மனிதம் – விஸ்வரூபம் நாவலை முன் வைத்து


முந்தாநாள் (ஞாயிறு) விருட்சம் சந்திப்பு முடியும் நேரத்தில் ஓர் இளைஞர் என்னைக் கேட்டார் –

‘அது ஏன் சார் விஸ்வரூபம் நாவல்லே மகாலிங்கய்யனை ஒரு இடத்திலே ரொம்ப குரூரமானவனா சித்தரிச்சிருக்கீங்க? அவன் காமலோலனா இருக்கட்டும். திடீர்னு இப்படி கொடூரனாவானா என்ன?’

ஆழ்ந்து படித்து, யோசித்துக் கேட்ட கேள்வி அது.

அவர் குறிப்பிட்ட இடம் –

//பக்கத்தில் ஏதோ நொய்நொய் என்று சத்தம். என்னடா என்று திரும்பிப் பார்க்க ஒரு சிசு அழுது கொண்டிருந்தது. ஓரமாக நிழலில் ஒரு சாணிச் சுருணையை விரித்து அதைக் கிடத்தி விட்டு அதைப் பெற்றுப் போட்டவள் பிடுங்கின கரும்பை தோகை வெட்டிக் கொண்டிருந்தாள். கரும்பு யந்திரத்தில் போட வாகாக இதைச் சதா செய்யாவிட்டால் யந்திரம் ஓய்ந்து போய்விடும். மேனேஜர் துரை கத்துவான்.

பிறந்து நாலைந்தே மாசம் ஆன அந்த சவலைக் குழந்தை குரலைக் கேட்டதும் அந்தப் பெண்பிள்ளை கையில் எடுத்த தோகையையும் அரிவாளையும் அந்தப்படிக்கே தரையில் வைத்துவிட்டு நிழலுக்கு ஓடி வந்து குழந்தையை வாரி எடுத்தாள். முலையை எடுத்து அதுக்குக் கொடுக்க ஆரம்பிக்கிற வரைக்கும் பார்த்துக் கொண்டு ஒரு ஓரமாக நின்றேன் நான்.

அப்புறம் ஓங்கி அந்தப் பிரம்பால் அவள் முலை மேலேயே ஓங்கி அடித்தேன். திருட்டு முண்டே. வேலை நேரத்தில் என்ன சீராட்டிக் கொண்டு கிடக்கே? வரும்போதே இதையெல்லாம் முடிச்சிருக்கலாமில்லையா வேலைக்கு இடைஞ்சல் இல்லாமல்?

நான் சத்தம் போட அவள் என் காலில் விழுந்து குழந்தையையும் கிடத்தினாள். சாமி பால் பத்தாம அழுகிறான் பிள்ளை. பசி நேரம். நொய்க் கஞ்சி கொடுத்தா வாந்தி பேதியாவுது. வேறே வழி இல்லாம லயத்துலே இருக்கப்பட்ட காப்பிரிச்சி கிட்டே எல்லாம் கையேந்தி பால் பிச்சை வாங்கிட்டு இருக்கேன். இன்னிக்கு யாரும் தானம் தரலை. பிள்ளை உசிரு போகுது.

திரும்பக் குழந்தையை வாரியெடுத்த அவளை முடிக்க விடாமல் திரும்ப மார்க்காம்பிலேயே பிரம்பால் அடித்தேன். குழந்தை பிடிவாதமாகப் பிடித்த காம்பை விட்டு விட்டு வீரிடும்படி அதன் உதட்டிலும் அடி விழுந்திருக்க வேண்டும்.

அந்தப் பக்கம் தலையில் கரும்பு சுமந்து போன ஒரு கிழட்டு காப்பிரிச்சியைக் கூப்பிட்டு குழந்தையைப் பறித்து எறியச் சொன்னேன். அவள் நான் சொன்னது புரியாத பாவனையோடு அந்தச் சிசுவை வாரியெடுத்து ஓரமாக வைத்துவிட்டு அங்கே இன்னொரு காப்பிரிச்சிக்குக் கண்காட்டியபடிக்கு திரும்ப வந்தாள்.
//

ஏன் அப்படி?-

கரும்புத் தோட்ட வேலைக்குத் தாமதமாக வந்த பையனைச் சவுக்கால் காட்டடி அடித்து அவன் முதுகை ரத்த விளாறாக்குவதில் விழித்துக் கொளும் மிருகம் இது.

மகாலிங்கம் என்று இல்லை. மனிதத் துவத்தின், இயல்பான அன்பின், கருணையின் விளிம்புகளை சில நேரங்களில் ஒரு கண நேரத்திலாவது கடந்து இப்படியான ஆளுமைச் சிதைவு யாருக்கும் ஏற்படலாம் என்று குறிக்கத்தான் இந்த நிகழ்வு.

இதை எழுதிப் போகும்போதே தன்னிச்சையாக அடுத்த பத்தி எழுந்தது. கண நேர மாறாட்டத்துக்கு அப்புறம் மகாலிங்கம் திரும்ப மனிதனாகிறான்.
//

தேவிடிச்சி போய் வேலையைப் பாருடி நாயே என்று நான் சத்தமாகச் சொல்லியபடி அடிவாங்கின பொம்பிளையை முறைக்க, அவள் எனக்குப் பின்னால் பார்த்து ரெண்டு கையையும் தலைக்கு மேல் உயர்த்திக் கும்பிட்டாள். நான் என்ன விஷயம் என்று பின்னால் நோக்கினேன்.

அங்கே இளம் வயசில் இன்னொரு காப்பிரிச்சி அந்தக் குழந்தையை நெஞ்சோடு அணைத்து அதுக்குப் பால் புகட்டிக் கொண்டிருந்ததைப் பார்க்க எனக்கே கண் நிறைந்து போனது.

இப்படி மனுஷத்துவம் கிஞ்சித்தும் இல்லாமல் நான் போன மாயம் என்ன என்று அதிர்ந்து போய் எல்லாத்திலிருந்தும் விலகி நின்று நான் பார்த்துக் கொண்டிருந்தபோது ரத்தம் கட்டின முதுகோடு அந்தக் கருப்பன் கரும்பைச் சுமந்து போகிறதைப் பார்த்து அவனுக்கு அண்டையில் போனேன்.

அவன் முதுகை ஆதரவாகத் தடவி எந்த ஊர்க்காரனடா நீ என்று தெலுங்கில் விசாரித்தேன்.
//

நமக்கு ஒன்றை மற்றொன்று வழி மறிக்கும் பெருங்கதையாடல்களும் மகத்தான சந்தோஷங்களோடும் துயரங்களோடும் மகா மனிதர்களைச் சொல்லில் வடிப்பதும் வேண்டாம் சிறியோரை அவர்களுடைய நிறைகுறைகளோடு சித்தரிப்போம். நிறை மிகவும் குறை அறவும் இன்னும் வாய்ப்பு இருக்கிறது என்று சொல்வோம். கிருஷ்ணார்ப்பணம்.

2 comments on “மனிதம் – விஸ்வரூபம் நாவலை முன் வைத்து
  1. Manivannan S சொல்கிறார்:

    அன்புள்ள இரா.முருகன் !
    நீங்களும் , ஜெயமோகனும் கிட்டத்தட்ட , ஒரே line of thinking on human mind…

    அன்பு மணிவண்ணன்

    நன்றி

  2. Era Murugan சொல்கிறார்:

    அன்புள்ள மணிவண்ணன்
    ஜெ.மோ அப்படி என்று இரா.மு மகிழ்ச்சியடையலாம். இரா.மு அப்படி என்று ஜெமோ நினைப்பாரா

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன