New nove: வாழ்ந்து போதீரே அத்தியாயம் 36 இரா.முருகன்

மலா பாக ருபயீ த்யா, மோதா பாவு. அப்பன் காஹீ தூபா கரீதீ கரூ.

ஐந்து நிமிஷம் முன் டோம்பிவிலி ஃபாஸ்ட் லோக்கல் ரயிலில் வந்து சேர்ந்தவன், ரிடர்ன் டிக்கட்டை சிகரெட் பாக்கெட்டுக்குள் பத்திரப்படுத்தியபடி திலீப்பிடம் சொன்னான். ஐந்து ரூபாய் வேணுமாம். போய் நெய் வாங்கி வருவானாம்.

நாலு மூங்கில் கழிகளும் தென்னங் கிடுகுமாக சைக்கிளில் வந்த இன்னொருத்தன் வண்டி பிரேக் பிடிக்காமலோ, இல்லை விளையாட்டாகவோ கட்டிடச் சுவரில், சினிமா கதாநாயகி நடிகை நூதன் படம் ஒட்டிய போஸ்டரில் இடுப்புக்குக் கீழ் முட்டி நிறுத்தினான்.

ஒன்றும் இரண்டுமாக மூலத்தார் வேட்டி உடுத்தி, வெள்ளைக் குல்லா வைத்த நடுவயசு மராட்டியர்களும் இளைய ஆண்களும் உரக்கப் பேசியபடி வந்து கொண்டிருந்தார்கள்.

பாண்டுப் சர்வமங்கள் சாலில் சாவுச் சடங்கு நடத்திக் கொடுக்க திலீபுக்கு ஒத்தாசையாக வருகிறவர்கள். அவர்கள் எல்லோரையும் திலீப் அறிவான். காமத் ஓட்டலில் சர்வர் விடுப்பில் போக டெம்பரவரியாக வடா பாவ் பார்சல் கட்டுகிறவர்கள். எச்சில் இலைகளை எடுத்து இரும்பு வாளியில் ரெண்டு பேராக நீளக் கயிறு கட்டித் தூக்கிப் போய் குப்பை குவிக்கும் பெருவெளியில் வீசி எறிந்து விட்டு பீடி புகைத்தபடி வருகிறவர்கள். விநாயக சதுர்த்திக்கு தாதரிலும் மடுங்காவிலும் ரயில்வே ஸ்டேஷனை ஒட்டி விளாம்பழம் விற்கக் கடை போட்டு, பக்கத்து நடைபாதைக் கடைக் காரர்களால் வசவும் கேலியும் பெற்று பொருட்படுத்தாமல் வியாபாரம் செய்கிறவர்கள். தீபாவளிக்கு பெரிய முறங்களில் உள்ளூரிலோ மராத்வாடா பிரதேச கிராமங்களிலோ அபாயமில்லாத வெங்காய வெடி செய்து அனுப்புவதைப் பரத்தி அதே நடைபாதைகளில் ஒன்று இரண்டு வெடிகளைத் தரையில் எறிந்து பலமாக வெடித்து விற்பவர்கள். மகாலட்சுமி கோவில் வாசலில் செருப்பு டோக்கன் கொடுத்து காசு வசூலிப்பவர்கள். இல்லாத நேரங்களில் பிணம் தூக்குகிறவர்கள்.

எப்படியோ யார் மூலமோ தகவல் தெரிந்து சாவு விழுந்த மராட்டிய வீடுகளுக்கு எல்லாம் கிரமமாக நடத்திக் கொடுத்துப் பிணம் தூக்கிப் போக வந்து விடுகிறவர்கள். அவர்களை திலீப் வேறு இடங்களிலும் சந்தித்திருக்கிறான். அதெல்லாம் அவனும் போகக் கூடாத இடங்கள் தன். நல்ல வேளையாக அகல்யா வந்தாளோ அதை எல்லாம் விட்டு விலகி வந்தானோ.

பய்யா, பைசா கொடு. கொடுத்தாத் தான் நெய் வாங்கிட்டு வர முடியும்.

நெய் வாங்கக் காசு கேட்டவன் அண்டர்வேரோடு நின்று கால் சராயை மடித்து தோல்பையில் வைத்து கொண்டிருந்தான். மூலத்தார் வேட்டியை பக்கத்தில் இருந்தவன் தன் பையிலிருந்து எடுத்து நீட்டியபடி திலீபுக்காகப் பரிந்து வந்தான்

தருவான். அம்மாவைப் பறி கொடுத்த பிள்ளை. உனக்கு அந்த சோகம் தெரியாது

திலீப் அவனை விழித்துப் பார்த்தான். எல்லோரும் அவனிடம் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். சினிமாவில் பார்த்தபடி, தொடர்கதையில் படித்தபடி, மேடை போட்டு நீட்டி முழக்கித் தலைவர்கள் பேசுவதைக் கேட்டபடி, எல்லாரும் எதிர்பார்க்கிற படி அவன் இப்போது அழுது புரண்டு கொண்டிருக்க வேண்டும். கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் வடிந்து சட்டையை நனைக்க, விம்மி விம்மி அழ வேண்டும். பக்கத்தில் இருப்பவர்கள் தேற்றத் தேற்ற, அம்மாவைப் பற்றிய பழைய நினைவுகளில் மூழ்கி அதைத் திடுமெனத் தொடங்கும் மறு பாதியாக, நடுவிலிருந்து பிய்த்து எடுத்த ஒரு வார்த்தையாக, சொல்லத் தொடங்கி விம்மலில் கரைகிறதாக வெளியிட்டபடி இருக்க வேண்டும். எதுவுமே இல்லாவிட்டால், டர்க்கி டவலால் தோளைப் போர்த்திக் கொண்டு சூனியத்தில் பார்வை நிலைக்க விழித்துக்கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டும்.

அகல்யா, ஒரு வாய் காப்பி கொடு. தலையை வலிக்கறது.

வாசலுக்கு வந்த அகல்யா அவனைப் பார்க்க, திலீப் கேட்டான்.

அவள் அவனைக் கண்டிப்பது போல் உதட்டைச் சுழித்துக் காட்டி நெய் வாங்கப் போகிறவன் குறுக்கிட, சாவு நடந்த வீட்டு எஜமானியாக முகத்தை வைத்துக் கொண்டாள்.

அகல்யா தலையை இறுக்கமாக முடிந்தபடி அவசரமாக அவன் பக்கம் வந்தாள். வாழ்க்கை பூரா சர்வமங்கள் சால் குடியிருப்பில் இந்த மாதிரி சமாசாரங்களுக்கு நடுவே குடும்பம் நடத்தி, ஆபீஸ் போய் வந்து, தீபாவளியும் கணேஷ் சதுர்த்தியும் கொண்டாடி, ஞாயிறு பகல் பக்கத்துக் குடித்தனப் பெண்களோடு ஊர் வம்பு பேசி, வடா பாவ் வீட்டிலேயே செய்ய முயன்று கருகலும், எண்ணெய் முறுகலுமாக எதையோ செய்து முடித்துப் பகிர்ந்து சாப்பிட்டு கூடிய மட்டும் சந்தோஷமாக இருக்கிற பெண். தமிழ்ப் பிராமணத்தியோ, மராத்திக் காரியோ இல்லை. பெண். எல்லா சூழ்நிலைகளிலும் தலையை உயர்த்தி இருந்து, நதியோடு போய், எட்டரை மணி டோம்பிவிலி-தாதர் லோக்கல் போய் விட்டதா என்பது போன்ற கவலைகள் தவிர வேறே இல்லாத பெண்.

எதிர்க் குடித்தனத்திலே டாங்க்வாலே மருமகள் ரேகா காப்பி போட்டுண்டு இருக்கா. வடா பாவ் வாங்கி வந்தது இருந்தது, அதையும் ஸ்டவ்லே தண்ணி விட்டு மேலே வச்சு சூடாக்கறா. ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு நான் உள்ளே இருந்து கூப்பிடறேன். நேரே டாங்க்வாலே ப்ளாட்டுக்குள்ளே போயிடுங்கோ.

ரேகா எல்லாம் கொடுப்பாள்னா சரி.

அகல்யா அவனை மகா ஆச்சரியத்தோடு பார்த்தாள். அம்மாவைப் பறி கொடுத்து விட்டு நிற்கிறவன், பெண்டாட்டியிடம் ஏடாகூடமாக அர்த்தம் வரும் ஜோக் சொல்லுவானா என்ன? அவனுடைய சிந்தனையும் நினைவும் எல்லாம் ஈசுவரனிலும், உயிர் துறந்த ஆத்மாவை நற்கதிக்குக் கொண்டு செலுத்த இயன்றதைச் செய்வதிலும் அல்லவா இருக்கும்.

நீங்க எங்கேயும் போக வேண்டாம். சும்மா எதுவும் பேசாமா நின்னுண்டிருங்கோ. நானே வந்து கூட்டிப் போய்க் கொண்டு வந்து விடறேன்.

அவள் சொல்லி விட்டுப் போனவள் திரும்பி வந்தாள்.

வாசல்லே ஒரு ஷாமியானா பணிய வேண்டாமா? அகல்யா கேட்டாள்.

ஷாமியானா? புரியாமல் பார்த்தான் திலீப்.

பந்தல்.

எதுக்கு?

எதுக்கா? நாலு அண்டை அயல் பிராமணா குளிக்கறதுக்கு முந்தி வந்து எட்டிப் பார்த்துட்டு ஓடற கதையா என்ன?

வேறே என்னவாம்?

என்ன கேள்வி கேட்டாறது. நினைவில்லையா? நிறை சுமங்கலி. கல்யாணச் சாவு

அப்பா போயாச்சே. அப்புறம் என்ன சுமங்கலி?

அவர் காணாமல் தான் போனார். சௌக்கியமா எங்கேயோ இருக்கார்.

அதுக்கும் ஷாமியானாவுக்கும் என்ன சம்பந்தம்? திலீப் புரியாமல் கேட்டான்.

அது இருக்கட்டும். அம்மா பெரிய லாவணி ஆர்டிஸ்ட். மகாராஷ்ட்ரா பூரா தெரிஞ்சவா, சீஃப் மினிஸ்டர் வரலாம். உங்க பெரியப்பா. செண்ட்ரல் மினிஸ்டர் வருவார். கூடவே அதிகாரிகள் வரலாம். அப்புறம் உங்க தலைவர் கூட.

நிமிர்ந்து பார்த்தான் திலீப். உண்மைதான். அவனுடைய மராத்தி அடையாளத்தைத் தக்க வைத்துக் கொள்வது இந்த சந்தர்ப்பத்தில் முக்கியமானது. மராத்திக்காரி அம்மா இறந்து போனாள். அவனுக்குள் கொஞ்சமாவது அவளுடைய மராத்தி ரத்தமில்லையா ஓடுகிறது?

முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தல் நேரம். லாவணி ஆட்டக்காரி, மராத்தியப் பெண்மணி, ஷாலினிதாய்க்கு ஏக புத்ரன் திலீப். மராத்தியன் திலீப். திலீப் மோரே. இந்த வார்டில் போட்டியிடத் தகுதி. அம்மா இறக்க, திலீப்புக்கு கட்சி வேட்பாளர் அருகதை கிட்டும்.

சுறுசுறுப்பு தொற்றிக் கொண்டது. புதுசாக வந்து சேர்ந்த ஒரு எடுபிடியிடம் ஷாமியானா என்று சொல்ல அவன் சரியென்று சொல்லி, வந்த வேகத்தில் சைக்கிளைத் திருப்பி குலை தெறிக்க ஓட்டிப் போனான்.

வார்ட் பிரமுகர் மிட்டாய்க்கடை கதம் இந்தத் துக்கச் செய்தியைக் கேட்டு ஓடி வர வேணாமா?

ஓரமாகச் சுவரில் சாய்ந்து நின்று சிகரெட்டை ஊதிக் கொண்டிருந்த பிரக்ருதியை ஓடச் சொன்னான். அவனும் மகாராஜா உத்தரவு கொண்ட சிப்பாய் போல் சிட்டாகப் பறிந்தான்.

இந்தப் பயல்கள் எல்லோருக்கும் கணிசமாக, எல்லாம் முடிந்து போகும்போது கொடுக்க வேண்டும் என்று தெரியும். சகலத்துக்கும் செலவாகப் போகிற பணத்துக்கு என்ன செய்வது? பெரியம்மா சலுகை காட்ட, பிஸ்கட் பன்றி மனசே இன்றி அனுமதித்த நாலாயிரம் ரூபாய் கைவசம் உண்டு. அது போதுமா? அதுவும் இதெல்லாம் ஒரு நாள் காரியம் இல்லையே. தமிழோ, தெலுங்கோ, மராத்தியோ, பத்து நாளும் அதற்கு மேலும் இல்லையா ஏதேதோ வைதீகமும், விருந்துமாக முழங்குமே.

அவனுக்கு விசித்திரமாக இருந்தது. சொந்த அம்மா இறந்து போய் இப்படி அதைப் பற்றித் துக்கமோ வருத்தமோ இல்லாமல், மூன்றாம் மனிதன் மாதிரி, அதை அருகே இருந்து பார்த்து அனுபவப்படும் இழவாக மட்டும் எடுத்துக் கொள்ள எப்படி மனம் வந்தது? அடிப்படையிலேயே ஏதோ தவறு அவனிடம்.

இறப்பு சர்ட்டிபிகேட் வாங்கி வந்துடலாமா?

யாரோ கேட்டார்கள். நல்ல விதமாக உடுத்து, சட்டையைக் கால் சராய்க்குள் நுழைத்து கச்சிதமாக இடுப்பு வார் கட்டி இருந்தவர். டை மட்டும் தான் குறைகிறது. இருந்தால் பிஸ்கட் சாஸ்திரிக்கு சகலபாடி போல இருப்பான்.

நாசுக்கான, மேல் மட்டத்தில், அதிகாரப் பெரும் பரப்பில் நடத்தித் தர வேண்டிய காரியங்களைச் செய்வதே எனக்கு வேலை.

வந்தவன் சொன்னான். ஆக, மற்றவர்கள் மூலக் கச்சம் உடுத்தி திலீப்புக்கு சகாயம் புரிய வந்தால், நன்றாக உடுத்தி வேறே மாதிரி உதவி செய்ய வந்தவன் இவன். விரட்ட மனம் இல்லை. இவன் வகையில் நாலாயிரத்தில் ஆயிரமாவது போகலாம். போகட்டும். சாவு சர்டிபிகேட் இல்லாமல் எப்படி மயானத்தில் எரிப்பது?

முன்பணமாக அவனுக்கு இருநூறு ரூபாய் எடுத்துக் கொடுத்து, இன்னொரு எடுபிடிக்கு பதினைந்து ரூபாய் எண்ணிக் கொடுக்கும்போது உள்ளே இருந்து அகல்யா குரல். போனான்.

வேகமா சாப்பிடுங்கோ. அங்கே அம்மா தகனத்துக்குப் போறதுக்காகக் கிடக்கா. இங்கே என்னடான்னா வந்த மூதேவியும் வீட்டுப் பிள்ளையாண்டனும் கொண்டா கொண்டான்னு கொட்டிண்டிருக்கான்னு மூணு பாஷையிலே சொல்வா.

அவன் காதில் மட்டும் படச் சொல்லி முன்னால் நடந்தாள்.

வடாபாவை வாயில் திணித்துக் கொண்டிருந்தபோது அங்கேயே தேடி வந்த அகல்யாவின் அப்பா, மாப்பிள்ளை என்ன இப்படி ஆகிப் போச்சே என்று உலகத்துத் துக்கம் எல்லாவற்றையும் ஒன்றாகத் திரட்டி நிறுத்தி திலீப்பிடம் விசாரிக்கும் குரலில் கேட்டார். போய்ட்டா என்றான் அவன் சகஜமாக.

எச்சில் கையை கால்சராயில் துடைத்தபடி வெளியே வர, ஒரு வேன் வந்து நிற்பது கண்ணில் பட்டது. கூட்டமாக யாரோ வந்து கொண்டிருக்கிறார்கள்.

ஓடி, வாசலில் போய் நின்றான். எடுபிடிகள் காந்தி குல்லாவை நேராக்கிக் கொண்டு அவனுக்கு முன்னால் நகர்ந்தார்கள்.

வேனிலிருந்து மெல்ல இறங்கி வந்து கொண்டிருப்பவர்கள் நகரத்துக்கு வெகு தூரம் வெளியில் இருக்கும் புறநகரப் பிரதேசங்களில் இருந்து வரும் பழைய லாவணி கலைஞர்கள். அம்மா செயலாக இருந்தபோது அவர்களில் பலரும் வீட்டுக்கு வந்து போனதை திலீப் மறக்க மாட்டான்.

கிராமத்துக் கலைகள் எல்லாம் நசித்துக் கொண்டிருக்க, அந்தக் கலைஞர்கள் சாயாக் கடை வைத்தும், தெருத்தெருவாக பன்னும் பிஸ்கட்டும் சைக்கிளில் கட்டி எடுத்துப் போய் விற்றும், தலையணைக்குப் பஞ்சு அடைத்துக் கொடுத்தும் ஜீவித்துக் கொண்டிருப்பவர்கள். சொற்பமான பெண்கள் இவர்களில் உண்டு. எச்சில் தட்டு அலம்பி, வீட்டு வேலை செய்தும், ஆஸ்பத்திரியில் ஆயாவாக பீத்துணி துவைத்தும், சித்தி வினாயகர் கோவில் வாசலில் ஜவந்திப்பூ மாலை விற்றும் வயிறு கழுவுகிறவர்கள். அம்மாவுக்கு வேண்டியவர்களான அவர்களைப் பார்க்க, திலீபுக்கு மனம் நிறைந்து வந்தது.

அவர்கள் ஓவென்று குலவையிட்டுக் கொண்டு வந்தார்கள். அம்மாவின் சடலத்துக்கு அருகே நின்றும் அமர்ந்தும் லாவணிப் பாடல்களைக் குரலெடுத்துப் பாடினார்கள். ஓரிருவர் சுவரில் மோதாமல், ஷாலினி தாய் உடலில் படாமல் சுவடு வைத்து நடனமும் ஆடினார்கள். ஒரு மகத்தான கலைஞருக்கு மற்ற கலைஞர்கள் செய்யும் மரியாதை மட்டுமில்லை, நிகழ்ந்து ஏறக்குறைய நிறைவாக முடிந்த வாழ்க்கைக்கான ஒரு கொண்டாட்டமாகவும் அது இருந்தது என்பதை திலீப் கவனித்தான்.

அகல்யா மறுபடி ஓடி வந்தாள்.

பாட்டி ஒண்ணும் சாப்பிட மாட்டேங்கறா. ரேகா கிட்டே சொல்லி ஒரு ஈடு இட்லி வார்த்து வச்சிருக்கு. ஒண்ணாவது கழிச்சு சிராங்காய் காப்பி குடிங்கோன்னா மாட்டேன்னு அடம். அவ தான் போயிருக்க வேண்டியவளாம். உங்கம்மா பாவம், தானே போய்ச் சேர்த்துட்டாளாம். நீங்க ஒரு வார்த்தை சொல்லி சாப்பிடச் சொல்லுங்கோ.

போனான். பழைய பட்டுப் புடவை வாடையடிக்க கற்பகம் பாட்டி சமையல்கட்டுக் கதவில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள். தளர்ந்து தான் போயிருந்தாள். ஒரு மத்தியதர மேல்தட்டுக் குடும்பத்தைத் தன்னந்தனியாகத் தாங்கி நிறுத்திய மனுஷி, பாம்பே அழுக்கு சாலில் ஊழியம் செய்து தேய்ந்து போன தளர்ச்சி. அவளுடைய வேர்களை விட்டு அகற்றி நட்டு வேடிக்கை பார்க்கிறதாகத் திலீப் உணர்ந்தான். இவளை இனி எங்கே இருத்த வேண்டும்? பெரியப்பா வீடு? அகல்யா கவனித்துக் கொள்ள மாட்டாளா? எத்தனை நாள்?

ஒரு விள்ளல் இட்லியும், ஒரு மடக்கு காப்பியும் அவளுக்கு ஊட்டி விட ரெண்டு பேர் கண்ணிலும் கண்ணீர். அம்மாவுக்கு அழவில்லையே என்று மனதில் ஆதங்கம் சூழ, திலீப் கீழே வந்தான்.

மேக மூட்டமாக இருந்தது. பறவைச் சத்தம். காக்கைகள் அவசரம் என்று குரல் விட்டு, விருட்டென்று மறைய, பழைய கட்டிடங்கள் எழுந்து நிரம்பிய குறுகிய தெருவில் உயரப் பறந்து ஒரு மயில் வந்தது. இன்னொரு மயில், கூட இன்னும் ஒன்று, அடுத்து ஒன்று என மொத்தம் நாலு மயில்கள்.

தாழ இறங்கிய அவை, கட்டத் தொடங்கி இருந்த மூங்கில் பல்லக்குக்கு அருகே நின்றவர்களைச் சிறகடித்து அகற்றிக் கிடைத்த வெளியில் ஆடத் தொடங்கின.

யாரும் எதுவும் பேசவில்லை. புகைக்கவும், சிறுசொல் சொல்லவும் மறந்து அனைவரும் அந்தக் கம்பீரமான அழகில் லயித்துப் போயிருந்தார்கள்.

ஷாலினிதாய்க்குப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை என்பதில் திலீப்புக்கு வருத்தம் மேலெழுந்து வந்தது.

கார் வந்து நிற்கிற சத்தம். இல்லை. அது ஒரு ஜீப். உள்ளே இருந்து குதித்த முதல் பாதுகாப்புக் காவலர் தரை வழுக்கிச் சரிந்தார். காந்தி குல்லாய் எடுபிடிகள், கெட்ட வார்த்தை வசவோ, வலியால் கத்துவதோ, கடவுளை அழைப்பதோ எதையோ மெல்லிய, தீனமான குரலில் சொல்லிய அவரைப் பத்திரமாகத் தூக்கி நிறுத்தினார்கள். உயரமான, கிளிமூக்கு கொண்ட நபர். மலைப் பிரதேசத்தில் இருந்து வந்தவராக இருக்கும் என்று திலீப் நினைத்தான்.,

ஜீப்பில் வந்த மற்றவர்கள் மெல்ல இறங்கித் துப்பாக்கி பிடித்து நிற்க, சைரன் முழங்கி வந்து நின்ற காரில் இருந்து வெளிப்பட்ட, கையில் ஃபைல் வைத்திருக்கும் அதிகாரிகள், சந்திர மண்டலத்தில் நடக்க உத்தேசிப்பது போல் நடந்தார்கள். அடுத்து வந்த காரில் இருந்து திலீப்பின் மினிஸ்டர் பெரியப்பா இறங்கினார்.

அவர் எல்லோரையும் பார்த்து, உறைந்த புன்னகையோடு கை கூப்பினார். மயில்கள் அது பாட்டுக்கு ஆடிக் கொண்டிருக்க, உள்ளே இருந்து வந்த லாவணிக் கலைஞர்கள் குல்லா கையில் எடுத்து வணக்கம் சொன்னார்கள்.

சாவு வீட்டுக்கு, அதுவும் சொந்த சகோதரனின் மனைவி இறந்து போன துக்கமான நிகழ்வுக்கு வந்திருக்கிற நினைவு வந்தோ என்னவோ பெரியப்பா உதடுகளைக் கோணி சிரிப்பை அழித்தபடி, துக்கம் தாங்காது போனது என்பது போல் தலையைத் தொடர்ந்து இடம் வலமாக ஆட்டியபடி வந்தார்.

கொங்கணிப் பெண்மணியின் முலைகள் நடுவே முகம் புதைத்து இப்படித் தலையசைய நேரு நினைவுகளை அவர் கெல்லி எடுத்துக் கொண்டிருந்தது திலீபுக்கு நினைவு வந்தது.

சாவு வீட்டில் நல்ல சிந்தனைகளே உன்னைச் சூழ்ந்திருக்கட்டும் என்று மயில்கள் அவனைப் பார்த்துச் சொல்லியபடி ஆடின.

அதுகளை யாராவது ஓட்டுங்கோ. கண்ணைக் குத்தி வைக்கப் போறது. நேரம் காலம் தெரியாம அது பாட்டுக்கு ஆடறது.

பெரியப்பா ஜாக்கிரதையான இந்தியில் சொன்னார். தில்லி புதுத் துரைத்தனத்து மொழி. லாவணிக் கலைஞர்கள் புரிந்து கொண்டு தலை ஆட்டினார்கள்.

அது போயிடும் சாப். மெல்ல கை அசைச்சா போதும்.

நாலைந்து பேர் கை அசைத்துக் கால் மாற்றி நின்று முன்னால் சென்று மீள, போங்கடா என்று அதுகள் பாட்டுக்கு ஆட்டத்தைத் தொடர்ந்தன.

அப்சரா ஆளி.

கூட்டமாக அவர்கள் பாடத் தொடங்கினார்கள். பூம்பூம் என்று முழங்கிய சாவுச் சங்குகள் குரல்களோடு கலந்து ஒலித்தன. வரட்டியில் பற்ற வைத்த அக்னி சாவு வாடையை விருத்தி செய்து கொண்டு பற்றிப் படர இன்னொரு வரட்டியைக் குல்லாய்க் காரன் ஒருத்தன் தரையில் இட்டான்.

மயில்கள் ஒரு வினாடி நின்றன. போகலாம் என்று யாரோ சொன்னது போல் அவை ஒரே நேரத்தில் இறகு வீசிப் பறந்து மேலே உயர்வதை திலீப் பார்த்தான். அவன் மனதுக்குள் அவற்றுக்கு நன்றி சொல்ல, அம்மா போகுமிடத்துக்கு அவளுக்குத் துணை உண்டு கவலைப் பட வேண்டாம் என்று அகவி உயர்ந்த மயில்கள், அடுத்த கணம் பார்வை வட்டத்தை விட்டு நீங்கின.

புதுப் புடவை வந்தாச்சா? மராத்தி புரோகிதன் விசாரித்தான்.

வாங்க ஆள் போயிருக்கு. யாரோ சொன்னார்கள்.

என்ன நிறம்? சோனியாக நின்ற ஒரு பெண் கேட்டாள். அண்டை வீடு.

வெள்ளை.

எதுக்கு வெள்ளைப் புடவை? சுமங்கலியாப் போயிருக்கா. சிவப்புப் புடவை தான் உகந்தது.

பக்கத்து, எதிர் குடித்தனப் பெண்கள் ஒரே குரலில் சொன்னார்கள்.

திலீப் அப்பாவை நினைத்துக் கொண்டான். அவர்கள் அவர் இன்னும் எங்கோ ஜீவித்திருப்பதாக திடமாக நம்புகிறார்கள். அகல்யா கூடத்தான். அதை மறுக்க எந்த ஆதாரமும் யாரிடமும் இல்லை. ஷாலினிதாய் மஞ்சளும் குங்குமமுமாகத் தான் சிதை ஏறுவாள்.

திலீப் மனசைத் திடப்படுத்திக்கோ. நாம கொடுத்து வச்சது அவ்வளவு தான்.

பெரியப்பா அவன் கையைப் பிடித்தபடி சொன்னார். என்னமோ தோன்ற அவர் தோளில் முகம் புதைத்துக்கொண்டான் திலீப். மெதுவாகத் தட்டியபடி, கம்போஸ் யுவர்செல்ப் என்று இரண்டு தடவை சொன்னார் பெரியப்பா.

உன் ஆத்துக்காரி எங்கே?

அகல்யா வந்து காலைத் தொட்டு வணங்க முற்பட, வேண்டாம் என்று விலக்கினார்.

அகல்யாவின் அப்பா எல்லோரையும் இடித்துக் கொண்டு முன்னால் வந்து பெரிதாக வணங்கி, கஷ்டப் படாம போனாளே அதுவே நிம்மதி என்று பெரியப்பாவிடம் சொல்ல அவர் யோசனையோடு பார்த்தார். எங்கப்பா என்றாள் அகல்யா.

குளிப்பாட்டிடலாமா?

யாரோ கேட்டார்கள்.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன