அழகுப் பிள்ளை – சிறுகதையில் ஒரு சிறு பகுதி

கனலி இணையத் தளத்தில் என் புதுச் சிறுகதை ‘அழகுப் பிள்ளை’ பிரசுரமாகி உள்ளது. நண்பர்கள் இந்தக் கதையையும், முழு இதழையும் வாசிக்கக் கோருகிறேன்.

சிறுகதையை வாசிக்க இங்கே சொடுக்கவும்

கதையில் இருந்து ஒரு சிறு பகுதி

எல்லை இல்லா எங்கும் நிறை ஏக பரம்பொருளே என்று நூறு இளம் குரல்கள் பிரார்த்தித்துப் பாடும் இசை சூழ்ந்திருக்க பள்ளிக்கூடத்துக்குப் பின்னால் நல்ல தண்ணீர் ஊருணிக்கரைக்கு நடந்தார் அழகு பிள்ளை. பழைய பாளையக்காரர்கள், அவர்களின் மனைவி, கூத்தியார் என்று பலவட்டமாகப் புதைத்து நிறுத்திய சமாதிகள் அடைந்த பகுதி அது. கடைசி சமாதி கதவும் ஜன்னலும் வைத்து படியேறி உள்ளே போகும்படியான சௌகரியத்தோடு இருந்தது. பாளையக்கார ஜமீந்தார் அந்திம ஓய்வு கொள்ளும் இடம் அது என்று அழகு பிள்ளை ஊகித்திருந்தார். அங்கே தான் அவருடைய இரண்டு ஆட்டக்கார குழுவினர்கள் தங்கி இருக்கிறார்கள்.

உள்ளே இரண்டு கீரிப் பிள்ளைகள் கல் பாவிய சமாதிக்குப் பின்னால் உறவில் ஈடுபட்டிருந்தன. அவருடைய குழுவினர், நெட்டையனும் குறளியும் தான் அவர்கள்.

பாதாள உலகம் படத்தில் தொடக்கத்தில் வரும் ஒரு காட்சியில் குள்ளர்களுக்கு ஒரு முனிவர் நினைத்தபடி உருவம் மாறும் சக்தியை அளிப்பார். அதை வைத்துக்கொண்டு அழகுப் பிள்ளையும் மற்றவர்களும் கதைப் போக்குப்படி உரு மாறிக்கொண்டே இருந்து சுவாரசியமாக சினிமா நகர வழி செய்வார்கள். படம் முடியும் முன் ஒரு காட்சியில் அந்த முனிவர் இவர்கள் எல்லோரையும் சாதாரண ஜனங்களாக மறுபடி ஆக்கி, உரு மாறும் ஆற்றலைத் திரும்ப வாங்கிக் கொள்வார்.

அந்தக் காட்சி, ரிலீஸ் ஆன படத்தில் நீளம் அதிகம் என்பதால் வெட்டப்பட, அழகுப்பிள்ளையிடம் உரு மாரும் திறமை தொடர்ந்து நிலைத்து விட்டது. மற்ற ஆக்டர்களுக்கும் கூடத்தான். திரையைத் தாண்டி நீண்ட அபூர்வ ஆற்றல் அது. மொத்தம் இருபது பேர் இருந்தார்கள் அப்படி.

எனினும் அழகுப்பிள்ளையின் ஆட்டக் குழுவில் அவர்களில் இரண்டே பேர் தான் உண்டு.

மற்றவர்கள் என்ன ஆனார்கள் என்று அழகுப்பிள்ளை எவ்வளவோ முயன்று தேடினாலும் அவர்கள் கிடைக்கவில்லை. அவர்கள் வேறு ஏதோ உயிரினம் ஆக உரு மாறி திரும்ப மனித உருவெடுக்க முயன்றது தோல்வியில் முடிந்ததால் இருக்கலாம். அழகுப்பிள்ளை தெருவில் ஆடு, மாடு, நாய் என்று சகல விலங்குகளையும் கண்ணில் பார்த்து நடப்பது தன் பழைய சகபாடிகளைத் தேடித்தான்.

அழகுப்பிள்ளையின் குழுவில் இருக்கும் இரண்டு பேரில் ஒரு ஆண், மற்றது பெண். உரு மாறும் உத்தி அவர்களுக்கு அவ்வப்போது உடம்பு சுகம் அனுபவிக்கத்தான் பயன்படுகிறது. கண்டும் காணாமல் போக வேண்டிய கட்டாயம் அழகுப் பிள்ளைக்கு. மூன்றே பேர் இருக்கும் குழுவில் அவர்கள் மட்டும் விலகி இன்னொரு குழு ஆரம்பித்து விடலாம். ஆனால் பேசும், பாட்டு கட்டும் திறமை அவர்களிடம் போதாது. அது அழகுப் பிள்ளையின் ஏகபோகம்.

கீரிகள் உறவு கொள்வதில் மும்முரமாக இருந்தன. உரு மாறும் நாகரிகப்படி, உரு மாறுகிறவர்கள் தங்கள் இயல்பான உயிரினமாக மாறிய பிறகே அடுத்தவர்களோடு பேச்சு மற்ற தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளலாம். அதாவது இரண்டு மனிதர்கள் முயலாக மாறினால், அவர்கள் மறுபடி மனிதர்களான பின் தான் மற்ற மனிதர்களுடன் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளலாம். அழகுப் பிள்ளையால் கடைப்பிடிக்க முடியாத நாகரிகம் அது. வயிறு தான் நாகரிகத்தைத் தீர்மானிக்கிறது அவருக்கும் அவருடைய குழுவுக்கும்.

கீரிகள் உறவு முடியும் வரை வேறு திசையில் திரும்பியபடி காத்திருந்தார் அழகு. சமாதியில் புதையுண்டவராக மாற முடியும் என்றால் அழகு பிள்ளை அப்படி உருமாறி மற்ற சமாதிவாசிகளுக்குத் தன் வயிறே சகலமும் என்றாகிப் போன வாழ்க்கைத் துயரத்தைச் சொல்ல முடிந்திருக்கும். ஆனால் உருவம் மாறுவது உயிர் இருக்கும் ஒன்றிலிருந்து உயிருள்ள மற்றதுக்குத் தானே.

தடதடவென்று சத்தம். கீரிகள் உரு மாறும் சத்தம் அது. இரண்டு கீரிகளும் சமாதியைச் சுற்றி ஓடின. அது முடியும்போது அவை திரும்ப நிஜ உருவம் கொள்ளும்.

ஓடி.நின்றார்கள். உருவம் மாறியதில் ஏதும் பிரச்சனையா? திரும்பாமலே கேட்டார். ஆமாம் என்றார்கள். உரு மாற முடியவில்லையாம்.

”பதட்டப்படாதீங்க. இன்னொரு முறை முயன்று பாருங்க” என்றார் அழகுப் பிள்ளை.

.சமாதிக்குள் இருக்கும் சேனாதிபதியோ ராணியம்மாவோ தடுக்கிறதால் இப்படி பிரச்சனை ஏற்படுகிறதா? அழகுப் பிள்ளை கை குவித்து முகம் அறியாத யாரையோ வணங்கினார்.

”சரியாயிடுச்சு”.

ஆணும் பெண்ணுமாக குரல்கள் ஒலித்தன. அழகுப் பிள்ளை திரும்பிப் பார்த்தார்.
ஒரு நக்னமாக குள்ளர். உயரமான ஒரு பெண். கீரியாக இருந்து பழையபடி உரு மாறிய அவர்கள் தடதடவென்று சமாதிப் பரப்பில் ஓடி சமாதிக்குப் பின்னால் அவசரமாகப் போய் நின்றார்கள், ஓடியதால் கீழே அடக்கமாகி இருந்தவர்கள் உறக்கம் கலைந்து இருக்கலாம் என அழகுப்பிள்ளை பயந்து போனார்.

குறளியும், நெட்டையனும் சமாதிக்குப் பின் நின்றபடி அழகுப் பிள்ளையைப் பார்த்தார்கள். என்னாச்சு’பா இன்னும் பிரச்சனையா? அவர் கேட்க பேசாமல் தலையசைத்தார்கள் இருவரும்.
அவர்களுடைய இப்போதைய பிரச்சனை அவருக்கு உறைத்தது.

எங்கே போனது அவர்களுடைய தினசரி உடுப்பும், ஆடும்போது அணியும் ஜரிகை உடுப்புமெல்லாம்? அது இருந்தால்தான் நடமாட முடியும். நடனமாட முடியும். மாலைக்காட்சி மேஜிக் ஷோவும் பாதாள உலகமும் நடத்த முடியும். அது இருக்கட்டும், மனுஷனாக மாறினால் அணிந்து கொள்ளக் குறைந்த பட்சம் ஒரு டிராயராவது வேண்டாமா? எங்கே போனது எல்லாம்? பெண்ணுக்கோ ஓடியாட சௌகரியமாக இந்திக்கார பைஜாமாவும் நீளமான அங்கி போன்ற மேலுடுப்பும் கட்டாயம் வேண்டும். ஆண்பிள்ளை அணிவது போல பேண்ட் என்றாலும் சரிதான்.

சமாதியில் சுருட்டி வைத்ததை யாரோ எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள். கூடவே ஆட்டத்துக்கான உடுப்புகளும் இல்லை இப்போது. அந்தப் பெட்டியையும் கிளப்பிக்கொண்டு போயிருக்கிறார்கள். நல்லவேளை அழகுப் பிள்ளை எப்போதுமே அவற்றை அணிந்திருப்பதால் அவருக்கு உடுப்பு எதுவும் களவு போகவில்லை.

இலுப்பை எண்ணெய்ச் செக்கின் பின்னால் இருக்கும் அழகான பளிங்குக் கல் பதித்த சமாதியில் தான் கீழடுக்கில் கல் பாளத்துக்கு அடியில் பத்திரப்படுத்தி வைத்து விட்டு கீரிகளாக உறவு கொள்ளப் போயிருந்தார்களாம் அவர்கள் இருவரும். அப்போது தான் உடுப்பு களவு போயிருக்கிறது.

வேட்டியைத் திருட வந்தவர்களாக இருக்காது அவர்கள். ஜரிகை குப்பாயம், பைஜாமா இப்படியான சினிமா மோஸ்தர் உடுப்பு களவாட வந்தவர்கள் அவர்கள். அவற்றை வைத்து சினிமாவில் புகுந்து கொள்ள முயற்சி செய்யக் கூடியவர்களாக இருக்கலாம். சினிமாவில் சேர எப்படி வேண்டுமானாலும் பிரயத்தனம் செய்யலாம். ஆனால் மந்திர தந்திர சினிமா இன்னுமா எடுக்கிறார்கள்? அழகுப் பிள்ளைக்குத் தெரியாது.

அழகுப் பிள்ளைக்கு சினிமா வாய்ப்பு அவருடைய குள்ளமான உருவத்தால் வந்தது. அவர் குழுவினர் ஆன நெட்டையனுக்கும் கூட. நெட்டையன் மகா குட்டையாக ரெண்டடி உயரம் தான் இருப்பான். குறளி நல்ல உயரமாக ஏழடி இருப்பாள் நிமிர்ந்து நின்றால். இவர்கள் மேடையில் சேர்ந்து ஆடுவதோடு இங்கேயும் ஆடுகிறார்கள் இயற்கை விதித்தபடி என்பதில் அழகுப் பிள்ளைக்குப் புகார் ஏதுமில்லை. அவர் வயதுக்கு ஆடக் கால் முன்னால் வருவதே அதிசயம். வயிறு அவர் காலை ஆட்டுகிறது.

கீரியாகவோ, தவளைகளாகவோ காதல் செய்யும்போது உயரம் பற்றிய சிந்தனைகளே ஏற்படாது என்பதால் உருமாறி அவர்கள் உறவு கொள்ள ஈடுபாடு காட்டுகின்றனர் போல. ஈடுபாடு இடுப்புத் துணியைப் பறிகொடுக்கவா வைக்கும்?

”என்னப்பா இப்போ போய்த் துணியைத் தொலைச்சுட்டு நிக்கறீங்க. நாலரை மணிக்கு ஆட்டம் இருக்கு.. நான் தனியா எப்படி செய்ய முடியும் சொல்லுங்க”

அவர்கள் சமாதிக்குப் பின்னால் இருந்து எட்டிப் பார்த்துவிட்டு இரண்டு புறாக்களாக உருமாறினார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன