒண்ணுமில்லே, அவசரமா ஒரு முப்பது ரூபா வேண்டியிருக்கு. பேங்க் கவுண்டர்லே எடுக்கலாம்னு பார்த்தா இங்கே கவுண்டரை அடுத்த வாரம் தான் திறக்கறாங்களாம். மெஸ் பீஸ் கட்ட குறையுது. டவுணுக்குப் போய் எடுத்து வந்து சாயந்திரம் தரேன்’ என்றார் அவர்.

‘மெஸ் பீஸ் தனியாக்கிட்டாங்களா, வாழ்க’ என்றார் நயினார் டவலை இடுப்பில் கட்டி நின்றபடிக்கு.

’அதை ஏன் கேக்கறீங்க. இதுவரை கேண்டீன்லே தானே நாம ஹாஸ்டல் ஸ்டூடண்ட்ஸ் சாப்பிட்டு வந்தோம்… மலையாளத்தான் மாட்டேன்னு சொல்லிட்டான் போல.. தனியா மெஸ் தொடங்கியாச்சு. கிட்ட முட்டப் போய் விசாரிச்சா அனேகமா இவனும் இன்னொரு மலையாளியா, கேண்டீன் நாயருக்கு சகலபாடி, சம்பந்தியாகத் தான் இருக்கும்’ என்றார் ராஜராஜ பூபதி.

நான் அவர்களோடு சேர்ந்து சிரித்தபடி பர்ஸில் இருந்து முப்பது ரூபாய் எடுத்து பூபதிக்குக் கொடுத்தேன். மிச்சம் ஒரு ஐந்து ரூபாய் நோட்டும் கொஞ்சம் சில்லறையும் இருந்தது. காசு ஏதோ உருண்டு வெளியே ஓடியது. அவசரமாகப் பொறுக்கி எடுத்தேன். காசு பணம் விஷயத்தில் ஜாக்கிரதையா இரு என்று மின்னும் புது ஐம்பது பைசா நாணயத்தில் இருந்த தொப்பி இல்லாத நேரு எச்சரிக்கை செய்தார்.

நயினார் குளிக்கக் கிளம்பினார்.

’மெஸ்ஸிலே இட்லி போடறானுங்களாம். ஹாஸ்டல் பசங்களுக்கு மட்டும் தான்னு கட்சி கட்டுவான். பார்த்துக்கலாம். நீங்க என்ன மிஞ்சிப் போனா ரெண்டு இட்லி திம்பீங்களா? நான் வாங்கி உங்க தட்டுலெ போட்டா என்ன செய்வானுங்களாம்’? பூபதி சந்தேகம் கேட்டார்.

அப்படி கேவ்லமாக இங்கே லா பாயிண்ட் பேசிச் சாப்பிட வேண்டுமா?

’வேணாம் அண்ணே. நான் டவுணுக்குப் போய் சாவகாசமா வரேன்’.

மூட்டை முடிச்சோடு கிளம்பினேன்.

’ஆமா, கேட்க விட்டுட்டேனே. ஏன் ஹாஸ்டல்லே தங்கணும்னு ஆகிப் போனது? அப்பா டிரான்ஸ்பர் ஆகிப் போய்ட்டாரா? ஒரே நாள்லே வீட்டை காலி எல்லாம் செய்ய சொல்ல மாட்டாங்களே..’. ராஜராஜ பூபதி நாலு அடி முன்னால் வைத்தவர் திரும்பி வந்து கேட்டார்.

’இல்லே அண்ணே.. ரெண்டு நாள் வெளியே இருந்தாக் வேண்டிய கட்டாயம்.. வந்து விவரம் சொல்றேன்;.

சைக்கிள் மண்சரிவு இறங்கிக் கொண்டிருந்தபோது உலகத் துக்கம் எல்லாம் ஒன்று சேர்ந்து வந்து என் தலைக்குள் இறங்கிய கனம் அழுத்தியது. என்ன செய்து கொண்டிருக்கிறேன்? நேற்று இருந்த நிலை என்ன, இன்றைக்கு இங்கே அகதியாக ஓடிக் கொண்டிருக்க என்ன பாவம் செய்தேன்? அப்பா திட்டினாலும் வாலைக் குழைத்து மன்னிப்பு கேட்டு ஈயென்று இளித்து அழுது பிடித்து பிடிவாதமாக உருண்டு புரண்டு வீட்டுக்குள், வாழ்க்கைக்கான பாதுகாப்புக்குள் பூனைக் குட்டி போல போய்த் திரும்ப முடங்கிச் சுருண்டிருக்க வேண்டுமா?

இதற்கெல்லாம் யார் காரணம்? அமேலி என்று நம்பச் சொல்லி மனசு ஆசை காட்டியது. அது சிறுபிள்ளைத் தனம். அமேலி திரும்பி வந்திருக்கா விட்டால் இதெல்லாம் நடந்திருக்குமா? வந்தாலும் நான் சந்தித்திருக்காவிட்டால் இன்றைக்கு காலைச் சாப்பாடு கையில் தானே வந்து விழுந்திருக்குமோ? அவளை சந்தித்து கண்ணியமாக நாலு வார்த்தை பேசி, கூட இருந்து காப்பி குடித்து வீட்டுக்கு அனுப்பி விட்டுத் திரும்பாதது யார் குற்றம்? அவள் உட்மபு தரும் சுகத்தை எதிர்பார்த்துத் தசையை மோப்பம் பிடித்து நாடிப் போனது நான் தானே.

கே சரா சரா. டோரிஸ் டே ஏதோ ஒரு ஹிட்ச்காக் படத்தில் பாடிய பாட்டு மனதில் ஒலித்தது. நடக்க வேண்டியது நடக்கும் என்று சொல்கிற வரிகள் அவை. கவலையை ஒதுக்கி வைத்து விட்டு வேலையைப் பாருடா என்று டோரிஸ் டே குரல் கொஞ்சம் ஆண்மை கலந்த பெண்குரலில் நம்பிக்கை தந்தபடி இருக்கும். ஜிக்கி பாடிய அந்தப் பாட்டின் தமிழ் வடிவம் கூட உண்டு. முதல் வரி என்ன?

ஆமா, பாட்டு வரி நினைவு வந்தால் பசி போய்விடுமாக்கும். உக்கிரமாகிக் கொண்டிருக்கிறது அது. கண்ணை அயர்வு வந்து அழுத்த, பசியும் களைப்பும் எந்த நிமிடமும் உடம்பை முழுவதும் ஆக்கிரமிக்கலாம் என்று உள்ளுணர்வு சொல்கிறது. அமேலியை படுக்கைக்கு அழைத்தபோத் நீ எங்கே போயிருந்தே என்று கேட்க அந்த உணர்வு செத்துப் போய் பாதையோரமாக இறக்கையற்ற காக்கையின் ச்வமாக விழுந்தது. ஒற்றைக் குயில் வெகு நேரமாகப் பாடிக் கொண்டிருக்கும் தென்னந்தோப்பு ஊடாக சைக்கிள் மெல்ல உருண்டது.

சித்தாந்த சாமி மடத்து வாசலில் ஏதோ கூட்டம். வண்டியில் இருந்தபடிக்கே என்ன என்று பார்த்தேன். உள்ளே இருந்து ஆண்டி பரதேசிகள் கையில் பூவரச இலைத் தொன்னையில் பொங்கல் சோறும், மேலெல்லாம் வீபுதியும் குங்குமமுமாகக் கொழகொழவென்று அப்பி இருந்த பூவன் பழமுமாக வெளியே வந்து கொண்டிருந்தார்கள்.

எங்கே இருந்து அந்த வேகம் வந்ததென்று தெரியவில்ல. சைக்கிளை ஸ்டாண்ட் போடக்கூட நேரமில்லாமல் தென்னை மரத்தில் சாய்ந்து விட்டு ஓட, அது பின்னால் சரிந்து விழுகிற சத்தம். சட்டை செய்யாமல் மடத்துக்குள் ஓடி வளைந்து நெளிந்து கிடந்த வரிசைக் கடைசியில் நின்றேன். எதிரில் மர பெஞ்சில் வைத்திருந்த பாத்திரத்தையே கவலையோடு பார்த்தேன். நான் கையை நீட்டி வாங்கப் போகும் வரை பாத்திரத்தில் பொங்கல் இருக்குமா?

இருந்தது. அலட்சியமாக என் கையில் தொப்பென்று போடபட்ட பூவரச இலைத் தொன்னை ஓட்டையாக் இருந்து கையில் பொங்கல் வழிந்தது. கூடவே போட்ட வாழைப்பழம் முழுக்க கருத்த தழும்புகள். ஊதுபத்தி ஸ்டாண்டாகவும் மடத்தில் உத்தியோகம் பார்த்திருக்க வேண்டும் அந்தப் பழம்.

வெளியே வரும்போது சைக்கிள் ரிக்‌ஷா மேலே மோதப் போய் சமாளித்து நிற்க, ரிக்‌ஷாக்காரர் ஏசினார் – பாத்து வரமாட்டியா, முட்டிட்டு போறியெ, தானம் கொடுத்த பட்டச் சோறு தான் வாங்கியாச்சுல்லே. குந்தி உக்காந்து துண்றதுக்கு என்ன அவசரம்?

நான் வேகமாக பின்வாங்கி முகத்தை மறைத்தபடி ந்டக்க என் பெயரை உரக்கக் கூப்பிடும் பெண்குரல். எனக்குப் பழகிய குரல் அது. எமிலி. ஜோசபினோடு ஆஸ்பத்திரியில் நர்ஸாக இருக்கிறாள் எமிலி.

ஓட ஆரம்பித்தேன். எமிலி குரலோடு ஓர் ஆண்குரலும் கேட்டது. அவள் வீட்டுக்காரனாக இருக்க வேண்டும். இவர்கள் கண்ணில் பட்டதே தப்பு. நின்று பேசுவது கட்டாயம் விலக்கப்பட வேண்டியது.

காலில் மரத்தின் வேர் தடுக்க, தொன்னை மண்ணில் சரிந்தது. ஒரு வினாடி நின்று குனிந்தேன். பொங்கலில் மேலே பரவிய பொடி மணலை வழித்துப் போட்டேன். வாழைப் பழம் முழுக்க மண் அப்பி இருந்தது. விட மனம் வரவில்லை. அப்படியே பிடித்தபடி எமிலி கண் பார்வை படும் தூரத்தில் இருந்து விலகி இருந்தேன்.

கை என்னை அறியாமல் கொண்டு வந்த பிச்சைச் சாப்பாட்டை அள்ளி விழுங்க ஆரம்பித்தது. தரையில் இருந்து பொங்கலில் ஏறிச் சுற்றிக் கொண்டிருந்த எறும்புகள், துப்பும் பொழுது வாயிலிருந்து தரையில் விழுந்து ஆச்சரியம் காட்டி நின்று நழுவின.

மடத்துக்குத் திரும்பி வந்தபோது எனக்காகக் குரல் எழுப்ப யாரும் இல்லை. மௌனத்தை ஊடுருவி உள்ளே போய் மண்பானைத் தண்ணீர் குடித்துக் கிளம்பினேன். முதலில் துணி துவைக்க வேண்டும். அடுத்து மதியச் சாப்பாட்டு வழி செய்தாக வேண்டும். இந்தப் பொங்கல் இன்னும் ஒரு மணி நேரம் தாக்குப் பிடிக்கும். அதற்கு மேல் கையேந்தி நிற்க இன்னொரு இடம் தேவை.

வைத்தே வீட்டு வாசலில் புரோகிதர்கள் நாலு பேர் வரிசையாக வந்து சைக்கிள் விட்டு இற்ங்கிக் கொண்டிருந்தார்கள்.

வைத்தே வாசலுக்கு வந்தவன் என்னைப் பார்த்து என்னடா மூட்டை முடிச்சோட கிளம்பிட்டே என்று விசாரித்தான். நாயனா தெரத்திட்டார்டா என்றேன். ஜோக் அடிக்கிறேன் என்று நினைத்துச் சிரித்தான். கொஞ்சம் யோசித்து, எடிட் செய்த கதைச் சுருக்கம் சொன்னேன். வருத்தப்பட்டான்.

’சோத்துக்கு என்ன பண்றே மச்சி?’ என்று நிஜமாகவே அக்கறையோடு கேட்டான்..

’அது வேணுங்கற போது கிடைக்கும் மாமு; இல்லாட்டாலும் கவலையில்லே’. விட்டேத்தியாகப் பதில் சொன்னேன். .

’நீ பூணூல் போட்டிருக்கியா?’, வைத்தே என் சட்டைக்குள் பார்த்தான்.

இல்லையே ஏன்?

போட்டிருந்தா, இங்கே இன்னிக்கு சாப்பிட்டிருக்கலாம் என்றான்.

என்ன விஷயம் என்று விசாரித்தேன்.

’தெவசம் மச்சி. தாத்தாவுக்கு திதி. மதியம் எள்ளுருண்டை, மோர்க்குழம்பு, அப்பம், போளின்னு ஒரு கட்டு கட்டலாம்’.

எனக்கு வாய்க்கவில்லை என்று சொல்லி சைக்கிளில் உட்கார்ந்தேன்.

லெச்சு வீட்டில் அவன் எங்கே போனான் என்றே தெரியவில்லை என்று ஒரு பாட்டம் அழுது தீர்த்தாள் அவன் தொத்தா. தேடிக் கூட்டி வருகிறேன் என்று வாக்குத்தத்தம் செய்து விட்டு வந்தேன்.

ஃபிரான்ஸ்வா வீட்டில் தனியாகத் தான் இருந்தான். ஒரே அழுக்காக உட்கார்ந்து ரேடியோ சிலோன் கேட்டுக் கொண்டிருந்தான். எதையோ சுவாரசியமாக மென்று கொண்டிருந்தான் அவன். தட்டைப் பார்த்தேன். பூச்சி பொட்டு மாதிரி இருந்தது. அரிசி போலவும் தெரிந்தது.

’ஈசல் பிடிச்சு எடுத்து வந்தாங்கடா. அதோட கூட அரிசி சேர்த்து வறுத்து வச்சுட்டு வில்லியனூர் போயிருக்கு எங்க பாட்டியமமா’.

நேற்று ராத்திரி கொஞ்ச நேரம் மழை பெய்த போது கிளம்பிய ஈசலாம். ராத்திரி மழையும் வெய்யிலும் எனக்கென்ன தெரியும்?

ஃபிரான்ஸ்வா வீட்டில் பக்கெட்டும் டிடர்ஜெண்டும் வாங்கி துணி ந்னைத்து ஊறப்போட பிரச்சனை இல்லை. இதையும் சேர்த்துக்கோ மச்சான் என்று பிரான்ஸ்வா தன் நாலு பேண்ட் சட்டையை எடுத்து வந்து பக்கெட்டை நிறைத்த விசேஷம் தவிர வேறே ஏதுமில்லை.

அவன் துணியையும் சேர்த்துத் துவைத்துப் போட வேண்டிப் போனது. எல்லாம் சேர்த்து உலர்த்தியும் முடித்தேன். இதற்குத் தான் காத்துக் கொண்டிருந்த மாதிரி அவன் அறையைச் சுத்தம் செய்ய உதவி செய்யக் கோரி அழைப்பு விடுத்தான்.. வேலையை ஆரம்பித்து வைப்பதில் இருந்த அவனுடைய சுறுசுறுப்பு ஈசல் அரிசி தின்பதற்கு மாற, அந்த வேலையும் என் தலையில் தான் விடிந்தது. இருக்கட்டும், சரஸ்வதி பூஜைக்கு கயல் என் வீட்டுக்கு வந்து என்னோடு உழைப்பைப் பகிர்ந்து கொள்ளவில்லையா? கயல் என்ற தேவதை எங்கே நான் எங்கே?

’மச்சான் மூணு மணி ஆச்சுடா பசியே இல்லை’,

ஃபிரான்ஸ்வா சோம்பல் முறித்தான். ரெண்டு மணி நேரத்தில் பத்து சதுர மைல் அளவு நிலப் பரப்பில் கெல்லி எடுத்த பல்லாயிரம் ஈசல்களை பிடிப் பிடியாகத் தின்று சாதனை படைத்துக் கொண்டிருந்தான் அவன். அந்த ஈசல்களுக்கு உயிர் வந்து அவனுடைய வயிற்றுக்குள் பறக்க ஆரம்பித்தால் அவனைத் தூக்கிக் கொண்டு போய் தியூப்ளே சிலைக்குப் பின்னால் கடலில் வீசிப் போட்டு விடும்.

அடுத்த வேளைக்கு தீனி தரச் சொல்லி என் வயிற்றில் மணி அடிக்க ஆரம்பித்தது.

’முட்டைக் குழம்பு தான் இருக்குடா. வா, ஊத்திக்கிட்டு பிரட் தின்னுடலாம் என்றான் பிரான்ஸ்வா.

கடல் காற்றுக்கும் வெயிலுக்கும் காய்ந்திருந்தன துணிகள். எடுத்து வைத்துக் கொண்டு ப்ரான்ஸ்வாவிடம் சொல்லிப் புறப்பட்ட நேரத்தில் அந்த்வான் வந்தான். அவன் அங்கே வந்து சேர்ந்தது என் நல்ல் காலம் என்று தான் சொல்ல வேண்டும். அவன் ஏதும் கேட்கும் முன், பசிக்குதுடா என்றேன். கேள்வி கேட்காமல் கூட அழைத்துப் போய் நாயர் கடையில் நிறுத்தினான். நேற்றுக் காலையில் தான் இங்கே என் செல்லக் கயலுக்கு புட்டும் கடலையும் வாங்கிக் கொடுத்தேன். அடுத்த வேளை சோறு பற்றிக் கவலையில்லாத பொழுது அது, கயலோடு சிரித்துச் சிரித்து நகர்த்தும் பொழுதுகள் இனி எப்போ வரும்? வராதோ.

அய்யோ சேட்டா எல்லாம் தீர்ன்னு போயி

வெறும் பாத்திரத்தைக் காட்டினார் நாயர். வாடா, வேறே எங்கேயாவது பார்க்கலாம் என்று அந்துவான் கிளம்ப அவன் பின்னால் பதைபதைத்து யாசகன் போல சோற்றைத் தேடி ஓடினேன்.

’மச்சான் பாக்கெட்டுலே மூணு ரூபா தான் இருக்கு. பிஸ்கட் வாங்கி தின்னுட்டு ரெண்டு பேரும் டீ குடிச்சுக்க்கலாம். ஓகே?’

அந்த்வான் யோசனைக்குச் சரி சொன்னேன்.

பொரை பிஸ்கட் தான் நாயரிடம் இருந்தது. அதுவும் அமுதமான பொழுது. நேரம் கேட்டேன் அந்த்வானை. நான் வாட்ச் எடுத்து வந்திருக்கலாம். அதை விற்றால் இன்னும் ஒரு வாரம் ஓட்டலாமே.

கடைக்குப் பக்கம் சைக்கிளோடு நின்று பேசிக் கொண்டிருந்தோம். கதைச் சுருக்கம் சொல்ல் வருத்தப்பட்டான். சாயந்திரம் ஐந்து மணி.

’வீட்டுலே தங்கச்சி மட்டும் தனியா இருக்கு. போறேண்டா.’.

அந்துவான் என்னை டூரிஸ்ட்கள் கூட்டம் நிறைந்த புல்வார்ட் பக்கம் விட்டு விட்டுப் போனான். என்ன உயிர் நண்பனாக இருந்தாலும் இனிமேல் இளம்தாரி பெண்கள் இருக்கும் வீடுகளில் என்னைப் படி ஏற்ற மாட்டார்கள் என்று தோன்றியது.

வெகு நேரம் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு விட்டு வேடிக்கை பார்த்தபடி அதன் மேல் உட்கார்ந்திருந்தேன். எல்லோரும் என்னை காமாந்தகன் என்று சந்தேகத்தோடு பார்க்கிறதாகத் தோன்ற லலி தொலந்தர் வீதியில் என் ராலே சைக்கிள் உருண்டது.

சட்டென்று மனம் விழித்துக் கொண்டது.

நேற்று மைக்ரேனுக்கு அமேலி கொடுத்த குளிகை இன்றும் வேண்டும். அதோடு அமேலியும் வேண்டும்.

ஆசை நிமிஷத்துக்கு நிமிஷம் உக்கிரமாகப் போய்க் கொண்டிருந்த்து. லொலி தொலாந்தர் தெரு கர்னல் வீடு பூட்டி இருந்தது. அமேலி போன இடம் தெரியவில்லை.

குளிகை வேண்டும். அமேலி உடம்பு வேண்டும். அந்த உடல் கணப்பில் தஞ்சம் தேடிப் பூனையாகச் சுருண்டு கிடக்க இரவு வந்து கொண்டிருக்கிறது.

கார்த்திகை மாத நாய் போல் காமமே வடிவெடுத்தவனாக அமேலி வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்தேன். ஒரு ஜன்னல், துணி உலர்த்தும் கொடி எங்காவது அமேலி உடுத்த துணி இருந்தாலும் முகர்ந்தபடி இந்தப் பசி சற்றே அட்ங்க முயற்சி செய்வேன்.

அமேலி வேண்டும். அவள் உடல் மதர்த்து என் மனதில் திமிறி எழுந்து என்னைத் தகிக்கிறது. அழகான் பெண் உடல். நக்னமான பெண் உடல். ஆடையும் காற்றும் கூட இடையில் வராமல் அணைத்துத் தழுவி உடல் கலப்பது தவிர வேறென்ன வேண்டும்?. அமேலி, உடனே வா. காத்திருக்கிறேன்.. நேற்றையும் விட நேர்த்தியாக போகம் பயில்வோம்.

மணி ஏழு என்று எங்கோ மாதாக் கோவிலில் மணிகள் தெரிவித்து முழங்கின. அமேலி அமேலி என்று உடம்பு ஆர்ப்பாட்டம் செய்தது. மனதுக்குள் என் கைகள் அவள் உடலில் மெல்ல ஊர்ந்து போக வாசலில் உட்கார்ந்து அமேலி அமேலி என்று மெல்லிய குரலில் அழைக்கத் தொடங்கினேன். அவள் இல்லை. சுகம் கண்ட உடம்பு திரும்ப இரை கேட்கிறது. அமேலி இல்லை. என்றால் ஜோசபின்.

முதல் தடவையாக ஜோசபினை அழகான அங்கங்களின் தொகுதியாக, கவர்ச்சி மிகுந்த உடலாக மட்டும் நினைத்தேன். நரம்புகளும் புத்தியும் காமம் துய்ப்பதில் மும்முரமாக ஈடுபட்டு என்னைச் செலுத்த ஜோசபின் என்ற உயிர்த் தோழியை மறந்து வடிவான அந்தக் கருப்பு உயிர்ச் சிலையோடு இணை விழைந்து கூடி இன்பம் துய்க்கக் கிளம்பினேன்.

எல்லையம்மன் கோவில் தெருவில் கண்ணில் பட்ட பெண்கள் எல்லோரும் காமரூபங்களாகத் தெரிந்தார்கள். தலையைக் குனிந்து, மனம் ஆர்ப்பரிக்க தெருவூடே மெல்லப் போனேன். தெருச் சத்தங்களும் தெரு ஓரத்தில் அங்கங்கே மூக்கில் குத்தும் சிறுநீர் வாடையும், எங்கோ மாமிசமோ மீனோ பொறிக்கும் வாடையும் எந்த பாதிப்பும் நிகழ்த்தாமல் உள்கடந்து போக, போகம் போகம் போகம் எனப் பிதற்றிப் போனேன்.

ஜோசபின் வீடு. வாசல் கதவைத் தள்ளினேன். திறந்து கொண்டது. ஜோசபினைக் கூப்பிட்டேன்.

’டியூட்டி போயிருக்கா. நீ உள்ளே வா’.

விசாலி குரல். என்னைத் திரும்பிப் பார்க்காமலேயே அடையாளம் கண்டு கொண்டாள்.

அவள் அறையில் முதுகைக் காட்டிக் கொண்டு ஏதோ எழுதியபடி இருக்கிறாள். எதிரே மேஜையில் மஞ்சள் மினுக்கும் காகித்ங்கள். வெள்ளை உறைகளில் விலாசம் எழுதி அழைப்பை உள்ளே வைத்தபடி இருக்கிறாள். யாருக்குக் கல்யாணம்? அவளுக்கா?

ஜோசபின் இல்லாவிட்டால் என்ன? என் காமத்தை ஆற்றுப்படுத்தி அக்கரை சேர்க்க விசாலி உண்டு. திரண்டு எழுந்த அவளுடைய உடல் என் மன விகாரத்தை ஜிவ்வென்று மேலே உயர்த்தி ரத்தத்தின் சூட்டை அதிகரிக்கிறது. உருண்ட அந்த செழுமையான தோள்களும் திமிர்த்து நிற்கும் கட்டுடலும் எனக்கு வேண்டும். இரை கண்ட மலைப் பாம்பாகப் பின்னால் இருந்து அவளை நெருங்குகிறேன். கிண்ணமாகக் குவிந்த இரண்டு கைகளைக் கொண்டு அவளுடைய மார்பை இறுகப் பற்றி வாயில் எச்சில் ஊற, கிசுகிசுப்பான குரலில் விசாலி என்கிறேன்.

சட்டென்று எழுந்து நின்று திரும்பினாள் விசாலி. பொறி பறக்க என்னை அறைந்தாள். தலைமுடியை ஆக்ரோஷமாகப் பிடித்துக் குலுக்கிக் கீழே தள்ளிக் காலால் உதைத்தாள்.

அவள் கால்களைப் பிடித்துக் கொண்டேன். பாதங்களில் முத்தமிட் முயன்றேன். மோகம் ஏறுகிறதே ஒழியக் குறையவில்லை.

புழுத்த நாயே, இறங்கிப் போடா.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன