என் புதிய கட்டுரை – அம்புஜம்மாள் தெருவில் : ஜன்னல் மே 15 2015

தெய்வத்தை நினைத்து, அம்புஜம்மாள் தெருவில் ஸ்கூட்டர் நிறுத்தினேன். போன காரியம் முடிந்து திரும்ப வந்தால் வண்டி இருக்கும். ஆனால் தெரு காணாமல் போய்விடக் கூடும். மாநகராட்சி தொடங்கி, மத்திய சர்க்கார் தொலைபேசித் துறை வரை சளைக்காமல் ஆழமாகவும் அகலமாகவும் தோண்டிய வீதி அது. பதவி ஓய்வு பெற்று சென்னை வந்த வேண்டப்பட்ட ஒருவர் அங்கே இருந்தார். அவரைச் சந்திக்கப் போகும் நிமித்தம், அடிக்கடி நான் கடவுளை நினைக்க வேண்டிப் போன ஆயிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணூறுகள், அந்தக் காலகட்டம்.

’என்ன, எலக்ட்ரீஷியன் மாதிரி ஒயரோட அலைஞ்சிட்டிருக்கே’

சிரிக்காமல் கேட்டார், நான் தேடிப் போனவர்.

’ஒயர் இல்லே சார், ஆபீஸ் கம்ப்யூட்டர் மயமாக்கற வேலைக்காக, ஆர்ஜே 11 கனெக்டர்கள்’ என்றேன்.

’ஆர்ஜே 11 சான்ஸே இல்லே. அது ஃபோனுக்கு. இது கம்ப்யூட்டருக்கு, ஆர்ஜே 45 ஈதர்நெட் கனெக்டார்’.

அவர்தான் சுஜாதா. தப்பாகத் தகவல் கொடுத்தால் மடக்கி விடுவார். இலக்கியமோ, சினிமாவோ, இண்டெர்நெட்டோ, கம்ப்யூட்டரோ, எதைப் பற்றியும் தான்.

நான் கொண்டு போயிருந்த, புதியதாக வெளிவந்த என் புத்தகத்தைக் கொடுத்தேன். அட்டையின் வார்னிஷ் வாடை கை நிறைய அப்பிக் கசிந்தது. அவர் முகத்தைச் சுளிக்காமல் புத்தகத்தை வாங்கினார்.

‘டெக்னாலஜி கட்டுரைத் தொகுப்புக்கு, ’கொறிக்கக் கொஞ்சம் கம்ப்யூட்டர் சிப்ஸ்’ன்னு பேரு சின்னப்பிள்ளைத் தனமா இருக்கு. வேறே தலைப்பு கிடைக்கலேயா?’

‘இது பப்ளிஷருக்குப் பிடிச்ச தலைப்பு சார்’.

’உன் எழுத்துக்கு நீ தான் பொறுப்பு’.

சிரித்தபடி சுஜாதா சொல்ல, நான் அந்த வார்த்தைகளுக்குப் பின்னால் இருந்த பிரியத்தையும், கண்டிப்பையும் புரிந்து கொண்டேன்.

திரும்பும்போது, உள்ளே போய் எதையோ எடுத்து வந்தார்.

’டெர்மினல் எமுலேஷன் பற்றி நீ சொன்னது சரிதான்.’

நாலு மாதம் முந்திய யூனிக்ஸ் வோர்ல்ட் பத்திரிகையைக் கொடுத்தார்.

அறிவுத் தேடல். வாசிப்பு. பகிர்வு. அதுவும் சுஜாதா தான்.

அவர் பைபாஸ் முடிந்து வந்திருந்த நேரம். காலில் நீளமாக வடு. அறுவை சிகிச்சைக்காக அவரைக் குத்திக் கிழித்திருந்ததைப் பார்க்க கஷ்டமாக இருந்தது.

ரெண்டாம் பைபாஸ் வெற்றிகரமாக முடிந்து அதற்கப்புறம் ரகளையாக இருபது வருடத்துக்கு மேல் அட்டகாசம் செய்து கொண்டிருந்த யாரையோ பற்றி விவரித்துக் கொண்டிருந்தார் சுஜாதா. அவர் சிரிக்காமல் சொன்னாலும், எங்களால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. எங்களால் என்றால், நானும், மறைந்த நண்பர் ‘ஆய்வு வட்டம்’ வெ.கிருஷ்ணமூர்த்தியும்.

அந்த நேரத்தில் சந்திப்புகளைத் தவிர்த்து வந்தாலும், ’வெ.கியோடு கூட ஒரு அஞ்சு நிமிஷம் பேச முடியுமா’ என்று தொலைபேசிக் கேட்டதும், ‘யாரு, நா.வானமாமலை மாணவர் தானே, கூட்டிட்டு வா, நானே பார்க்கணும்னு இருந்தேன்’ என்று உடனே சம்மதித்தார். வாரக் கடைசியில் போயிருந்தோம்.

நொபோரு கராஷிமா என்ற ஜப்பானிய வரலாற்று ஆய்வாளர், சோழர் கால வாழ்க்கை முறை, மற்றும் ராஜராஜன் காலத்தில் நடந்த உழவர் கலகம் பற்றி எழுதியிருந்தார். அதைப் பற்றிப் பேச்சு சுழன்று கொண்டிருந்தது. அங்கிருந்து, திருவரங்கம் கோவிலில் அந்நியர் படையெடுப்பு, கோபுரத்திலிருந்து விழுந்து உயிர் விட்டவர்கள், சிவகங்கை சரித்திரத்தில் மருதுநாயகம் என்ற கான்சாகிபின் பங்கு … முழுக்க வரலாறாகப் பேசிக் கொண்டே போனார் சுஜாதா.

திருமதி சுஜாதா நாசுக்காக, ’போதும், சிரமப் படுத்திக் கொள்ள வேணாம்’ என்று குறிப்பால் உணர்த்த, நானும் வெ.கியும் எழுந்து கொண்டோம். கைகாட்டி அமர்த்தினார் சுஜாதா. ஆனாலும் என்ன, எழுந்தது எழுந்ததுதான்.

‘இதெல்லாம் வரவர எப்போவாவது தான் பேசக் கிடைக்கறது. முக்கால் வாசி நேரம் சினிமாக் கதை வசனம் எப்படி எழுதறீங்க, அவர் ஏன் இப்படிச் சொன்னார், ஏன் இந்தப் படம் ஓடலே, எவ்வளவு பணம் கொடுப்பாங்க இந்தப் பேச்சு தான். கான்சாகிப் சண்டை புத்தகம், நா.வா பப்ளிஷ் பண்ணியிருக்கார்னீங்களே, இருந்தா அனுப்புங்க, படிச்சுட்டுத் தரேன்’

விடைபெறும் போது சொன்னார் சுஜாதா. அவருக்குப் பின்னால் சாப்பாட்டு மேஜையில், உயர ஸ்டூலில், மர ஷெல்பில், சோபா ஓரமாக என்று அவர் அறுவை சிகிச்சைக்கு மருத்துவமனை போன காலத்தில் வந்து குவிந்திருந்த புத்தகங்களைப் பார்த்தபடி வெளியே வந்தோம்.

’தெளிவான பார்வை, ஆழ்ந்த படிப்பு, அபூர்வமான மனிதர்’.

ஆச்சரியத்தோடு பார்த்தேன். வெ.கி சாதாரணமாக யாரையும் பாராட்ட மாட்டார்.

தாய்லாந்தில் இருந்து, நடுவில் இங்கே வந்தபோது, ஒரு மாலைப் பொழுதில் அம்புஜம்மாள் தெரு போனேன்.

‘என்ன, லேசா வெயிட் போட்டிருக்கே?’

‘சிவப்பு மாமிசம், சார்.. வேறே சாய்ஸ் இல்லே’.

‘லீன் மீட், போன்லெஸ் சிக்கன்.. தயிர் கிடைக்கலேன்னா பல்கேரியன் யோகர்ட் பிசைஞ்சு தயிர் சாதம்.. தேடினா கிடைக்கும்’. ட்ரேட்மார்க் சுஜாதா சிரிப்பு.

நினைவாகக் கேட்டார், ’கான்சாகிப் சண்டை என்ன ஆச்சு?’.

’வெ.கி காலமாயிட்டார் சார்’.

வெ.கி என்னிடம் புத்தகம் கொடுத்திருந்ததையும் அதை நான் கைமறதியாக எங்கேயோ வைத்துவிட்டதையும் சொல்லவில்லை.

தாய்லாந்து திரும்பினதும் ரெண்டு நாள் சுஜாதா அறிவுரையைக் கடைப்பிடித்து, பல்கேரியன் தயிர் சாதம். அப்புறம், திரும்பவும் சிவப்பு மாமிசம். இலக்கியத் தேடல், வரலாற்று விவாதம், தொழில் நுட்ப அறிவு மேம்படுத்துதல், எழுத்து, வாசிப்பு என்று எல்லாமே வாழ்க்கைக்கு அப்புறம் தானே.

வயிற்றுப் பிழைப்புக்காக வெவ்வேறு நாடு, வெவ்வேறு ஊர் என்று அலைந்து கொண்டிருந்த போதும், தொலைபேசி, மின்னஞ்சல் என்று எப்படியாவது மாதம் ஒருமுறை அவரைப் பிடித்து விடுவேன். நேரில் பேசுகிற அதே நேசமும், கண்டிப்புமாகத் தொடர்பு கிடைக்கும். நான் படித்த ஒரு கவிதையை அனுப்ப, ’கண்ட குப்பையை அனுப்பி நேரத்தை வீணாக்காதே’ என்ற திட்டு கிட்டியதும் உண்டு. என்ன எழுதினாலும், பேசினாலும், கான்சாகிப் சண்டை பற்றி விசாரணை இல்லாமல் இருக்காது. வெ.கி கொடுக்கலை என்று பொய் சொல்ல மனம் வராமல் நான் சுற்றி வளைத்துக் கட்டி ஏதேதோ பேசியே அடுத்த பத்தாண்டு போனது.

போன வருடம் வீடு மாற்றும்போது யூனிக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பற்றிய நாலைந்து தடிப் புத்தகத்தைக் களைய வேண்டியிருந்தது. உலகம் யூனிக்ஸை விட்டு வெகு தூரம் முன்னே போய்விட்டதால் அவை தேவையே இல்லை.

யூனிக்ஸ் புத்தகங்களோடு, வெ.கி கொடுத்த ‘கான்சாகிப் சண்டை’ இருந்தது. பத்திரமாக எடுத்து வைத்துக் கொண்டேன். சுஜாதா சொல்லிக் கொடுத்த வாசிப்பும், பகிர்வதும் அவர் இல்லாவிட்டால் தொடரக் கூடாதா என்ன?

(Photo courtesy Wall Street Journal – Photo Journal)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன