பெரு நாவல் ‘மிளகு’ – Journey to Gerusoppa in search of the past

An excerpt from my forthcoming novel MILAGU

ஹொன்னாவரில் இருந்து பிற்பகல் நாலு மணிக்குக் கிளம்பியாகி விட்டது.

காடும் மலையுமாகக் குறுகத் தரித்த பாதை. சட்டென்று முகம் காட்டிய சிறு அருவியைத் தொட்டு நனைந்து போகிறது அது.

வலமிருந்து இடமும் இடமிருந்து வலமும் செங்குத்தாகத் திரும்பி உடனே பாறையை எதிர்கொண்டு அடுத்த உடனடி திருப்பத்தை நிகழ்த்தி காரின் சக்கரங்களுக்குக் கடினமான வேலை தரும் பாதை.

எதிரில் வரும் வாகனத்தைப் பிரித்தறிய ஒட்டாமல் சதா பெய்யும் சன்னமான மழையில் கார் கண்ணாடி மேல் நீர்ப் படலம் வைப்பர் கொண்டு அகற்ற அகற்றக் கனமாகக் கவிந்து வருகிறது. நீண்டு மெலிந்த சரளைக் கற்கள் கூர்மையான முனை வானம் பார்க்க அங்கிங்காகக் கிடந்த ஈரமான வீதி.

மழை வலுக்காது, பாதையில் நிலச்சரிவு, கல் புரண்டு அடைப்பு ஏதுமில்லை, கார் போகும் என்று கிளம்பும்போதே ஹொன்னாவரில் தங்கிய விடுதியின் வரவேற்புப் பகுதியில் தெளிவாகச் சொல்லி அனுப்பியிருந்தார்கள்.

மழை சாயந்திரம் வலுக்கும் என்று ஏனோ யாரும் சொல்லவில்லை. மாலை ஐந்து மணிக்குப் பாதையில் இருள் படரத் தருணம் பார்த்தபடி இருக்கிறது.

இன்னும் ஒரு மணி நேரம் இந்தக் குறுகிய பாதையில் வண்டி போகவேண்டும். கூடவே கொஞ்ச தூரத்தில் நுரையும் அலையுமாகப் பொங்கிப் பிரவகித்துப் போய்க் கொண்டிருக்கிறது ஷராவதி நதி.

இந்தப் பாதை ஷராவதி நதிக்கரையில் முடியும். அடுத்து படகுகள் ஏறி அங்கிருந்து கெருஸொப்பா. ஏர் கண்டிஷன் வேன் ஒன்று முன்னால் போக, மருது ஓட்டி வந்த பி.எம்.டப்ல்யூ கார் அடக்கத்தோடு வேனைத் தொடர்ந்தது.

திலீப் ராவ்ஜியின் கார் அது. மருதுவுக்கு அருகே காரின் முன் இருக்கையில் திலீப் ராவ்ஜியும் பின்னால் கிட்டத்தட்டப் படுக்கை நிலையில் அவருடைய அப்பா பரமன் என்ற பரமேஸ்வரனும் இருந்தார்கள்.

மருது லண்டன் ஸ்ட்ராண்ட் பகுதியில் நாடக அரங்குகள் பற்றி சுவாரசியமாகப் பேசியபடியே கார் ஓட்டிக் கொண்டிருந்தான். முன்னால் போன வேன் ஒரு நொடி நின்று வலது பக்கம் சற்றே வளைய மருது அவசரமாக பிரேக் அழுத்தி வண்டி அதிர்ந்து குலுங்கிச் சமனப்பட வைத்துத் தொடர்ந்து ஒட்டிப் போய் ஓரமாக நிறுத்தினான்.

முன்னால் போன வேனும் ஓரம் கட்டி நின்றது. என்ன பாலன் நாயர், திடீர்னு ரைட் எடுத்திட்டீங்க. நான் தூங்கிக்கிட்டே வண்டி ஓட்டறேனான்னு டெஸ்ட் பண்ணவா என்று சிரித்தபடி கேட்டான் மருது.

பாலன் என்ற அந்த வேன் டிரைவரும் சிரித்தபடி மருது சார், திடீர்னு ரெண்டு விஐபி ரோடைக் கடந்து போனாங்க. நீங்க பார்க்கலியா என்றார்.

மருது பதில் சொல்லாமல் பார்த்திருக்க, பாலன் சொன்னார் –

நல்ல பாம்பு ரெண்டு, புருஷன் பெண்டாட்டியாக இருக்கும், நம்ம பாதையிலே வந்துட்டாங்க. ரொம்ப சுவாரசியமா நடந்துட்டிருக்காங்க போலே இருக்கு. நாமதான் வண்டியை பாதையிலே இருந்து விலக்கிப் போகணும். அடிச்சு உசிருக்கு ஆபத்து ஆச்சுன்னா ராத்திரி கனவிலே வந்துடுவாங்க.