Vishnupuram ThErthal – Part 6விஷ்ணுபுரம் தேர்தல் – பகுதி 6

விஷ்ணுபுரம் தேர்தல் இரா.முருகன் பகுதி – 6

நான் உள்ளே நுழைந்தபோது, வீட்டுக் கூடத்தில் மெகருன்னிஸா.

இப்படிச் சுவரில் சாய்ந்து கொண்டு, காலை நீட்டிக் கொண்டு தொடர்கதை படிப்பதை அசன் ராவுத்தர் பார்த்தால் தொலைந்து விடுவார்.

அம்மாவுக்கு அவள் என்னமோ செல்லம். நித்தியப்படிக்கு மதியம் இங்கே தான். அம்மாவுக்கு எம்பிராய்டரி தெரியும். அதைக் கற்றுக் கொள்ள வருவதாகச் சாக்கு.

’நீங்க வச்ச மைசூர் ரசம் ரெம்ப நல்லா இருந்திச்சு மாமி… இவஹளே பூராக் குடிச்சுட்டாஹ..’ என்று அக்பரின் உம்மா கொல்லைக் கதவைத் திறந்து அம்மாவிடம் சொல்லவும், ‘உங்க நிலத்திலே பயிர் பண்ற வெள்ளரிக்கா தேவாமிர்தமா இருக்கு’ என்று அம்மா சர்ட்டிபிகேட் கொடுக்கவும் மெகர் மூலமாகப் பண்டமாற்று செய்யப்படுகிறது.

‘புவனா நல்ல பிள்ளை மாமி… யார் வம்புக்கும் போக மாட்டா.. என்ன, கொஞ்சம் ஹெட்வெயிட் அதிகம்.. காலேஜ்லே படிக்கிறா இல்லே.. அத்தா அனுப்பியிருந்தா நானும் காலேஜ் போயிருக்க மாட்டேனா என்ன..’

தெருமுழுக்க புவனா பேச்சுத்தான்.

‘கண்டிப்பா.. உன் புத்திசாலித்தனத்துக்கு கலெக்டராக் கூட வரலாம்.. தட்சணம் நிலைமையையும் பார்க்க வேண்டியிருக்கேடி..கலிகாலம்டியம்மா.. கலி..’

‘சும்மா வெளையாட்டா வேணும்னு எழுதியிருப்பானுங்க, மாமி..’

வேணும்னு எழுதினானோ வினையா எழுதினானோ.. எழுதியாச்சு.. படிச்சாச்சு..’

’யார் மாமி எழுதியிருப்பாங்க.. சைக்கிள் காரங்களா இருக்குமோ..’

பேச்சு என்னைப் பார்த்ததும் நின்றது. சைக்கிள்காரன்.

‘இவனை ஏன் மாமி எலக்‌ஷன் ஆபீஸுக்கு விடறிங்க… அக்பர் பயலும் சொன்னது கேக்காம அங்கே தான் ஓடுறான்.. லீவுன்னா பழைய பாடத்தை எல்லாம் மறக்காம எழுதிப் பார்க்கலாமில்லே..’

முக்காடும், நீளமான தலைமுடியுமாக புடவையில் இருக்கிற அசன் ராவுத்தர்..

‘நல்லா சொல்லுடியம்மா.. இவங்க அப்பாவும் என்ன ஏதுன்னு கேக்கறது இல்லே.. வாசல்லே இருக்கறதோ பரப்பிரம்மம்.. இண்டு பேப்பரே கைலாசம்.. பவான்ஸ் ஜேர்னலே வைகுந்தம்.. முக்காட்டைக் கடிச்சு எச்சப் பண்ணாதேடி.. காலை மடக்கி உக்காரு..’

அம்மா ரெண்டு சைடிலும் கோல் போடுவாள்.

அக்பரின் அத்தா எங்களைக் கணக்குப் போட வைத்த பிரதாபங்களை மெகர் அம்மாவிடம் விஸ்தாரமாகச் சொல்லிக் கொண்டிருந்தபோது நான் சமையல்கட்டில்.

‘அஞ்சு என்ன.. ராவுத்தர் அம்பது கணக்கு கொடுத்திருக்கணும்..’

அம்மா உள்ளே வந்தாள்.

‘கொஞ்சம் இரு.. இவனுக்கு சாதம் போட்டு அனுப்பிட்டு எம்ப்ராய்டரி ஆரம்பிக்கலாம்..’

‘அந்த அக்க சொல்றதை நம்பாதே அம்மா.. அவளுக்கு எம்ப்ராய்டரியும் வராது ஒண்ணும் வராது…சோம்பேறி..’

வாயில் அவசரமாக சாதத்தை அடைத்துக் கொண்டேன்.

‘பாவம்டா.. உனக்கு அக்கா இருந்தா .. இந்த மாதிரி.. இதே வயசு தான் இருக்கும்.. ஒரே மாசம்.. ரெணடு நாள் தான் வித்யாசம்.. இவ உம்மாவும் நானும் பக்கத்துப் பக்கத்துலே ஆஸ்பத்திரியிலே… ஒரு வ்யசுலே ஜன்னி வந்து உங்க அக்கா..’

அம்மா கண்கள் நிறைவதைப் பார்க்க சங்கடமாக இருந்தது.

திடீரென்று சிரித்தாள்.

‘நீ பொறந்த போதும் அதே மாதிரி பக்கத்து கட்டில்லே உம்மா.. வயத்துலே அக்பர்.. நீங்க ரெண்டும் சித்திரைச் சுழியன்கள்..’

‘மாமி.. நாளைக்கு உம்மாவும் அத்தாவும் நிலத்தைப் பார்க்க நெட்டூர் போறாங்க.. நன் உங்க வீட்டுலே சாப்பிட்டுக்கட்டா..’

மெகர் சமையல்கட்டு கதவைப் பிடித்துக் கொண்டு நின்றாள்.

‘பேஷா.. உனக்கு என்ன பிடிக்கும்… பருப்பு உசிலி தானே.. பண்ணிடறேன்..’

எனக்கும் இப்படி ஒரு அக்கா இருந்தால் தலை வாரி விடுவாள். கண்ணில் தூசு விழுந்தால் மெல்ல ஊதி எடுப்பாள். சயின்ஸ் நோட்டில் படம் போட்டுக் கொடுப்பாள். மர்கழி மாதம் வாசலில் பெரிய கோலம் போடுவாள்.

மெகருன்னிஸா கோலம் போடுவாள்?

————————————————————————————————————————-
————————————————————————————————————————–

டாக்டர் சதானந்தத்தை எத்தனையோ தடவை வக்கீல் மோகனதாசன் வீட்டுத் திண்ணையில் பார்த்திருக்கிறோம். மோகனதாசனுடனோ, ஜீவராசனுடனோ, இல்லை வருகிற சிவப்புத் துண்டுக்காரர்களிடமோ ஊர் வம்பு பேசிக்கொண்டு..

இது சாதாரணமாக ராத்திரி ஒன்பது மணிக்கு அவர் சாப்பிட்டு விட்டு பனியனுடன் வெளியே வரும்போது நடக்கும்.

அப்பா கூட சில சமயம் அங்கே போய் நிற்பார். ராத்திரி பதினொரு மணி வரை ‘பிரிவீபர்ஸ்’ என்று ஏதோ மணி பர்ஸ் மாதிரியான சமாச்சாரங்களைப் பற்றிப் பேச பெரியவர்களால் தான் முடியும்.

இப்போது நல்ல பகல் நேரம். மோகனதாசன் ஆபீஸில் டாக்டர் சதானந்தம், அவர் கூட தியாகி, நாடார், ஓட்டல் காரர்.. இன்னும், பரோபகாரி வரதன்..

நான் சாப்பிட்டுவிட்டு சைக்கிள் ஆபீஸில் நுழைந்தால் அது முழுக்கக் காலி. கூட்டம் எல்லாம் இங்கே தான்.

‘உங்களுக்கு ஓட்டுப் போடணும்னா ஒழுங்கா முறையாக் கேட்டுட்டுப் போங்க.. இது இன்னும் விஷ்ணுபுரம் அக்ரஹாரம் தான்.. பாரதியார் தெருன்னு பேர் வச்சதாலே மாறிப் போயிடலே.. உங்க வக்கீல் ஆபீஸை இங்கே விட்டதே தப்பு.. அந்த மிதப்பிலே நீங்க தெருவிலே போறவனை எல்லாம் கேண்டிடேட்டாக்கி.. ஒரு அந்தஸ்து வேணாம் டாக்டரோட மோத.. ஜெயிக்கப் போறதில்லேன்னு தெரிஞ்சதும் இப்படி ஆளை விட்டு, அசிங்கமா சுவத்துலே எழுதறது.. ஏன், மாதவ்ன் கிட்டே எழுதிக் கொடுக்க வேண்டியது தானே.. தமுக்கு அடிச்சுண்டு போய் ஊரெல்லாம் சொல்வான்..’

வரதன் கீச்சுக் கீச்சென்று அலறுகிறான்.

மூச்சு விடாமல் பேசியதால் வாயிலிருந்து எச்சில் வடிய, எங்களை முறைத்து விட்டுப் புறங்கையால் துடைத்துக் கொண்டான்.

வரதன் எப்போதோ ‘பரோபகார நிதி’ என்று ஆரம்பித்து, பணம் சேர்த்து, கம்பி நீட்டி விட்டுத் திரும்ப வந்ததாகத் தாத்தா சொல்வார். பார்த்தால் அப்படித் தெரியாது. நான் பிறந்ததிலிருந்து ஒரே வயதில் தான், காப்பிக் கொட்டை கலர் சட்டையும் நீர்க்காவி வேஷ்டியுமாக இருக்கிறான்.

நாடார் முகத்தைச் சுளிக்கிறார். டாக்டரும் தான். வரதனை ஏன் அப்புறம் கூடக் கூட்டி வர வேண்டும்?

தடாரென்று ஜீவராசன் எழுந்தார்.

‘இந்த உள்ளூரான்.. வெளியூரான்.. இந்தத் தெரு.. அடுத்த தெரு.. பேச்சு எல்லாம் இனியும் வேணாம்.. நீங்க விருப்பப் பட்டாலும் இல்லேன்னாலும் அக்ரகாரமும் சேரியும் செட்டித் தெருவும் வன்னியத் தெருவும் வலையத் தெருவும் இனிமே இருக்கப் போறதில்லே.. அசன் ராவுத்தர் இங்கே வந்து வீடு கட்டிப்பாரு.. ஜகன்னாத ஐயர் மிலிட்டரியிலேருந்து ரிடையர் ஆகி வந்து, மசூதி இருக்கிற ஆசாத் தெருவிலே விலை படிஞ்சு வந்தா வீடு வாங்கிக் குடி போவாரு.. என்னை மாதிரி ஆளுங்க சேரியைத் தாண்டி இப்படி துண்டு போட்டுக்கிட்டு வீதி நெடுக நடப்போம்.. ஒருத்தனும் ஏன்னு கேக்க முடியாது.. அது போறது.. விஷயத்துக்கு வருவோம்.. எவனோ எதையோ எங்கேயோ கிறுக்கினா நாங்க ஏன் பழி சுமக்கணும்.. டாக்டர் எங்க எல்லோருக்கும் நல்ல நண்பர்.. இந்த மாதிரி அசிங்கமா நாங்க நினைக்கக் கூட மாட்டோம்.. ஒரு வக்கரித்த மனசை இப்படி பெரிசு படுத்தறதை விட, ஒரு பக்கெட்டிலே தண்ணியும், பழைய துணியும் எடுத்துப் போய் கிறுக்கினதை அழிச்சுட்டி நாம இனி ஆக வேண்டியதைப் பார்க்கலாம்.. உங்களுக்கு முடியாட்ட நானே செய்யறேன்..’

கை தட்டினால் உதைப்பார்கள்.

‘மிஸ்டர் ஜீவா.. நீங்க எழுதினதா சொல்லலே.. உங்க ஆளுங்க.. முக்கியமா ஒரு அடிமட்டத் தொண்டன்.. பேரு சொல்றேனே.. ரிக்‌ஷா நாச்சியப்பன்.. அவனை புதன்கிழமை ராத்திரி சந்தைக் கடைப்பக்கம் பார்த்தா ஆளு இருக்கு..’

நாடார் சொன்னார்.

‘ஐயோ சாமி எனக்கு நாலு எழுத்து தெரிஞ்சிருந்தா நா ஏன் ரிக்‌ஷா மிதிக்கறேன்..’

நாச்சியப்பன் அழாத குறையாகச் சொன்னான்.

‘நாச்சியப்பா.. நீ சந்தைக்கடைப் பக்கம் போனியா?’

மோகனதாசன் கேட்டார்.

நாச்சியப்பன் தலை குனிந்திருந்தது.

‘எதுக்குப் போனே..’

‘அது .. சாமி.. அதெல்லாம் எதுக்குங்க..’

‘சொல்லு… கேப்போம்..அட சொல்லுப்பா..’

‘அது.. வந்து.. சும்மாத்தான்..’

’நீங்க போங்கடா..’

அதிசயமாக அறிவரசன் அண்ணன் எங்களை விரட்டினார்.

‘கிரக்கி.. ராத்திரி.. ஜாலியா..;

பம்மிப் பம்மி நாச்சியப்பன் குரல் அரைகுறையாகக் காதில் விழுந்தது.

‘அதாண்டா ஜல்ஸா..’

குள்ளக் கிட்டு கண்ணடித்தான்.

(தொடரும்)

கணையாழி’யில் தி.ஜானகிராமன் நினைவுக் குறுநாவல் போட்டியில் தேர்வாகி, செப்டம்பர் 1993-ல் பிரசுரமானபோது இந்தக் குறுநாவலின் தலைப்பு – விஷ்ணுபுரம்.

என் ‘தகவல்காரர்’ குறுநாவல் தொகுப்பில் (அட்சரா வெளியீடு – 1995) இடம்பெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன