முத்தம்மா டீச்சர் இன்னும் பார்த்து முடிக்காத கேவா கலர் தமிழ்ப் படம் – பழைய பிரிண்ட்

‘என்ன டீச்சர், இன்னும் எத்தனை நோட்டு பாக்கி இருக்கு?’

 

கதிரேசன் வாத்தியார் குரல்.

 

மேசைப் பக்கம் மசங்கலாகத் தெரியும் முகம்.

 

இவரெங்கே வந்தது? உயிரோடு தான் இருக்கார.. இல்லே, மாப்பிள்ளை மாதிரி…

 

முத்தம்மா டீச்சர் அவசரமாகப் புடவைத் தலைப்பைச் சரி செய்யக் கையை வைத்து, சும்மா விட்டுவிட்டு, புன்சிரிப்போடு, திருத்தி முடித்த நோட்டில் இனிஷியல் போட்டாள். ஓரமாக, சிவப்பு மையால் ‘நன்று’ என்று எழுதினாள்.

 

‘முத்தம்மா டீச்சர் கையெழுத்தும் முத்து தான்..’

 

துடித்து எழுந்து நின்ற மார்பையும் பின்புறத்தையும் பார்வையால் வருடியபடி கதிரேசன் கருப்பு வெள்ளைப் படமாகச் சுவரில் நகர, முத்தம்மா டீச்சரின் முகம் வெட்கத்தில் சிவந்து போனது.

 

‘சுறாப்புட்டு வேணுமா சார்?’

 

முத்தம்மா தரையைப் பார்த்துக் கொண்டு, சிரித்தபடி கேட்கிறாள்.

 

‘எல்லாந்தான் வேணும்.. கூட உக்காந்து சாப்பிட்டு, இப்படிக் கை போட்டு அணைக்க..பாட்டுப் பாடி.. உடம்பெல்லாம் முத்தி…தலைமுடியோட ஈரம் என்னமா இதமா இருக்கு..சந்தன சோப்பு போட்டுக் குளிச்சாப்பிலேயா டீச்சர்.. வாடை மனசைக் கெறக்கறதே..’

 

கதிரேசன் வசீகரமாகச் சிரிக்கிறான். சிகப்புச் சாயம் பூசிய உதடுகளோடு அவன் முகம் இப்போது கேவா கலரில் பிரகாசிக்கிறது. தொப்பை போட்டு பவுடர் அப்பியிருக்கிறான்.

 

நான்காம் வகுப்புக்கு வாத்தியார் கதிரேசன். முத்தம்மா ஐந்தாம் வகுப்பு டீச்சர்.

 

கதிரேசன் மனைவி விசாலாட்சி டீச்சர். பாதி நாள் லீவு. சீக்கு உடம்பு…

 

வாத்தியார் சாப்பிட ஒரு நாள் வீட்டிலிருந்து இன்னொரு டிபன் பாக்ஸில் சுறாப்புட்டு எடுத்துப் போனாள் முத்தம்மா டீச்சர்.

 

பாவம்.. நாக்கு செத்த மனுஷன்..

 

‘அய்யோ இம்புட்டுமா.. எப்படி சாப்பிடறதாம்?’

 

கதிரேசன் கேட்டான் அன்றைக்கு.

 

‘மீதி இருந்தா வச்சுடுங்க.. நான் சாப்பிட்டுக்கறேன்..’

 

சொல்லி முடிப்பதற்குள் வெட்கத்தில் உடம்பு சிலிர்த்துப் போனது.

 

‘டீச்சர்.. அடுத்த மாசம் ஆண்டு விழா வருது..ஒரு புரொகிராம் செய்யண்மெ.. டான்ஸ் வச்சுடலாமா… ‘

 

சாப்பிட்டபடி கேட்ட கதிரேசன் வாத்தியார் சுறாப்புட்டை மிச்சம் வைக்கவில்லை.

 

‘நீங்க ஆடப் போறீங்களா?’

 

முத்தம்மா கண்ணில் குறும்பு தெரிய விசாரித்தாள்.

 

‘நீங்க கூட நின்னு ஆடினா, நானும் ரெடி தான்.’

 

கதிரேசன் சளைக்காமல் சொன்னான்.

 

‘டீச்சர் .. இந்தப் பாட்டு எப்படி.. மெட்டு நல்லா இருக்குல்லே.. பழசுதான்..’

 

‘எந்தப் பாட்டு?’

 

‘பாட்டொன்று பாடலாமா?’

 

முத்தம்மாள் கண்கள் மின்னக் கதிரேசனைப் பார்த்தாள்.

 

தோழிகளோடு கடற்கரையில் நடந்து போகிற முத்தம்மா. பக்கத்தில் வந்து பாடிக் கொண்டு கதிரேசன்…

 

‘சேவை நாமும் செய்யலாமா.. சேர்ந்தே செய்யலாமா.. பாலர்களும் கூடியே பாங்கோடு செய்யலாமா..’

 

முழுப் பாட்டையும் ஒரே நாளில் எழுதி விட்டான் கதிரேசன். ஐந்தாம் வகுப்பு பிள்ளைகள் ஆட வேண்டும்.

 

‘நாளைக்கு கடைசி ரிகர்சல் வச்சுக்கலாமா?’

 

‘நாளைக்கு ஞாயித்துக் கெளமையாச்சே சார்?’

 

‘அதான் சவுகரியம்.. வேறெ வேலையிருக்காப்பலே டீச்சருக்கு..’

 

‘இல்லே … அக்கா பிரசவத்துக்கு வந்திருக்கா.. அதான்..’

 

‘சீக்கிரமா முடிச்சுட்டுப் போயிடலாம்.. மதியம் சாப்பிட்டு கொஞ்சம் சீக்கிரமா வந்துட்டாப் போதும்.. கலர் ஜிகினா எல்லாம் கத்தரிச்சு ரெடியா ஒட்ட எடுத்து வச்சுடலாம்.. பசங்க காலையிலே வந்து ஒட்டிப்பாங்க..’

 

‘அப்போ ரெண்டு மணியைப் போல வரேன் சார்… காம்போசிஷன் நோட்டு வேறே திருத்த வேண்டியிருக்கு..’

 

முத்தம்மா டீச்சர் கடைசி நோட்டை மூடி வைத்து, மூக்குக் கண்ணாடியைக் கழற்றினாள்.

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன