முத்தம்மாவும், தெரிசாவும், போதும்பொண்ணும், செல்வியும், அலமேலம்மா கிழவியும் : குறுநாவல்

முத்தம்மா டீச்சர் அடிக்கக் கை ஓங்கினாள் செல்லமாக.

 

‘இதைச் சொல்லத்தான் வந்தீங்களா?’

 

முத்தம்மா சோப்புத் துண்டை வயிற்றோடு அமுக்கிப் பிடித்துக் கொண்டாள்.

 

‘அதில்லே.. ஞாயித்துக்கிழமையாச்சே.. கவிச்சி ஏதும் சமைக்கலியா?’

 

மாப்புள்ளைக்குக் கவிச்சி ரொம்ப இஷ்டம். அதுவும் மட்டன் கவாபு.

 

‘கவிச்சியா? சமைச்சா என்ன கொடுப்பீங்க?’

 

பின்னாலிருந்து தழுவ வருகிற கைகள்.. கண்ணாடியில் நீராவி படிந்து உடம்பு தெரிய மாட்டேன் என்கிறது.

 

‘சாயந்திரம் படத்துக்கு கூட்டிட்டுப் போறேன்.. உனக்குப் பிடிச்ச படம்..’

 

புடவையைச் சுற்றிக் கொண்ட போது வாசல் கதவைத் தட்டுகிற சத்தம்.

 

‘பாட்டொன்று பாடலாமா?’

 

வாய்க்குள் பாடிக் கொண்டே முத்தம்மா டீச்சர் கதவைத் திறந்தாள்.

 

மெஸ் வீட்டுப் பையன்.

 

‘டீச்சர்.. இட்டலியும் கறிக்குழம்பும் இருக்குது.. பாத்திரத்தை சாயந்திரம் வாங்கிக்கறேன்..’

 

மேஜை மேல் அடுக்குப் பாத்திரத்தை வைத்து விட்டு ஓடுகிற பையன்.

 

‘காசைக் கரியாக்காதேன்னா கேட்டாத்தானே. மெஸ்ஸிலே வாங்கித் தின்னுட்டுக் கிடக்க பணம் என்ன கொல்லையிலே வெளையுதா.. நாளைக்கே ஜோதி பொண்ணுக்குக் கல்யாணம்.. வளைகாப்பு.. பந்தி போஜனம்..’

 

புகைப்படத்திலிருந்து அம்மா முழங்காலைப் பிடித்துக் கொண்டு இறங்கிவர முயற்சி செய்கிறாள்.

 

‘இட்லியும் கறிக் குழம்புமா.. தோசைக்கு இல்லே நல்லா இருக்கும் அது.. இட்லிக்கு வடகறிதான்..’

 

காம்போசிஷன் நோட்டு அடுக்கி வைத்திருந்த மேசை மேல் உட்கார்ந்து சுருட்டுப் பிடித்தபடி மாப்பிள்ளை சொல்கிறார்.

 

’எறங்குங்க.. நோட்டெல்லாம் பத்திக்கப் போவுது.. காம்போசிஷன் கரக்ட் பண்ணி நாளைக்கு ஸ்கூலுக்கு எடுத்துப் போகணும்..’.

 

‘இட்லிக்கு கறி நல்லாத்தானே இருக்கும்..’

 

நாயனா புகைப்படத்தில் பக்கத்தில் நின்ற அம்மாவிடம் விசாரித்தார்.

 

’அது கெடக்கு.. தோசைக்கடை போட்டு வாய்க்கு வக்கணையாப் பரிமாறி நாலு காசு சமபாதிக்கலாம்னேன்.. பணம் இல்லேன்னுட்டா..’

 

புகைப்படத்திலிருந்து அம்மா முணுமுணுக்க்கிறாள்.

 

‘கூறு கெட்டவளே.. தோசை தோசைன்னு அடிச்சுக்கறியே.. இவளுக்கு ஒரு கல்யாணம் காச்ச்சி நடத்திப் பார்க்க ஏதாவது வழி பண்ணினோமா..’

 

முத்தம்மா டீச்சரின் நாயனா அந்தக் கல்யாணப் புகைப்படத்திலிருந்து இறங்கித் தபால் பட்டுவாடா பையை ஓரமாக வைத்து விட்டுத் தரையில் உட்கார்கிறார்.

 

நின்றபடியே, ஒரு இட்லியை விண்டு குழம்பில் புரட்டினாள் முத்தம்மா டீச்சர். வயிறு கொள்ளாத பசி எழும்பி வந்து நெஞ்சில் அடைத்தது.

 

‘அம்மா.. படம் வந்திருக்கு.. போகட்டா?’’

 

‘அதான் ராசாத்தி கல்யாணத்துக்கு அப்புறம் போனியே..’

 

அம்மா சின்ன நக்கலோடு சொல்ல நடுக் கூடத்தில் நீட்டி நிமிர்ந்து அசையாமல் படுத்துக் கொண்டார் நாயனா.

 

‘அன்னிக்கு நான் தானே படம் பார்க்க கூட்டிப் போனது..’

 

மாப்பிள்ளை கள்ளக்குரலில் காதில் கிசுகிசுக்கும் போது மூச்சு முட்ட வைக்கிற சுருட்டு வாடை.

 

‘அன்னிக்கும் காலையிலே பசியாற இட்டலிதான்.. கவிச்சி இல்லேன்னுட்டாங்க.. பொண்ணைக் கூட்டிப் போறதுக்கு தலைநாள் சைவம் சமச்சு விரதம் இருக்கறதாம்..என்ன பளக்கமோ.. அன்னிக்கு என்ன கெளமை? ஞாபகம் இருக்கா முத்து?..’

 

இல்லாமல் என்ன.. செவ்வாய்க் கிழமை. கல்யாணத்துக்கு வந்த பொண்ணோட தோழிப் பெண்டுகளும் மற்றவர்களும் ஓய்ந்து கிடக்கிற பகல் பொழுது. முத்தம்மாவும், தெரிசாவும், போதும்பொண்ணும், செல்வியும், அலமேலம்மா கிழவியும் சீர்வரிசைப் பாத்திரத்தை எடுத்துப் பெட்டிக்குள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

சந்தனம் சிதறிக் காய்ந்து போயிருந்த ஜமுக்காள விரிப்பில் ராசாத்தி மல்லாந்து படுத்துக் கிடக்கிறாள்.

 

‘இப்படியே பளகிடுச்சாடி?’

 

தெரசாள் சீண்ட, ஓவென்று உயரும் சிரிப்புச் சத்தம்.

 

முண்டா பனியனும் லுங்கியுமாக மாப்பிள்ளை உள்ளே வரும்போதே சின்னதாகச் சிரித்துக் கொண்டுதான் வருகிறார். அவரும் கேட்டிருக்க வேண்டும்.

 

ராசாத்தி அவசரமாக எழுந்து உட்கார, கண் செருகுகிறது.

 

‘இதுக்கே இப்படிக் கெறங்கிப் போனா எப்படி.. இன்னும் மூணு நாள் தனிப் பொட்டியிலே ரயில் பயணம்.. கல்கத்தா போய்ச் சேர்ந்து மாப்பிள்ளை இவளை தோள்லேதான் தூக்கிட்டுப் போகணும்…’

 

போதும்பொண்ணு சொல்ல மறுபடி எழுந்த சிரிபபாணி.

 

முத்தம்மாவுக்கு சந்தோஷமாக இருக்கிறது. பயமாக இருக்க்கிறது. இனிமேல் கொல்லைப் பக்கம் போகக் கூடாது. வீட்டில் போய்த்தான் ஒன்றுக்கு இருந்து விட்டு வர வேண்டும். இல்லையோ போச்சு…

 

ராசாத்தி வீட்டுக் கொல்லையில் பெரிது பெரிதாக வேப்ப மரமும், மாமரமும்…

 

மரத்துக்குப் பின்னால் சுருட்டுப் பிடித்தபடி நின்ற மாப்பிள்ளை.. அவர் முத்தம்மாளைக் கூப்பிடுவார். கூப்பிட்டார்.

 

மாப்பிள்ளை உள்ளே வந்தபோது அவ்ர் கண்ணைப் பார்க்காமல் முகத்தைக் கவிழ்ந்து கொண்டாள் முத்தம்மா .

 

ரொம்ப மோசம் நீங்க..

 

மாப்பிள்ளை நுழைந்ததைப் பார்த்து அலமேலம்மாள் மட்டும் நாணிக் கோணிக் கொண்டு எழுந்து நின்றாள்.

 

‘இதுங்க எல்லாத்துக்கும் வாய் சாஸ்தி.. தப்பா நெனச்சுக்காதீங்க..அவ அவளுக்கு வீட்டுக்காரன் வந்து வாயிலே போட்டா அப்புறம் பேச்சு எளும்புமான்னேன்..

 

மாப்பிள்ளை முத்தம்மாவைப் பார்த்துச் சிரித்தார். அப்புறம் ராசாத்தியைப் பார்த்தார்.

 

‘’ராசாத்தி.. சாய்ந்திரம் எல்லோருமா சினிமாவுக்குப் போறோம்.. எல்லோரும்னா எல்லாரும் தான்.. உன் சினேகிதிங்க வீட்டுலே நான் சொன்னேன்னு சொல்லு..’

 

சொல்லி விட்டுத் திரும்ப வாசலுக்கு நடக்கிற மாப்பிள்ளை..

 

முத்தம்மா டீச்சர் கடைசி விள்ளல் இட்லியை கறிக் குழம்பில் தோய்த்து வாயில் போட்டபோது, மாப்பிள்ளை போய் விட்டிருந்தார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன