New Bio-fiction தியூப்ளே வீதி – அத்தியாயம் 25 இரா.முருகன்

டெலிபோன் ரொம்ப அழகாகச் சிணுங்கியது. கயலாக இருக்கும். அவள் கூப்பிட்டால் ஃபோனுக்குக் கூட குஷி தான்.

’என்ன பண்ணிட்டு இருக்கே’? கிண்கிணி கிணிகிணியென்று குளிரக் குளிரத் தெறிக்கும் குரல்.

’நாடகம் எழுத பிள்ளையார் சுழி போட்டேன் தேனே’.

‘தேனா? அது எங்க அக்கா’.

’சரி அவங்களையே கூப்பிட்டதா இருக்கட்டும’என்றேன் சாவதானமாக்.

‘கூப்பிட மாட்டே.. பல்லைத் தட்டிக் கையிலே கொடுத்திடுவேன்.’

‘செய் ..நமக்கு பிரஞ்சு கிஸ் பண்ண வசதியா இருக்கும்’..

’உவ்வே .. ஏண்டா இப்படி புத்தி போகுது? என் கிட்டே பேசாதே..’

’நீதான் போன் பண்ணினே?’.

‘சரி நான் தான் கூப்பிட்டேன். அதுக்காக பிரஞ்ச் கிஸ் அது இதுன்னு..?’

‘காதல்னா அப்படித்தான்.. முத்தம்னா இப்படித்தான்..’ நாக்கைத் துளாவிச் சத்தம் எழுப்பினேன்

‘நாக்குலே டெட்டால் போட்டுக் கழுவு’

‘கழுவிட்டு சுத்த பத்தமா நம்மூரு முத்தம் மட்டும் இனிமே தர்றேன்.. நீ சொன்னா அப்பீலே இல்லே என் குள்ள வாத்தே’. வழக்கம் போல் அந்த மோகினிப் பிசாசைச் சரணடைந்தேன்.

’ஆமா. நீ ஆறடி ஆகிருதி.. ஹேய்..ஒரு உதவி செய்’

’செய்கிறேன் கண்ணே. ஆனா, நோ மோர் கரப்பான் பூச்சி’.

‘அது எல்லாம் வேணாம். எனக்கு ஒரு நல்ல பூட்டு வாங்கித் தா.’

‘எங்கே பூட்டுப் போடணும்’?

‘உன் வாயிலே, அப்புறம் ‘

‘நீ எங்கே வரேன்னு தெரியுது..’ ஒரு சேஞ்சுக்காக அவள் டயலாக்கை எடுத்து விட்டேன்.

‘நான் நினைக்கலே, ஆனா நீயே கரெக்டா சொல்லிட்டே.. சரி … அங்கேயும் இருக்கட்டும்.. அதோடு முக்கியமா எங்க வீட்டு சமையல் கட்டுக்கு பெரிசா ஒரு பூட்டுப் போடணும்.. ’..

என்ன ஆச்சு? டெலிபோன் ஒரு அடி எழும்பிக் குதிக்கக் கேட்டேன்.

’அது பெரிய கதை. நேர்லே தான் சொல்லணும்.. பூட்டோடு வா’. இக்கு வைத்தாள் கயல்.

‘ஓகே, முன் பாரம் பின்பாரமா உங்க வீட்டுலே ரொம்ப சுமாரா ஒரு காபி சாப்பிட்டுக் கிட்டே கேட்கறேன்… மிசஸ் மதியை போட்டு வைக்கச் சொல்லு’

‘காப்பியா, அதெல்லாம் தடை செய்யப்பட்டுள்ளது.. மதிமுகம் சோர்ந்து போச்சு.. மத்த முகமெல்லாம் வாடிப் போச்சு’.. கயல் பேச்சு பிடிபடவில்லை. வீட்டில் காப்பிக் குடியை ஒழித்திருப்பாங்க போலே.

’நோ காபி நோ ப்ராப்ளம் …..வேணும்னா .முன்பாரம் பின்பாரமா முத்தம் கொடுத்துக்கலாம்’..

’ஆரம்பிச்சுட்டியா. உலகத்திலே உதடே யாருக்கும் இல்லேன்னா என்னடா செஞ்சிருப்பே?’ அவள் ஆக்ரோஷமாக விசாரித்தாள்.

‘சொன்னால் நீ கோபப்படுவே’.

’மாட்டேன் சொல்லு’

’பிரஞ்ச் கிஸ்தான் கொடுப்பேன், வேறே என்ன?’.

அந்த முனையில் டெலிபோனைத் தரையில் வீசியிருப்பாள் போல. காது வலித்தது.

அரை மணி நேரம் சென்று கயல் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்ததும் தான் நிலைமையின் தீவிரம் புலப்பட்டது.

‘’அம்மா சத்சங்கம் போயிருக்கு’ என்று வரவேற்றாள் கயல். அப்பா? பச்சைக் காய்கறி கொள்முதல் செய்ய ஏரிக்கரைத் தோட்டத்துக்குப் போயிருக்கிறாராம். ஏதோ போனால் சரிதான். மெல்லவே வரட்டும்.

சோபாவில் சாய்ந்து உட்கார்ந்து ’வா’ என்றேன். நெருங்கி அமர்ந்தாள்.

இடையைச் சுற்றிப் படர்ந்த என் கையை ஊர விடாமல் இறுகப் பற்றி இருந்தாள் கயல். கேசவர்த்தினியும் சந்தன சோப்பும் ரெமி ஸ்னோவும் கொஞ்சம் வியர்வையுமாகக் கலந்து அவளிடமிருந்து வந்த மணம் போதையேற்ற சொர்க்கத்தில் இருந்தேன். காத்லின் மணம் அது.

’கஷ்டம் எல்லாம் பத்து நாள் முந்தி ஆரம்பிச்சதுடா’..

கயல் சோகமாகச் சொன்னாள். வளைத்த இடையில், வளைந்த் கரத்தில், குளிர்ந்த குரலில், விரிந்த விழிகளில் இருந்த களைப்பு இதுவரை நான் காணாதது.

’தண்ணி குடி. இல்லேன்னா டீஹைட்ரேட் ஆயிடும்’ என்றேன்.

ம்ண்பானைத் தண்ணீர் மொண்டு ஒரு வாய் குடித்தாள் கயல். எனக்கும் தாகம் எடுத்ததாகச் சொன்னேன்.

’நினைச்சேன்’. அவள் திரும்ப வந்து பக்கத்தில் உட்கார்ந்து குவளையை ஒரு சுற்று சுழற்றி நீட்டினாள். ’என்ன பார்க்கிறே நான் வாய் வச்சுக் குடிச்ச் இடம் இப்போ தெரியாதே என்ன செய்வே?’.

குவளையை வாங்கி மேஜையில் வைத்தேன்.

‘அங்கே தெரியாட்ட என்ன, இங்கே தெரியுமே’ ஈர இதழ்களை ஒற்றினேன். அவள் வெட்கப்பட்டது ரொம்ப இயல்பாக இருந்தது.

ரெண்டு நாளா சோறு சாப்பிடலே என்றாள்.

பார்வேந்தனார் வீட்டில் அப்படித் திடீரென்று கொடிய வறுமை எங்கிருந்து வந்தது என்று அதிர்ச்சியாக இருந்தது. வாய் விட்டுச் சொல்லியும் விட்டேன்,

’அதெல்லாம் ஒண்ணும் இல்லேடா. சாப்பாடு கிடையாது. அவ்வளவு தான்’.

எதுக்காக எல்லோருமா சேர்ந்து உண்ணாவிரதம் இருக்கீங்க என்று விசாரித்தேன். வீட்டுக்குள் கொண்டு வந்து போராட என்ன பிரச்சனை?

’போராட்டம் எல்லாம் ஒண்ணும் இல்லே’ என்றாள் கயல் என் தோளை அணைத்து அந்த ஆதரவில் சாய்ந்து கண் மூடிக் கொண்டு.

’விரதமா? உனக்கு தம்பிப் பாப்பா பிறக்கப் போகுது. சரியா’?

’ஏண்டா எங்கம்மாவைப் பார்த்தா பிள்ளைத் தாச்சியா வந்து நிக்கற மாதிரியா தெரியுது? இந்த் ஆகஸ்டுக்கு அவங்க ஐம்பத்து மூணு வயசு. அப்பா அறுபத்து ஒண்ணு. இங்கே தேன்மொழி அக்காவும் நானும் பெத்து போட்டாத்தான் உண்டு’

’தேன்மொழி அக்கா கதையை சாவகாசமா கவனிச்சுக்கலாம். மத்தப்படிக்கு உனக்கு என் முழு ஆதரவு உண்டு..

‘ஈசா, இவனுக்கு புத்தி கொடேன்’ களைத்த குரலில் இருகரமும் கூப்பிப் பிரார்த்தனை செய்தாள். மூடிய இமைகளை மெல்ல நீவியபடி சொன்னேன் – ஜேசப்பா பேச வந்த விஷயத்தை உடனே சொல்றது எப்படின்னு இந்தச் சிறுமிக்குப் புத்தி தாரும்.. உம் ராஜ்ஜியமே வருக’.

என் கைகளை உடனே விலக்கி எழுந்து நின்றாள் கயல். பார்வையில் வெப்பம் ப்டர்ந்தது.

’என்ன, மதம் மாறியாச்சா? புதுப் பெயர் என்ன? ஜியார்ஜ் கோஷியா, ஜோஸ் வெர்கீஸா? கல்யாணம் என்னிக்கு? எந்த சர்ச்? நான் பொண்ணுக்குத் தோழியா தரையிலே புரளப் புரள வெள்ளை சேடின் பாவாடை கட்டிக்கிட்டு வரட்டா? ஜோசபினுக்கும் உனக்கும் என்ன கிப்ட் தரணும்? சோபா கம் பெட்.? மிக்சி? பத்தமடைப் பாய், தலகாணி?

கோபமே இல்லாமல் சொன்னாள். ஆனாலும் உஷ்ணம் தகித்தது.

’சர்ச், கோவில், மசூதி.. நல்லதே கொடுத்துக்கிட்டு இருக்கட்டும். கல்யாணமும், பேப்டிஸமும், அன்னப் பிரஸ்னமும், மார்க்கக் கல்யாணமும், வித்யாப்யாசமும், நிக்காவும், துலாபாரமும் நடத்தி எல்லோரும் நல்லா இருக்கட்டும். சர்வே ஜனா சுகினோ பவந்து’.

’அடடா, பகவத்கீதை எல்லாம் சொல்றியே’ பழித்தாள் உதடு சுழித்து. இதுவும் ஓர் அழகு தான் இவளிடம். இன்னும் எத்தனை உண்டோ.

’வேணாம் இது இப்போதைக்கு முடியாது.. நீ பத்து வரிகளுக்கு மிகாமல், பூட்டோடு என்னை வரச் சொல்லிக் கட்டளை பிறப்பித்தற்கு முன்கதை சொல். உயிரே’.

’மிகுந்தால் என்ன பண்ணுவே’?

’வரிக்கு அஞ்சுன்னு’. ..

‘கொடுப்பியா’?

‘இல்லே மடியிலே படுக்க வைச்சு நீ தரணும்’.

‘வேறே பொண்ணைப் பாரு’.

‘இது முடிச்சதுக்கு அப்புறம் போகறேன் .. இந்தத் தெருவிலேயே ரெண்டு பார்த்து வச்சிருக்கேன்… முக்கியமா அந்தக் கோடி வீட்டுலே சுருட்டை முடியும் காதிலே ஜிமிக்கியுமா ஒரு ரெட்டை ஜடை’.

கயல் பளாரென்று அறைந்தாள். ‘ரத்தக் கண்ணீர் எம் ஆர் ராதா மாதிரி கையும் காலும் அழுகி அலஞ்சு அலஞ்சு சாகப் போறே’ என்று சபித்தாள்.. மனம் சிரித்தாலும் கன்னம் வலித்தது.

நான் மொழுமொழுவென்று கயலுக்கு வாய்த்த அவள் கையையும் கொலுசு கவ்விய கணுக்காலையும் பார்த்தபடி நின்றேன்.

’எண்ணெய் தேச்சுக் குளிச்சியாடி? கண்ணைப் பறிக்குது கையும் காலும்’.

‘இனிமே உனக்கு முன்னாடி கோஷா தான் போட்டுட்டு வரணும். கண்ணாலேயே நீ நீ.. கர்ப்பமாக்கிடுவே’.

அவள் இரண்டு கையாலும் முகத்தைப் பொத்திக் கொள்ளக் கைகளை விலக்கி இன்னொரு தடவை அந்த உதடுகளைச் சிறைப் பிடித்தேன்.

விஷயத்துக்கு ஒருவழியாக வந்தாள் கயல் அதாவது நான் வர அனுமதித்தேன்.

’கல்லாடச் சித்தர்னு கேள்விப் பட்டிருக்கியா’ என்றாள் கயல்.

’இப்பத்தான் கேக்கறேன்’.

’திடீர்னு போன மாசம் ஒரு ஞாயித்துக்கிழமை சித்தாந்த சாமி மடத்துலே போய் உக்கார்ந்துக்கிட்டார்டா’.

‘பத்மாசனம் போட்டா’?

‘பத்மா ஆசனம் போடலே அவரே தான் போட்டுக்கிட்டு உக்காந்தது’.

’எங்கே இருந்து வந்தார்’?

‘தெரியாது’.

’கேட்கலாமில்லே’?

‘எதுக்கு’? எனக்குப் பதில் தெரியவில்லை.

’இங்கே யார் வேண்டப்பட்டவங்க’?

‘ரிடையர்ட் ஜட்ஜ் நாலு வீடு தள்ளி இருக்கார். அவர் பெயரைச் சொன்னார்’.

ஜட்ஜ் கிட்டே கேட்க வேண்டியதுதானே’.

’எங்கே… அவர் நைஸுக்குப் போய் நாலு மாசமாச்சு’.

’எங்கே போனார்னு சொன்னே’?

பேச்சை அந்தரத்தில் விட்டுவிட்டு கயல் பாய்ந்து வந்தாள்.

’டேய் நீ இப்போ பார்த்தே இல்லே…. இல்லேன்னு சொல்லு பார்க்கலாம்’. அவள் என் கண்ணைக் குத்துகிற மாதிரி விரல் நீட்டினாள். அவளுடைய இடையில் வைத்த கண்ணை அவசரமாக நகர்த்தினேன்..

’எங்கே பார்த்தேன்’? விடாப்பிடியாகக் கேட்டேன்.

’உனக்கே தெரியும்’.

’தெரிஞ்சா பாக்காம எப்படி இருக்கறது’?

அந்தக் கறுப்பு தாவணிக்கு வாய் இருந்தால் சிரிக்கும். இடுப்பை இன்னும் இறுக்கி மேலே சாக்லெட் உறை போல சிக்கென்று பரவிப் படர்ந்து அவளை இன்னும் எடுப்பாகக் காட்டியது. கயல் ஓ கயல்.

சரி, கல்லாடச் சித்தர் ஒரு ஞாயிற்றுக்கிழமை சித்தாந்தசாமி மடத்துக்கு வந்தார். அப்புறம்?

‘பசிக்குதுடா’.

கயல் பரிதாபமாகச் சொல்ல மேற்கொண்டு கதை கேட்க விருப்பம் இல்லை. அவளை என்ன காரணத்துக்காகவோ பட்டினி போட்டு நிலவறையில் தள்ளிச் சாட்டையால் அடிக்கிறதாகக் கற்பனை செய்து, அந்தப் போலிச் சாமியாரை சற்றே என் காலால் உதைத்தேன். கயலின் பசித்த முகம் பார்த்து, உதைத்தது போதாது என்று பட ஓங்கி சொல்லக் கூடாத இடத்தில் மிதித்தேன். கல்லாடச் சித்தா, நைந்து ஒழிந்து போ.

சைக்கிளில் பின்னால் வைத்து கயலை நான் ஓட்டி வந்து நிறுத்தியது கேளு நாயர் ஐயப்பா அஞ்சு நட்சத்திர ஓட்டல் என்று பெயர் மரக் க்தவில் எழுதிய இடத்துக்கு. ஆப்பாயில் முட்டை, ஆப்பம், ஸ்டூ, புட்டு கடலை என்று கதவிலேயே எழுதி இருந்த மெனு.

ஒரு புட்டும் கடலையும் ஓர்டர் செய்தேன் கேளு நாயரிடம். இவிடெ வச்சுக் கழிக்க என்று சொல்லிக் கயல் முகத்தைப் பார்க்க, அடக்க முடியாமல் சிரிப்பு பொங்கி வழிந்தது அவளுக்கு. இப்போ என்ன, நீங்க சாப்பிடுவீங்க, நாங்க கழிப்போம் என்றேன். சிரிப்பு ஓயவே இல்லை.

நாயர் சுடச்சுடப் புட்டும் கடலையும் வைத்துவிட்டு உள்ளே போனார்.

’பலகாரம் வேண்டாம்டா அப்பாவுக்குத் தெரிஞ்சா ஏசுவார்’.

’எதுக்காக ஏசுவார்? சாப்பிட்டாவா’?

’சாப்பிட்டா தப்பில்லே. ஆனா அது இயற்கை உணவா இருக்கணும்’..

‘இது இயற்கையா விளைஞ்ச நெல்லை அரைச்சு இயற்கையான தண்ணியைக் கலந்து அசல் நாயர் செஞ்ச புட்டு, சாப்பிடு’ என்றேன்.

கயல் ஆவலோடு நீளக் குழலாக இருந்த புட்டை உதிர்த்து எடுத்து வாயில் இட்டாள். அவள் முகவாயிலும் உதட்டிலும் தங்கிய துகள்களை ஒற்றி எடுத்து உண்டபடி கேட்டேன்.

’இயற்கை உணவா? அப்படீன்னா’?

’எப்படி சொல்றது.. சரி.. கேளு .. எங்க வீட்டுலே ரெண்டு நாளா இதுதான் மெனு – காலையிலே எழுந்ததும் தேங்காயைத் துருவிப் பிழிஞ்சு ஏலக்காய் பொடிச்சுப் போட்ட, காய்ச்சாத தேங்காய்ப் பால்.’

’எப்போவாவது குடிக்கலாம். தினமும் குடின்னா குமட்டுமே’?

’என்ன பண்ண? அதுதான் தினசரி நடைமுறை இனிமே’.

‘.அட கண்றாவியே அப்புறம்’?

’குளிர்ந்த தண்ணீர்லே சோப் கூட போடாம குளிச்சிட்டு ஆளுக்கு நூறு கிராம் வெண்டைக்காய், ஐம்பது கிராம் புடலங்காய், ஒரு தேக்கரண்டி மொச்சை, அதே அளவு ஊற வச்ச கொண்டைக்கடலை, ஒரு பச்சை மிளகாய், ஒரு பூவன் வாழைப்பழம்… காலையிலே பசியாற.. ப்ரேக்பாஸ்ட் இது’

’இத்தனையும் கலந்து போட்டு சமைச்சா எப்படிச் சாப்பிடறது’?

’சமையலா? அடுப்பு கிட்டேயே போக கூடாது.. பச்சையாத் திங்கணும். அதுவும் வாயிலே போட்டதை நல்லா ரெண்டு நிமிஷம் சவச்சு இறக்கணும்’.

அவள் என் கைக்குட்டையை உருவி சாவதானமாக எச்சில் கையைத் துடைத்து விட்டு எழுந்தாள்.

’இது யாருக்கு? காக்காய்க்கா’? மிச்சம் இருந்த புட்டையும் கடலையையும் காட்டிக் கேட்டேன்.

’உனக்குத்தான்.’

‘சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அப்படித்தான். பொண்டாட்டி சாப்பிட்ட எச்சலை புருஷன் தின்னா ரெண்டு பேருக்கும் சொர்க்கமாம்’

‘நீ ஜோசபினைக் கட்டிட்டு கிறிஸ்துவ சொர்க்கத்துக்கு போ.. நான் தனியா எங்க ஜாதிஜனம் இருக்கற சொர்க்கத்துக்குப் போறேன்’.

‘அப்படி ஒண்ணு இருக்காது.. இருந்தாலும் காலியா இருக்கும்’ என்றேன். எதிரே நின்றபடி சிரித்தாள்.

‘’உட்கார்ந்து மீதிக் கதையைச் சொல்லு. இத முடிச்சுடலாம்’.

நான் கிள்ளித் தின்றேன். கல்லாடச் சித்தர் ஞாயிற்றுக்கிழமை பகல் பொழுது ராகுகாலம் கழிந்து ஏழெட்டு ஊர்ப் பெருமக்களைச் சந்தித்து இயற்கை உணவு பற்றி சொல்லி நோட்டீசும் கொடுத்தாராம். சமையலறையே சாத்தான். சமைத்து உண்பது விஷத்தை உண்பது. இயற்கையை உண்ணுவீர் உடல் நலம் பேணுவீர் என்று போட்ட பிட் நோட்டீஸ்களாம் அதில் பலதும்.

நாயர் கொண்டு வைத்த டீயை ஆளுக்குக் கொஞ்சமாகக் குடித்தோம்.

’ஏன் கேக்கறே. அந்த சித்தர். ’.. கயல் சிரிக்க ஆரம்பித்தாள்

சித்தர் காலையிலே டாய்லெட் போய் வந்தால் கம்மென்று மணக்க மணக்க மல்லிகைப் பூ வாசனையாக இருக்குமாம்

உவ்வே என்றேன். அதை எல்லாமா ஒருத்தன் சாதனையாக்ச் சொல்வான்?

’அவர் சொல்றாரோ இல்லையோ, அவரோட சிஷ்யகோடிகள் அதைச் செஞ்சுடறாங்க. தெரு முழுக்க, எங்க பேட்டை முழுக்க அவருக்கு ஆட்பட்டாச்சு. தினம் ஒரு வீட்டுலே சத்சங்கம். ’

’சத்து மாவு திங்கறதுக்கா’?

’உனக்கு சிரிப்பா இருக்கும்டா. சின்னப் பிள்ளைகளுக்கு மட்டும் அதாவது பத்து வ்யசுக்குக் கீழே இருக்கற பசங்களுக்காக காய்ச்சின பால்லே கலந்த சத்து மாவு உருட்டித் தரலாம். மத்தவஙக், காய்ச்சாத பாலோடு தான் அதை சாப்பிடணும்.’

‘கொடுமையோ கொடுமை கண்ணம்மா’..

இந்தக் கூத்துக்கு சட்டம் எடுத்துக் கொள்வது என்று சடங்குப் பெயராம். அடுப்பே சாத்தான் என்று நாலு தடவை முழங்கி ஸ்டவ் அடுப்பை உடைத்துப் போட்டு, அது ஒரு ரகளையாம். கயல் வீட்டில் அந்தப் பேட்டைக்கே முதல்முதலாக சமையல் எரிவாயுவுக்குப் போயிருந்ததால் உடைக்க ஏதுமில்லையாம். மற்றபடி ஊருக்கு முதல் குடும்பமாக பார்வேந்தனார் ஏற்பாடு செய்து சட்டம் எடுத்தானது.

சத்சங்கம் முடிச்சு அம்மா வந்திருப்பாங்க’

தெருமுனையில் இறங்கி எனக்கு முன்னால் கயல் அவசரமாக நடக்க, நான் சைக்கிளில் பின் தொடர்ந்தேன். மதிமுகத்தம்மாள் வந்திருக்கவில்லை.

கயல் கதவைத் திறந்து என்னை உள்ளே அழைத்தபோது அம்மா வந்தாள்.

மதிமுகம் வாடியிருந்ததைக் கவனித்தேன். உடம்பும் தளர்ச்சி கூடி இருந்தது. உடம்பு சரியில்லாதவர்கள் நல்ல ஆரோக்கியத்தோடு நான் இருக்கிறேன் என்று காட்டிக் கொள்ள வலிந்து சிரிக்கும் சிரிப்பும் மிகையாகக் கையைக் காலை ஆட்டுவதுமாக இருப்பார்களே, மதிமுகத்தம்மாளைப் பார்க்க அதுதான் நினைவு வந்தது.

’ஆண்ட்டி, ரொம்ப உற்சாகமா இருக்கீங்களே, நெல்லிக்கனி ஏதாவது உண்டீர்களா’?

’நீ ஒண்ணு தம்பி, அது ஒண்ணு தான் பாக்கி. ஞாபகம் இல்லே போலே. சொன்னா அதையும் மார்க்கெட்டுலே வாங்கி மூட்டை கட்டிக் கொண்டு வந்து கொட்டி, பகல் சாப்பாட்டுக்கு வச்சுக்கோன்னுடுவாரு’.

’அட பாவமே, ஏன் இப்படி ஆச்சு? வாய்க்கு ருசியாச் சாப்பிடக் கட்டுப்பாடாமே’

’கட்டுப்பாடு எல்லாம் இல்லே. நல்லதைத் தின்னு நல்லதைப் பேசி நல்லதை நினைச்சு நல்லா இருப்போமேன்னு தான்’.

’ஆண்ட்டி பாருங்க நீங்களே மேடையிலே பேசற மாதிரி அழகா அடுக்கறீங்க .. நெல்லிக்கனி எபக்டே தான்’.

சாதா நாளாக இருந்தால் இந்தக் குளிர்ச்சியில் சிலிர்த்து சூடான காப்பியோ எலுமிச்சம்பழ ஷர்பத்தோ கொடுத்திருப்பாள்.

’இரு கொஞ்சம் முருங்கை இலைச் சாறு எடுத்து வரேன். ஒரு அரை மூடி தேங்காய் தரட்டுமா இல்லே உடச்ச காயைத் தரேன் நீ பல்லாலே துருவித் தின்னுக்கறியா’? கயல் அம்மா என்னை உபசரித்தாள்.

பல்லால் தேங்காய் மூடியைத் துருவித் தின்ன நான் என்ன அனுமான் அவதாரமா? சட்டென்று மனதில் வந்த ஓவியக் காட்சியில் கயல் வீட்டுத் தோட்டத்தில் ஆளுக்கொரு தென்னை மரமாக ஏறிப் போய் உட்கார்ந்து மட்டைத் தேங்காய் உரித்து தலையில் மோதி உடைத்து நீண்டு வளைந்த பல்லால் துருவித் துருவித் துருவித் தின்கிற பார்வேந்தர் குடும்பம் ஒரு வினாடி கடந்து வந்தது. கச்சையும் இடுப்பில் மேகலையும் பல்லவமும் இன்னும் ஏதோ சங்க கால நகையுமாக அந்தக் கோலத்திலும் கயல் டக்கராகத்தான் இருந்தாள்.

’வாடா இந்த மரம் காலியா இருக்கு’. கயல் கை காட்ட நான் பக்கத்து மரத்தில் ஏறும்போது எனக்கு வால் முளைத்துக் கொண்டிருந்தது.

’இன்னும் எத்தனை நாள் ஆண்ட்டீ இந்த விரதம்’?

’விரதம் இல்லேப்பா. சட்டம் எடுத்துட்டிருக்கோம். இனிமேல் எப்பவும் இப்படித்தான்’.

’ஐயையோ கயலும் கூடவா’?

’அவளுக்கு கல்யாணம் ஆகி உங்க வீட்டுலே என்ன சொல்றீங்கன்னு பொறுத்தது அது’

நான் உச்ச பட்ச சந்தோஷத்தில் திக்குமுக்காடிக் கொண்டிருந்தேன்.

கயலை இருபத்து நாலு மணி நேரமும் பக்கத்திலேயே உட்கார வைத்துப் பார்த்துப் பசியாறினாலும் இந்த சந்தோஷம் கும்மாளி கொட்டிக் கொப்பளித்து வராது. மதிமுகத்து அம்மாளுக்கு மனதில் ஆயிரம் நன்றி சொன்னேன். அத்தை என்று கூப்பிடத் துடித்தேன்.

இவ்வளவு பிரியமும் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் இருக்கிறவர்கள் இப்போதே கயலை என் பொறுப்பில் விடலாம் என்று தோன்றியது. ஐந்தாறு வருஷம் தேங்காய் தின்று கல்யாண நேரத்தில் அவள் பல்லெல்லாம் உள்ளே வளைந்து போகுமோ. அல்லது பச்சை வெண்டைக்காயும் மிளகாயும் புடலங்காயும் தின்று தின்று காய்கறி வாசனை கமகமக்க வருவாளோ.

சட்டம் ஏற்பதின் மகிமையை என்னிடம் சாங்கோபாங்கமாக விளக்க மதிமுகத்தம்மாள் முற்பட்டபோது ’ஆண்ட்டி ஏற்கனவே நீங்க சரியாச் சாப்பிடலே இதுலே ரொம்ப பேசினா சிரமமா இருக்கும். நான் வீட்டுக்குப் போறேன்’ என்று கிளம்பினேன்.

‘அடுத்த வாரம் காலேஜ் திறக்கறாங்க. கடைசி வருஷமாச்சே படிப்புலே கவனம் வைக்கப் போறீங்க தானே ரெண்டு பேரும்?’

’நிச்சயம் ஆண்ட்டி’.

’நல்லா படியுங்க. நல்லா வரணும். தேன்மொழி தான் வாய் ஓயாமச் சொல்லிட்டு இருக்கா. எனக்கு இஷ்ட்ம் தான்.. கயல் அப்பா தான் எப்படின்னு தெரியாது. கடிப்பார்னு போனா கட்டிப்பார். கொஞ்சுவார்னு நின்னா கொட்டுவார்’, கயல் அம்மா கனிவாகப் பார்த்தபடி சொன்னாள்..

’உங்களை கொஞ்சிட்டுக் கட்டிப்பாரா, கட்டிக்கிட்டுக் கொஞ்சுவாரா’?

’போங்க தம்பி’. நாணுகிற மதிமுகத்தம்மாள் கயலை விடப் பேரழகு.

காபி ஹவுசில் லெச்சுவும் சகாக்களும் கடுங்காப்பி குடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.

’பால் வந்து சேரலையாம் மச்சி. அநியாயத்தைப் பாரு. கஷாயம் மாதிரி ப்ளாக் காபி. அதுக்கும் ரெண்டு ஸ்பூன் மேலே சக்கரை கிடையாதாம். சவரிராயன் அண்ணாச்சி சர்வாதிகாரம் ஒழிக’.

ப்ரான்ஸ்வாவைத் தொடந்து கோஷ்டியாக ஒழிக போட, வெயிட்டர் சவரிராயன் ரெண்டு கையையும் கருடாழ்வார் மாதிரிப் பரத்தி நின்று அறிவித்தார் –

’என் தங்கக் குடங்களா, பால் வந்தாச்சு. சத்தம் போடாம உக்காருங்க. தரச் சொல்றேன்.’

’நாடகம் எத்தனை பக்கம் வந்திருக்கு’?

லெச்சு என்னைக் கேட்க, பகீர் என்றது. காலையில் தான் மணல் பூக்கள் என்று தலைப்பு மட்டும் எழுதி ஆரம்பித்தேன். ஜோசபின் விஷயமாக அலைந்து கொண்டிருந்தபோது அவன் சொன்னதை நான் முழுக்க மறந்திருந்தேன். ஜோசபினிடமாவது சொல்லி வைத்திருக்கலாம். அடிக்கடி மென்மையாக ஞாபகப் படுத்துவது மட்டுமில்லை, பிரியமாக செல்லக் குரலில் நச்சரித்து எழுத வைத்திருப்பாள் அந்த வனமோகினி.

ஜோசபின் நினைவு வந்ததுமே இருப்புக் கொள்ளவில்லை. அவளிடம் நிறையப் பேச வேணும். முக்கியமாக கயல் அம்மா சொன்னதை ஒரு வார்த்தை, கமா, புள்ளி விடாமல் சொல்ல வேண்டும். நிச்சயம் ரசிப்பாள். நாம எப்போ கல்யாணம் கட்டிக்கிறது என்று கேட்பேன்.

’என்னடா நாடகம் பத்தி கேட்டா பிரமை பிடிச்ச மாதிரி உக்கார்ந்துட்டே. கதை என்ன அதையாவது சொல்லு’.

லெச்சு கேட்க, அந்துவான் ‘மச்சான் மச்சான்’ என்று எதற்கோ அடிபோட்டுக் கொண்டிருந்தான்.

கதைச் சுருக்கும் சொல்லுடா என்று திரும்ப வற்புறுத்தினான் லெச்சு. எழுதினால் இல்லே சொல்ல? காலையில் பிள்ளையார் சுழி போட்டு எழுத ஆரம்பித்த நேரம் கயல் டெலிபோன் செய்து என்னையும் என் எழுத்தையும் கடத்திப் போய் விட்டாள். போதாக்குறைக்கு இந்த கலலாடச் சித்தர் விஷயம்.

’பசங்க எத்தனை கதாபாத்திரம் இருந்தாலும் பிரச்சனை இல்லே. பொண்ணுங்க் தான் லிமிடெட் ஆக வைக்கணும். ஆள் பிடிச்சு ந்டிக்க வைக்கறதுக்குள்ளே மூச்சு முட்டிப் போயிடும்’.

வைத்தே சொல்ல எல்லோரும் ஆதரித்தார்கள்.

’கொஞ்சமா டயலாக், பார்க்க லட்சணமா இருக்கற பொண்ணு அப்படி வர்ற மாதிரி எழுது என்று சிற்சபேசன் யோசனை சொன்னான். நல்லா வாட்ட சாட்டமா எடுப்பா இருக்கற பொண்ணா வேணும் என்றான் பிரான்ஸ்வா. கருப்பா இருக்கட்டும், அப்போ தான் ஸ்டேஜ் விளக்கிலே அம்சமா வரும் என்றான் வைத்தே.

‘இவன் கேர்ள் பிரண்ட்கள் மாதிரி வரணும்’ என்னைக் காட்டி லெச்சு சொன்னான். ரொம்பப் பெருமையாக இருந்தது.

யாரைக் கதாநாயகியாக நடிக்கச் சொல்லிக் கேட்டுக் கொள்ளலாம் என்று பேச்சு திருமப நான் எதிர்பார்த்த படியே. ஜோசபினையும், கயலையும் கேட்டுப் பார்க்கச் சொல்லி யோசனைகள். பிடிவாதமாக நிராகரித்தேன்.

நானே வேணும்னா ஸ்திரி பார்ட் போடறேன்.. அவங்களைக் கேட்காதே என்று மன்றாடி அவர்களைப் பேச்சில் இருந்து விடுவித்தேன்.

’ஹீரோயின் வந்தாச்சு’

திடீரென்று லெச்சு சத்தமாக அறிவிக்க எல்லோரும் வாசலைப் பார்த்தோம்.

மோட்டார்பைக்கை நிறுத்தி விட்டு ருழேப் பொண்ணு வந்து கொண்டிருந்தாள். கூடவே அமேலி.

என் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. நாலு நாள் ஜோசபினைச் சந்திக்காமல் இருந்து அவள் வரும்போது தூரத்தில் இருந்து பார்க்கிற உணர்வில்லை இது. அங்கே பீரிட்டுப் பொங்கும் நேசம் முகம் இல்லாதது. அந்த அன்புக்கு நிறைவான விளக்கம் தர முடியாது. அவள் நானாகவும் நான் ஜோசபினாகவும் இருந்து தான் அதை இன்னொரு முறை நிகழ்த்த முடியும்.

ஒரு வாரம் ஏதேதோ காரணத்தால் என் கயலைச் சந்திக்க முடியாமல் போய் கண்ணுக்குள்ளேயே இருக்கும் அவள் தெருமுனையில் சைக்கிளில் மிதந்து வரும்போது மனது தளும்பிப் பிரவாகம் கொள்ளும் பாசமும் இல்லை இது. பிள்ளைக் காதலும், நம்பிக்கையும், சின்ன ரகசியங்களைப் பகிர்ந்து கொள்வதில் சந்தோஷமும், சிறு பூசலும், சமாதானமுமாக பொங்கிப் பிரவகிக்கும் அன்பின் வெளிப்பாடு அது.

அமேலியைப் பார்க்கும் போது எனக்கு ஏற்படும் அற்புதமான உணர்ச்சிக்கு என்ன பெயர்? அவள் ஏவாள், நான் ஆதம். இது ஈடன் தோட்டம். முதல் தடவையாகச் சந்திக்கிறோம். ஒவ்வொரு சந்திப்பும் முதல் சந்திப்பு தான். சேர்ந்து எரிந்து தான் இந்தத் தீ தணியுமோ.

அமேலி என்னைத்தான் பார்த்தபடி வந்து கொண்டிருந்தாள். ஒரு வினாடி காலடியில் பதிந்த அந்த விழிகள் மறுபடி உயரும். உயர்ந்து என்னை விழுங்குவது போல் பார்க்கும் மீண்டும் மீண்டும் மீண்டும். மெலிந்திருக்கிறாள். என் கனவுகளைக் காவு கொள்ளப் போகும் உடல் அவளுக்கு. மனதில் எழும் மிருகத்தைத் துரத்தி விட்டு, அலாதி சோபையோடு நடந்து வரும் அமேலியை எதிர்கொள்ள ஓடினேன்.

எப்படி இருக்கே? கண்ணால் விசாரித்தாள். அவள்

வைத்த கண் எடுக்காமல் பார்க்கும்போது ருழே பட்டென்று என் முன் கை சொடுக்கி உறங்கிட்டியா என்றாள். அமேலி என்ற கொல்லிப்பாவையை நினைத்தாலே உறக்கம் போயொழியாதோ?

அரசவைக்குப் பேரரசியைக் கூட்டி வரும் ராஜ ஆராதகனாக அமேலி கைபற்றி அழைத்துக் கொண்டு நான் உள்ளே மெல்ல நடக்க, லெச்சுவும் மற்ற சகாக்களும் உற்சாகமாகக் கை தட்டினார்கள். காபி சாப்பிட்டுக் கொண்டிருந்த பிரஞ்ச் முதிய தம்பதியும், லுமும்பா பல்கலைக்க் கழகம் கலாசாரத் துறை என்று எழுதிய கருப்பு ஸ்போர்ட்ஸ் சட்டை போட்ட கருப்பர் இனக் கல்லூரிப் பெண்களும், சவரிராயன் மற்றும் இதர வெயிட்டர்களும் கூடக் கைதட்ட ராணி கம்பீரமாகக் கை அசைத்து வந்து என் பக்கத்து நாற்காலியில் அமர்ந்தாள்.

அமேலிக்கும் ருழேக்கும் காப்பி சொன்னபோது,, அமேலி திரும்பக் கையசைத்து பிளாக் காபி என்றாள். கொஞ்ச நேரம் முன்பு வரைக்கும் அதான் எல்லோருமே குடிச்சிட்டிருந்தோம் என்றான் லெச்சு.

அமேலியை உற்றுப் பார்த்தேன். அவளிடம் ஏதோ மாற்றம் தெரிந்தது. தழையத் தழைய இருந்த கருங்கூந்தலைச் சின்னதாகச் செதுக்கி சற்றே சிவப்பாக ஒரு சாயமும் தோய்ந்த்திருந்ததாகத் தோன்றியது. கண்கள் இன்னும் காந்தமாக இன்னும் பெரியதாக இன்னும் கூர்மையாகத் துளைக்கிறவையாக உற்று நோக்கின. செழுமையாகத் திரண்ட செவ்விதழ்களையும் துடித்தெழுந்து நின்ற கனத்த மார்பையும் பார்க்கக் கூடாது என்று கட்டுப்ப்டுத்தினாலும் கண் அங்கே தான் நிலைக்கிறது. என் தவிப்பை அமேலி ரசிக்கிறாள் என்று தெரியும்.

இளைச்சுப் போயிட்டே அமீ என்றேன். பொய் என்றது அந்த மார்பு.

’இளைச்சுட்டேனா? ஈபில் டவர்லே தினம் ஏறி இறங்கிட்டிருந்தேன் அதான்.’.

அவள் என்னைப் பார்த்துச் சிரித்ததற்கு அர்த்தம் புரியவில்ல என்றாலும் மற்றவர்கள் சிரித்ததால் நானும் சிரித்து வைத்தேன்.

’நீ வரமாட்டேன்னு நினைச்சோம்’ என்றான் ப்ரான்ஸ்வா.

’எதுக்கு வந்தா இவன்னு இருக்கும் சில பேருக்கு. அதுக்காகத் தான் வந்தேன்’.

அவள் சுவாதீனமாக என் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள். விரலால் சதுரம் அமைத்து என் முகத்தை அதனூடே பார்த்தாள்.

’நீ இந்த கோணத்திலே அட்டகாசமா இருக்கே ஷான் கானரி மாதிரி’.

ருழே பொண்ணு தவிர மற்றவர்கள் காதிலிருந்து கரி ரயில் இஞ்சின் மாதிரி புகை வர, கிறங்கடிக்கும் பார்வையோடு என்னைப் பார்த்துச் சொன்னாள். மெர்சி சொன்னேன். மேஜைக்குக் கீழே என் உள்ளங்கையை நகத்தால் சுரண்டினாள்.

எனக்கு ஷகொலா எடுத்து வந்திருக்கியா என்று கேட்டேன். பதிலாக என் காதில் ரகசியமாக அவள் கிசுகிசுத்ததோடு ஒப்பிட்டால் பிரஞ்ச் கிஸ் சுத்த சைவம்.

அமைதியான அழகு சுடர்விட்ட பழைய அமேலி எங்கே போனாள்?

அவள் காப்பி அருந்த, அந்துவான் தான் மெல்லத் தொடங்கினான்.

’அமேலி டிராமாவிலே நீ ஹீரோயினா நடிக்கணும்னு நாங்க எல்லோரும் விரும்பறோம்’

எல்லோரும் ஓங்கிக் கைதட்டினார்கள். அந்த்வான் முழு வாக்கியத்தை நிறுத்தாமல் பேசியதற்கும் சேர்த்து ஏற்பட்ட மகிழ்ச்சி அது.

’ஐயோ, எனக்கு எல்லா சப்ஜெக்டும் அரியர்ஸ் விழுந்திருக்கு. ஒரு நண்பன் எல்லா உதவியும் செய்வான். நினைச்சது முழுக்கச் சாதிக்கலாம்ன்னு கிரிஸ்டல் பார்த்து பாரீஸ் ஈபில் கோபுரம் கிட்டே ஒரு மந்திரக்காரி ஜோசியம் சொன்னா. மும்முரமா இனி படிப்புதான்’.

அமேலி சொல்லியபடி என்னைப் பார்த்தாள். எனக்குப் புரிந்தது.

’சரி அமேலி அரியர்ஸை க்ளியர் பண்ணட்டும். ருழே நீ எப்படி’? லெச்சு கேட்டுக் கொண்டே இருக்க ருழே எங்கேயோ பார்த்தாள்.

’உன்னைத் தான் சாந்தி ரோஜர்’ என்றேன் நான் வேணுமென்றே.

’ரோஜர்னு ஒரு பிள்ளையும் இல்லே. நான் சாந்தி ருழே’..

அவள் பாய்ந்து வர, நான் எழுந்து அவள் தோளில் அழுத்திக் கிடுக்குப் பிடி போட்டு உட்கார வைத்தேன்.

இந்தப் பையன் இருந்தா இனிமே வரமாட்டேன் என்று பொய்க் கோபம் காட்டினாள் ருழே. சாரி சொன்னேன். காவாலே போடு என்றாள். அதாவது? அமேலியைப் பார்க்க அவள் சாக்கடையில் போடச் சொல்றா என்றாள். அமேலியின் கால் விரல்கள் டேபிளுக்குக் கீழே மெத்தென்று என் கால் விரல்களோடு பிணைந்து விளையாடிக் கொண்டிருந்தன்.

’யாராச்சும் ப்ரஞ்ச்லே தமில் எலுதினா பேஸ்டுவேன்’ என்றாள் ருழே.

லெச்சு உடனே வழி சொல்லி விட்டான். என்னைக் காட்டி, இவன் ஒரிஜினலை எழுதி அமேலி கிட்டே தரட்டும். அமேலி உனக்கு ப்ரஞ்சுலே அதை எழுதிக் கொடுத்திடுவா. சரியா?

’அம்ஹஸ் மா மோன் அமு, செர் ம ஃபோ இப்படி எல்லாம் வசனம் இருந்தால் பேச மாட்டேன்’ என்றாள். நான் அமேலியைப் பார்த்தேன்.

’உனக்காக உயிரையும் கொடுப்பேன், நீ இல்லாமல் நான் இல்லை இப்படி எல்லாம் செயற்கையா வசனம் இருந்தா பேச மாட்டாளாம்’

’இல்லாம எழுதித் தரேன்’ என்றேன்.

எல்லோரும் போன பிறகு நானும் அமேலியும் புறப்பட்டோம். கொண்டு போய் விடு என்றாள் அதிகாரமும் உரிமையுமாக.

‘அமீ, எங்கே போகணும் நீ?

‘அதே லலி தொலெந்தால் தெரு.. கர்ன்ல வீட்டுலே பேயிங் கெஸ்ட். உனக்கு ரொம்பப் பிடிச்ச் இடம் இல்லியா’?

மனதில் சட்டென்று எங்கோ பூட்டுத் திறந்தது. நுரைத்து போதையேற்றும் நெடியோடு திரவம் ஏதோ வெள்ளமாகப் பெருகி மூச்சு முட்ட வைத்துச் சூழ்ந்து உள்ளே அழுத்தியது.

என் சைக்கிளை அமேலி தள்ளிப் போக, எதுவும் பேசாமல் கூடவே நடந்தேன்.

இருட்டான தெருக் கோடியில் சைக்கிளை சமிதிக் கட்டிடச் சுவரில் சார்த்தி விட்டு வாடா என்றாள்.

என் தோள்களில் தன் கையிரண்டையும் மாலையாகப் படர வைத்து, தலையை அவசரமாகக் கீழே இழுத்துத் தன் தலையில் முட்ட, கண்கள் மூடி சற்றே குதிகால் உயர்த்தி அணைத்தாள்.. உதடுகளை உதடுகள் கொண்டு உணர்ந்து அவள் அளித்த உக்கிரமான, உள்ளே தீ பரவ வைத்த முத்தம் அது.

அவள் இதழ்கள் தீண்டிப் போன உதட்டில் பாஸ்பரஸ் தீற்றிய மாதிரி எரிந்து முகத்தைத் தகித்தது. என்னையும் பற்றிப் படர ஆரம்பித்த அக்னி அது.

’அம்ஹஸ் மா மோன் அமு, செர் ம ஃபோ’.

’அது செயற்கையானதுன்னு சொன்னியே.. நான் எழுத மாட்டேன் அபபடி’. மென்மையான காது மடலை மெல்லக் கடித்தேன். தலை உயர்த்திப் பார்த்தாள்.

’நிஜமான அர்த்தம் சொல்றேன் கேளு.. கிஸ் மி மை லவ், ஹக் மீ .. ஹோல்ட் மி டைட்… கமான்..’

இறுகத் தழுவினாள் அமேலி. கிறங்கி வழிகிற கண்கள். மனதிலோ உடலிலோ புகுந்த பிசாசு எதுவோ கொண்டு செலுத்துகிற அசைவுகள்.

எங்கேயோ கதவு திறந்து கூட்டமாகப் பேசியபடி வந்தார்கள். தெருவில் நடமாடம் கூடுவதை உணர்ந்தேன்.

’அமேலி, இங்கே வேணாம். ரோடு ,, வீட்டுக்குப் போய்’ ..

’இருடா’

’அமி வா.. வீட்டுலே விட்டுட்டுப் போறேன்..

’ம ஷெரி.. செர் ம ஃபோ இறுககி இன்னும் இறுக்கி அணைச்சு. கிஸ் பண்ணுடா. மாட்டியா.. நான் பண்றேன்….

ஹெட்லைட் வெளிச்சம் தெரிந்தது. பேங்க் ஜீப்

டிரைவர் சின்னராஜு பக்கம் ஜீப்பின் தோல் வாரைப் பற்றியபடி அப்பா.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன