எழுதிக் கொண்டிருக்கும் நாவல் ‘மிளகு’-வில் இருந்து

பிற்பகலில் கோமாளி வந்தான். பிறந்த நாள் கொண்டாட்டத்தின் பகுதியாக, விருந்துக்கு அப்புறம் கோமாளி ஆட்டமும் பாட்டும் தொடங்கின. ஷெனாய், தெற்கத்திய ஊதுவாத்தியமான நாகசுவரம், மகுடி போல முகத்துக்கு நேரே பிடித்து வாசிக்கும் நீளமான குழல், தெற்கே எங்கும் வாசிக்கும் சிறு குழல், வீணை, சரோட் என்று வாத்திய இசையும், குரல் இசையும் வழங்க அடுத்து அடுத்து பிரபலமான இசைக் கலைஞர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். பெரிய விருந்து. விதவிதமான உணவு வந்து கொண்டே இருந்தது. உண்ட மயக்கத்தில் எல்லோரும் உறங்கிப் போவது இயற்கை என்றாலும் ராணி முன்னால் கொட்டாவி விட்டுக் கண்கள் செருக அரைத் தூக்கத்தில் இருப்பது அவமரியாதை அன்றோ.

தவிர்க்கத்தான் விருந்துக்கு அடுத்து அதிக நேரம் கடத்தாமல் கோமாளி வந்தான்.

ஆரம்பிக்கும்போதே அவன் நேமிநாதனிடம் மிகுந்த பணிவுடன் கேட்டுக் கொண்டது இந்தத் தோதில் இருந்தது –

“கொஞ்சம் வார்த்தை அப்படி இப்படிப் போகலாமா? சபை நாகரிகம் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேணுமென்றால் சொல்லுங்க ஐயா”.

சென்னபைரதேவி சிரித்து ஆகட்டும் என்று கைகாட்ட தெம்போடு தொடங்கினான் கோமாளி.

”இது யார் மனதையும் புண்படுத்த இல்லை. எல்லா நடப்பிலும் நகைச்சுவையைக் கண்டு அதை எந்தச் சார்பும் இல்லாமல் கொண்டாடுவோம் வாருங்கள்”.

நான்கு கோமாளிகள், அதில் ஒருவன் பெண்ணாக வேடமிட்டவன் ஆட்டம் நிகழிடத்தைச் சுற்றிச் சுற்றி வந்தார்கள். முதல் கோமாளி பாடினான்

வெள்ளைக்கார பூமியிலே
நல்ல பல வாசனைகள்
வந்த கதை தெரியுமா?
சொன்னாக்க குத்தவச்சு
வாந்தி வரும் சரியா?

”ரோமாபுரியில் பண்டு பண்டொரு காலத்தில் நடந்தது இது. பொய்யில்லை. முழுக்க உண்மை.
புராதன ரோம் நகரத்தில் துணிகளை வெளிரெறு சலவை செய்து தர நிறுவனங்கள் இருந்தன. அதற்கான வாயு வேண்டுமே? அந்தக் காலத்தில் ஏது? ஆகவே அந்தக் குறிப்பிட்ட வாய் நிறைந்த சிறுநீரை இந்தக் காரியத்துக்காக உபயோகப்படுத்தினார்கள். சலவைக்கடை வாசலில் பெரியதாகப் பள்ளம் தோண்டி, “இங்கே சிறுநீர் கழிக்கவும்’ என்று அறிவுப்புப் பலகை வைத்து, நகர மக்களை வேண்டி விரும்பி அழைத்தார்கள்”.

இரண்டு கோமாளிகள் மூன்றாமவனிடமும் பெண் வேடம் போட்ட நான்காவது கோமாளியிடமும் கேட்கிறார்கள்

“ஐயா, வாங்க வாங்க, மூத்திரம் பெய்து எங்களை கௌரவப்படுத்துங்க. அக்கா மூத்திரம் போகலியா?”

எல்லாரும் சிரிக்கிறார்கள். அந்தப் ’பெண்’ கன்னதில் அடித்து விட்டுப் போக இன்னும் அதிகமான சிரிப்பு எழுகிறது.

முதல் கோமாளி சிரிப்பை அங்கீகரித்து அடக்கி விட்டுப் பேசுகிறான் –

”ரோமானியர்கள் பற்றி இன்னொரு தகவல் – அவர்கள் சலவை செய்யப் பயன்படுத்தியது போக மீந்த மேற்படி திரவத்தை வாய் கொப்பளிக்கவும் உபயோகித்தார்கள். துர்நாற்றம் இல்லாமல் இருக்கவே இந்த ஏற்பாடு. ரோமாபுரியிலேயே கிடைத்தது தவிர, ஸ்பெயின் பிரதேசத்திலிருந்து வரவழைத்த சரக்குக்கும் ஏக கிராக்கியாம். அதி சக்தி வாய்ந்த கிருமிநாசினி இந்த வெளிநாட்டுப் பொருள் என்று பரவலான நம்பிக்கை”.

‘ரோமானியப் பேரரசின் இறக்குமதி அனுமதி பெற்ற கடை. இவ்விடம் மொத்தமாகவும் சில்லறையாகவும் ஸ்பெயினிலிருந்து வந்த நயம் ..”

சிரிப்பு அடங்க இரண்டு நிமிடமாகிறது. அதற்குள் கோமாளிகள் எல்லோரும் தரையில் கையூன்றி சக்கரம் போல் சுழன்று போகிறார்கள். கை ஊன்றி முன்னால் விழுந்து எழுகிறார்கள்.

“போர்த்துகீசியர்களும் இப்படியான பாரம்பரியம் உள்ளவர்களா?” யாரோ கேட்க, கோமாளி சிரிக்கிறான்.

”அவர்கள் ஸ்பெயின் நாட்டுக்கு கைப்பொம்மை ஆகி எத்தனையோ வருஷம் ஆச்சுதே. மூத்திரம் போகக் கூட ஸ்பெயின் நாட்டிடம் அனுமதி கேட்பார்கள். இங்கிலாந்து மேல் படை எடுக்க நாலு கப்பல் பாலைவனத்தில் கொண்டு வந்து சேருங்கள் என்று அவர்கள் கட்டளையிட்டால் பாலைவனத்தை தேடி ஓடுவார்கள்”

போர்த்துகீசியர்களால் பாதிக்கப்பட்ட ஊர் வணிகப் பிரமுகர்களில் சிலர் சிரிக்க, மற்றவர்கள் சற்றுத் தாமதித்து வாங்கிச் சிரித்தார்கள்.

“கொங்கண பிரதேசத்தில் கொங்கணி பேசினால் நாக்கைத் துண்டிப்போம் என்று அறிவித்து நாக்கைப் பிடுங்க மலிவு விலையில் கத்தி கிடைக்குமா என்று மால்பே வரை தேடித் திரிந்தவர்கள் அவர்கள் ஆச்சே”

சென்னபைரதேவி கைகாட்டி நிறுத்தினாள். நகைச்சுவை அரசியல் கலந்தபோது உக்கிரமான வெடிகுண்டாகி இருக்கிறது. இது இன்னும் தொடர வேண்டாம் என்று எழுந்தாள். அவை கலைந்தது.

ஜெர்சூபா சிதிலமான கட்டிடம் – படம் நன்றி tripadviser.com ட்ரிப் அட்வைஸர்.காம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன