New : கண்ணன் காட்சி ஓடக் கும்மி (நௌகா சரித்திரம்)

சத்குரு தியாகராஜ ஸ்வாமிகள் இயற்றிய நாட்டிய நாடகமான ‘நௌகா சரித்திரம்’ பற்றி நேற்று டாக்டர் பிரமிளா குருமூர்த்தி நடத்திய சொற்பொழிவு-நிகழ்த்திக் காட்டுதலில், எனக்கு இருந்த இரண்டு அடிப்படை சந்தேகங்கள் தீர்ந்தன.

1) நௌகா என்றால் படகு என்று தெரியும். தியாகராஜர், படகு என்று சேர்த்துப் பார்த்து, இது அவருக்குப் பிரியமான ராமபிரானையும் அவனுக்குக் கங்கையில் படகோட்டிய குகனையும் பற்றிய படைப்பு என்று இதுகாறும் நினைத்திருந்தது தவறு.

நௌகா சரித்திரம், யமுனையில் கண்ணன் தோணிகளோட்டி கோபியரோடு விளையாடி வந்த கதை. முத்துக்களைக் கொடுத்து தெருவில் விற்றுப் போகிற இலந்தைப் பழம் வாங்க வருகிற குழந்தைக் கண்ணனை கோபியர் தம்மோடு ஓடத்தில் அழைத்துப் போகிறார்கள். காற்றும் மழையுமாக யமுனை ஓடம் தத்தளிக்க, கண்ணன் அவர்களைக் காத்து ரட்சிக்கிறான். சுருக்கமான கதை இது.

2) நௌகா சரித்திரத்தில் பத்துக்கு மேற்பட்ட ராகங்களில் (13?) கீர்த்தனைகளும் தாருக்களும் உண்டு. நான் நினைத்திருந்தபடி அது தாரு இல்லை, தரு.

தரு ஒரு கதையாடல். ராம கதையோ, கிருஷ்ண கதையோ அதில் ஒரு காட்சியை விவரிப்பது அது. கீர்த்தனை பொதுவாக, அது எந்த தெய்வம் குறித்து அமைந்திருக்கிறதோ, அத் தெய்வத்தின் குண நலன், சிறப்பு எல்லாம் கூறி அருள் செய்ய வேண்டுவதாக வரும். (பாடிப் பரவுதல் இதுதானோ?)

தரு, துருவ என்ற வேர்ச்சொல்லின் அடிப்படையிலானது. துருவ என்பது ஏற்கனவே இருந்த / நிகழ்ந்ததைச் சுட்டுவது.

3) தியாகராஜர் காலத்திலேயே மெலட்டூர் பாகவதமேளா பிரபலமடைந்து இருந்தது. இந்த நிகழ்வுகளில் மனம் பறிகொடுத்து அவர் நௌகா சரித்திரம், பிரஹலாத பக்த விஜயம் ஆகிய நாட்டிய நாடகங்களை இயற்றியிருக்கலாம்.

4) யமுனைக் கரை வர்ணனை, கோபியர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளுதல் (’குழந்தைக் கண்ணன் நிறையத் தங்க நகை அணிந்திருக்கிறான். அவனை ஓடத்தில் நம்மோடு அழைத்துப் போனால் அந்த நகை களவு போய்விடலாம். கூட்டிப் போக வேண்டுமா?’ என்பது இதில் ஒன்று!), கோபிகள் – கண்ணன் சம்வாதம், படகு அசைந்து செல்வது போல் அமைந்த பாட்டு நடை என்று உன்னதமான நாடகப் பாங்கும், இசையுமாக பரிபூரண சரணாகதி தத்துவத்தை விளக்குவது நௌகா சரித்திரம்

5) தெலுங்கு மொழியில் அமைந்த இசை நாடகம் நௌகா சரித்திரம். 1868-ல் இது தமிழில் ‘கண்ணன் காட்சி ஓடக் கும்மி’ என்ற பெயரில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.

6) பொதுவாக நாட்டிய நாடகங்களில் இடம் பெறும் பாடல்களுக்கு இசை அமைக்கும்போது, ‘ஆதி நாட்டை, அந்தம் சுருட்டி’ (நாட்டை ராகத்தில் தொடங்கி, சுருட்டியில் நிறைவு செய்தல்) பின்பற்றப் படும் என்றாலும், தியாகராஜரின் படைப்புகளில் ஒரே ராகத்தில் தொடக்கமு, நிறைவும் இருக்கும்.

நௌகா சரித்திரம் சுருட்டியில் தொடங்கி, சுருட்டியில் நிறைவுறும்,. பிரஹலாத பக்த விஜயம் மத்யமாவதியில் தொடங்கி, அதே ராகத்தில் (பவமான சுத்துடு பட்டு பாதார விந்தமுலகு – இசைநிகழ்ச்சி நிறைவு செய்யும்போது மங்களம் பாடுவது பெரும்பாலும் இந்தப் பாடலோடு தான்) முடிவு பெறும்.

டாக்டர் பிரமிளாவின் குழுவினர் அவ்வப்போது நௌகா சரித்திரப் பாடல்களை இனிமையாக இசைத்தது மனதுக்கு நிறைவாக இருந்தது.

(வாணி மஹால் – 17 டிசம்பர் 2016 10:00 மணி)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன