மீனாட்சி திருக்கல்யாணம்

 

  

நண்பர்களோடு பேசுவது சுகம். குறுஞ்செய்தி அனுப்பிப் பதில் பெறுவது அதைவிட ஆனந்தம்.

நண்பர் கிரேசி மோகனுக்கு இரண்டு நாள் முன் காலைப்பொழுதில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன் -‘ இன்னிக்கு மீனாட்சி திருக்கல்யாணம் தெரியுமில்லியா?’. பத்து நிமிஷத்தில் ஒரு குறுஞ்செய்தி -வெண்பா.

இரண்டு நாள் நகைச்சுவையும் தமிழ்ச் சுவையும் கலந்த வெண்பா மழையில் நனைந்தேன். அவருடைய இணையத் தளத்தில் – http://www.crazymohan.com/ -வரும்வரை இங்கேயும் இருக்கட்டும். யாம் பெற்ற இன்பம்…


மீனாட்சி திருக்கல்யாணம்
———————————–
MARRIAGE MADE-IN MADHURAI
————————————————-

மாப்பிள்ளை சொக்கன் மணமகள் மீனாளைக்
காப்பிட்டுக் கொள்கிறார் கல்யாணம் -சாப்பிட்டு
மொய்யெழுது வோர்க்குமச்சான் மாலோலன் தாம்பூலப்
பையேந்தி நிற்பார் பணிந்து….(1)

அத்தனைபேர் வந்ததால், ஆலவாயில் தங்கிட
சத்திரம் இல்லாமல் சம்புமையாள் -கைத்தலம்
பற்றுவதை மச்சான் பெருமாள் தமுக்கத்தின்
வெற்றிடத்தில் வைத்தான்பார் விஷ்ணு….(2)

முதலிரவில் மீனாள் கதவடைத்துச் சொன்னாள்
மதுரைவாழ் மக்களின் மாண்பு –
பதவிசாய் நாகரீகப் பண்பு -பொதுவிடத்தில்
மாட்டோடும் ஓட்டோடும் மானத்தை வாங்காதீர்
வீட்டோட மாப்பிள்ளை வாள்….(3)

கல்யானைக்(கு) அன்றுயிர் கொள்ளவைத்த சொக்கனைக்
கல்யாணம் கொள்கிறாள் கன்னிமீனாள் -தொல்யானைப்
பிள்ளையும் வேலனும் பார்த்ததால் பெற்றோர்க்கு
இல்லையொண் ணாத இனிப்பு….(4)

மண்சுமந்தோன் பிட்டுக்கு மாப்பிள்ளை, மைத்துனனோ
மண்சுமந்த வாயன், மணமகளோ -மண்புகுந்த
மேனாள் இமவான் மகளான மாதங்கி
மீனாளாய் வந்த மலைப்பூ….(5)

தாரையை வார்க்கையில் தன்சார்பில் தந்தையாய்
யாரை நிறுத்துவது என்றீசர் -பாரமுற
பாக்கையில் வந்தார் பெரிய புராணத்து
சேக்கிழார் சாமி சபைக்கு….(6)

ஈசனார் மீனாள் இணைந்த திருமணத்தை
பூசலா நாயனார் போலவே -யோசனையில்
கண்டு களித்ததை கூறிடக் கற்பகத்தின்
குண்டு குமாரனே காப்பு….(7)

இச்சென்று முத்தமிட ஈசன் நெருங்கிட
நச்சென்று நாகம் நெளிந்தது -அச்சச்சோ
என்றலறி மீனாள் எகிறி குதித்தோட
அன்றுசிவ ராத்திரி ஆச்சு….(8)

பிள்ளைக்கு சீராகப் பொன்னில் திருவோடும்
வெள்ளி முலாமிட்ட வெண்ணீறும் -கொள்ளியிடும்
குச்சிக்குப் பூணிட்டு காளைக்கு லாடமிட்டார்
மச்சினர் மல்லாந்த மால்….(9)

சித்திரை வீதியில் ஜான்வாசம், கொட்டாவி
நித்திரை மைத்துனர் நீட்டிவிட -பித்தனமர்
அக்காளை அஞ்சி அலங்காநல் லூர்சென்று
உட்கார ஊர்வலத்திற்க்(கு) ஓய்வு….(10)

சொக்கனுடம் மீனாட்சி அக்கினியைச் சுற்றிவரல்
வக்கணையாய்க் காண வசிட்டனுடன் -அக்கணம்
அம்மிமிதித்(து) ஏறி அருந்ததி பார்த்தனள்
விம்மிஆ னந்தநீர் விட்டு….(11)

குனித்த தலையாய், குதிகால் நடையாய்
பனித்த விழியாய் பயந்து -தனித்திருந்து
புக்ககக் கூடலில் பூனையாய் வால்சுருட்டி
முக்கண்ணன் சொக்கன் முழிப்பு….(12)

மீனாளைப் பார்த்து மதுரை மயங்கியதில்
மானாளை முற்றும் மறந்தது -தூணாளும்
ஆய்ப்பிள்ளை மச்சான் அநுதா பமாயளிக்க
மாப்பிள்ளை வாயில் முறுக்கு….(13)

மாப்பிள்ளை கண்ணுக்கு மையிட்டோர் கைகளில்
தீப்புண் தகிக்க தவித்தனர் -கூப்பிட்ட
மைத்துனர் மாலன் மருத்துவனால் பச்சிலையை
வைத்தணைத்தார் நெற்றிக்கண் வீச்சு….(14)

கண்ணூஞ்சல் ஆடினர் பெண்ணும்மாப் பிள்ளையும்
விண்ணூறும் தேவர்கள் வீசிட -மண்ணூறும்
மக்களண் ணாந்துமண மக்களைக் காட்டியிட்டார்
கக்கமுறை சேய்களுக்குக் கூழ்….(15)

கண்ணைப் பறிக்கின்ற கூறைப் புடவையில்
மின்னலென மேடையில் மீனாள்தன் -அண்ணன்
மடியமர நான்முகன் மாங்கல்யம் ஏந்த
முடிந்தான் அரன்முடிச்சு மூன்று….(16)

விடக்கண்டன் சொக்கன் விடாக்கண்டன் ஆகி
விடமறுத்தான் தேங்காய் நலங்கில் -படபடத்த
கெண்டை விழிமீனாள் கோபிக்க அஞ்சியரன்
அண்டத்துக் கோளை அளிப்பு….(17)

மச்சினன் வேண்டியதால் மாலை வரவேற்பில்
அச்சிவன் தாண்டவம் ஆடிட -உச்சத்தில்
ஓடிவந்து மீனாள் ஒயிலாக சேர்ந்துகொள்ள
கூடலுக்குக் கூடுதல் கூத்து….(18)

சொக்கன்கல் யாணத்தில் சம்மந்தி சண்டையிட
விக்கினமாய் யாரும் வராததால் -சக்களத்தி
கங்கை குதித்திறங்க செங்கண்மால் தம்பதிக்கு
தன்கையில் ஏந்தித் தெளிப்பு….(19)

பாம்பலையில் தூங்கும் பெருமாள் சுபாவமாம்
சோம்பலை விட்டு சுறுசுறுப்பாய் -மாம்பலம்
நல்லிகுப்பு சாமியிடம் செல்ல சகோதரிக்காய்
அள்ளிவந்தார் சேலை அலைந்து….(20)

பாம்பலையில் தூங்கும் பெருமாள் சுபாவமாம்
சோம்பலை விட்டு சுறுசுறுப்பாய் -ஆம்பிளை
சிங்கமாய் அன்றுபாஞ் சாலிக்(கு) அளித்ததை
தங்கைக்காய் செய்தார் திருட்டு….(21)

குவளைக்குள் பிச்சைக்கூழ் கொள்வோன் கறாராய்
அவலுக்(கு) அளித்தேழை ஆன -குவளைக்கண்
மாலோனை முன்ஜாமீன் மன்றாடி கேட்பதற்குள்
பாலாழிக் கண்ணனம் பேல்….(22)

யாப்பில்லை என்றாலும் ஏழை தருமிக்கு
மாப்பிள்ளைத் தோழன் மரியாதை -கூப்பிட்டு
காசியாத்தி ரைக்கு குடைவிசிறி தந்தனன்
ஈசன் விளையாடல் இது….(23)

சென்றமுறை பார்வதி சம்பு திருமணத்(து)
அன்றமர்ந்தான் தெற்கில் அகத்தியன் -குன்றென
மீண்டுமவன் காண மதுரையில் மீனாட்சி
ஆண்டவன் கல்யாணம் ஆம்….(24)

சிவகாசி யாத்திரை செல்லல் தடுக்க
விவகா ரமானமச்சான் விஷ்ணு -சிவகேசம்
மேலமர்ந்த கங்கையை மொண்டு தரையிலிட
ஆலவாய் காசிநகர் ஆச்சு….(25)

மாளிகை மீனாள் மயானனை ஏற்றிட
பாலிகையை பெண்கள் பகிஷ்கரிப்பு -நாலுகை
மைத்துனன் வைகையில் மோகினியாய் தானியத்தைக்
கைத்தலம் ஏந்திக் கரைப்பு….(26)

கழுத்தரவம் தன்னை கடாசி எறிந்தான்
அழுத்தியுமை யாளை அணைக்க -பழித்தனர்
கட்டு விரியன்கள் கட்டிக் குலாவிடும்
கட்டுச்சா தக்கூடை கண்டு….(27)

உண்ட பெருவிருந்தால் குண்டோ தரன்கொண்ட
தொண்டை அடைத்திடும் தாகத்தைக் -கண்டசிவன்
கைவை எனச்சொல்லக் கைமாற்றி வைத்தவன்முன்
வைகை விரைந்தாள் வளைந்து….(28)

கலையத் துவங்கினர் கல்யாணம் கண்டோர்
அலையில் படுத்தான் அரிமால் -மலயத்
துவசன் வளர்ப்பை தழுவிப் பகர்ந்தான்
கவசமே கூடலைக் கா….(29)

சிவசிவ என்று சிரத்தில் மலையத்
துவசனார் குட்டித் தொழுது -அவசரமாய்
கெஞ்சினார் ”நஞ்சுண்டா மிஞ்சினாலும் மீனாளை
நெஞ்சில் அமிழ்தாய் நிறுத்து”….(30)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன