New Novel : வாழ்ந்து போதீரே – அத்தியாயம் 29 இரா.முருகன்

எல்லாம், மழை வலுத்து வரும் காயலில் இருந்து படகு திரும்பத் துறைக்கு வந்ததோடு தொடங்கியது.

இருண்டு ஆர்பரிக்கும் கடல். அது தொட்டு விடும் தூரத்தில் என்றாலும் படகை எல்லாத் திசையிலும் சுழல வைக்கும் நீர்ப் பெருக்கும், மழையோடு கலந்த காற்றுப் பெருக்கும் கடலோடு செல்லாமல் திரும்பச் சொல்லி வற்புறுத்த, படகுத் துறைக்குத் திரும்பியபோது சங்கரனுக்கும் தெரிசாவுக்கும் பகல் நேர வயிற்றுப் பசியாக இந்தப் பொழுது தலையெடுத்தது.

புறப்பட்டுப் போன மற்றப் படகுகள் அருகே தீவில் ஒதுங்கியிருப்பதாகவும், அவை வந்து சேர மாலை ஐந்து ஆகி விடலாம் என்றும் படகுத்துறை ஊழியர் சங்கரனிடம் தகவல் தெரிவித்தார். பசி உச்சத்தில் அதைப் புறம் தள்ளினான் அவன்.

நாலு நாள் மாநாடு அமைச்சர் முடிவுரை நிகழ்த்தாவிட்டாலும் முடிந்துதான் போகும். ஆப்பிரிக்க நாட்டுத் தூதுவரும், இங்கிலீஷ் எழுத்தாளருமான வைத்தாஸ் இக்வனோ ரெட்டிக்கு யானைத் தந்தத்தில் செய்த கதகளி ஆட்டக் குழு ஆடி நிற்கும் சிற்பத்தை முதலமைச்சர் அன்பளித்து, மாலை அணிவித்து நாலு வார்த்தை உபசாரமாக மலையாளத்திலும் இங்கிலீஷிலும் சொல்லா விட்டால் என்ன? தூதருக்கு, அவர் இன்னும் இங்கே இருக்கும் பட்சத்தில் சிற்பத்தை ஓட்டல் அறையிலேயே மழைக்கு நடுவே கொடுத்து விடலாம். இன்று விடிகாலையில் அவர் திருவனந்தபுரம் போய் அங்கிருந்து இன்னேரம் தில்லி திரும்பியிருந்தால், சிறப்பு அலுவலர் மூலம் தில்லிக்குச் சிலையை அனுப்பலாம்.

தூதர் வைத்தாஸின் மனைவி அவருடைய நாட்டின் அதிபராம். அவளும் இங்கே வர வேண்டும் என நேற்றுக் காலை தில்லிக் காரியாலயத்தில் இருந்து இரைச்சலுக்கு நடுவே தேய்ந்து ஒலிக்கும் தொலைபேசி அழைப்பும், ஸ்டாப் என்று அங்கங்கே போட்டு பத்து வரியில் வந்த தந்தியும் சொன்னதாம். சங்கரன் தொழுது நிற்கும் அமைச்சர் அவனிடம் நேற்று விழாப் பந்தலில் விளக்கினார்.

அது மட்டுமில்லை, அந்த அமைச்சர், ஜரூராக இன்னொரு காரியமும் செய்திருந்தார்.

மலையாளக் கரை முழுக்க இப்போது மும்முரமாக மழை பெய்கிறது. அறிவிக்காமல் முன் கூட்டியே வந்த வடமேற்குப் பருவ மழை இது. இன்னும் ஒரு மாதம் மழை நீடிக்கும். ஆப்பிரிக்க தூதர் வைத்தாஸ் ரெட்டி பங்கு பெறும் விழாவும் கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளது. இந்தச் சிறிய ஊருக்கு ஆப்பிரிக்கத் தலைவர் வந்தால் அந்த அம்மையாருக்குப் பாதுகாப்பு அளிப்பது சிரமமாக இருக்கும். இங்கே அவரைத் தங்க வைக்கவும் அவருடைய தகுதிக்குப் பொருத்தமான, நம் நட்பு நாட்டின் மிகச் சிறந்த விருந்தாளிகளுக்குத் தர வேண்டிய உபசரிப்பை அளிக்க இயலாமல் போகலாம். எனவே, அந்த மேன்மைக்குரிய அம்மையார் தில்லியில் இருப்பதே நல்லது. அவருடைய அன்புக் கணவர் தூதர் வைத்தாஸ், விழா இனிதே முடிந்து இன்று தில்லி வருவார்.

சங்கரன் தெரிசாவோடு ஓட்டலுக்குத் திரும்பிய போது அமைச்சர் புறப்பட்டுக் கொண்டிருந்தார். உற்சவத்தில் எழுந்தருளிய திருச்சூர் சிவபெருமான் வடக்கும்நாதனுக்குப் பிடித்த மாதிரி ஆகப் பெரிய வண்ணக் குடையோடு அவரை நடத்திப் போய்க் கொண்டிருந்தார்கள். செண்டை மேளம் மட்டும் இருந்தால், முன்னால் நிற்க யானையும் இருந்தால், உற்சவர் என்ன, கருவறைக் கடவுளாகவே ஆகியிருப்பார் உயரம் கூடிக் கருத்து மெலிந்த அந்த அமைச்சர்.

ஊருக்குப் போய்ட்டிருக்கேன். தொகுதியிலே ஒரு அவசர வேலை வந்திருக்கு.

அவர் பார்வை சங்கரனோடு நெருக்கமாக நகர்ந்து வந்த தெரிசாவின் மீது பதிந்தது. அடுத்த வினாடி சங்கரனைப் பார்த்துச் சிரிப்போடு கேட்டார் –

மேடம் தங்கி இருக்க இடம் கிடைச்சுதா? புகார் எதுவும் இப்போ இல்லையே?

அந்தச் சிரிப்பு வேறே மாதிரி சங்கரனுக்கு அர்த்தம் சொன்னது. போகிறது, நல்ல மனுஷர். கூட ஒரு அழகான பெண் இருந்தால் பார்த்தவர்களுக்கு எல்லாம் பேசத் தோன்றும். அதுவும், பூசியது போல் சற்றே உடல் பெருத்த, மேற்கத்திய உடை அணிந்த, கருத்த பெண். விந்திய மலைச்சாரலுக்குத் தெற்கே அழகு இதுதான்.

அமைச்சர் பொறாமைப் பட்டாலும் சரி, இன்றைக்கு சங்கரனின் நாள். தில்லியில் அவரைப் பார்க்கும் போது இதையெல்லாம் மறந்து போகட்டும்.

நீங்களும் வர்றீங்களா? கார்லேயே மதுரை போகிறோம். உங்க ஊர் கூட அங்கே தானே.

இல்லே சார், நான் இப்படியே தில்லிக்குப் போய்க்கறேன். வீட்டிலேயும் ஆபிசிலும் முடிக்க வேண்டிய வேலை ஒருபாடு இருக்கு.

அது என்ன ஒருபாடு? மலையாள பூமி உங்களையும் மாத்திடுச்சா?

இக்கு வைத்து மறுபடி பேசியபடி அமைச்சர் புறப்பட்டுப் போக தெரிசாவோடு பகல் உணவுக்காகப் போனான் சங்கரன்.

பெருமழை, புயல் சின்னம், சூறாவளி சுழன்றடிக்க வாய்ப்பு என்ற காரணங்களைச் சுட்டிக் காட்டி நாட்டுப்புறக் கலை விழாவின் நிறைவு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கும் சுற்றறிக்கையை டவாலி அணிந்த சேவகர்கள், எதிர்ப்பட்டவர்கள் அனைவருக்கும் காட்டிக் கையொப்பம் வாங்கிக் கொண்டு போனார்கள்.

சோற்றைப் பிசைந்து சாப்பிட இருந்த நிலையில் சங்கரனும் அவர்களால் கையெழுத்து இடும்படி கோரப்பட்டான். தெரிசா சார்பிலும் கணவர் என்று எழுதிக் கையொப்பமிடச் சொல்லிக் கேட்டார்கள். கையில் எடுத்த முள்கரண்டியும் கத்தியுமாகச் சாப்பிட உட்கார்ந்த அவளைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.

இங்கிலாந்தில் இருந்து வந்திருப்பதால் தூதரகம் அனுமதிக்காமல் எங்கும் கையெழுத்திடத் தனக்கு இயலாது என்று தெரிசா சொன்னதும் உடனே சரியென்று பின்வாங்கி அவர்கள் போனார்கள்.

ஏனோதானோ என்று ஆக்கி வைத்த ஊண் அது. பரிமாறவும் மிகச் சாவதானமாகவே வந்தார்கள். கடனே என்று இலையில் வட்டித்த சோறு சரியாக வேகாததால் காய்கறிகளை புளிக்காடியில் அமிழ்த்தி மெல்ல வேண்டிய கட்டாயம். எதிரும் புதிருமாக் உட்கார்ந்து ஒருவர் கண்ணில் மற்றவர் ஆழ்ந்து நோக்கியபடியான பேச்சு மும்முரத்தில் உணவும் பானமும் கவனத்தில் கொள்ளப்படாமல் நழுவிப் போக, அவர்களின் முணுமுணுத்த குரலும் அடிக்கடி எழும் சிரிப்பும் அந்த அறையில் சுற்றி வந்து கொண்டிருந்தது.

சங்கரன் முசாபர் அலியையும், மெட்காஃபையும் அவனுடைய விநோதமான காரையும் பரிச்சயம் செய்து கொண்டபோது, கார்ட்டூன் சித்திரங்களாக தெரிசா வசந்தியையும், பகவதிப் பாட்டியையும், பகவதிக் குட்டியையும், பிடார் ஜெயம்மாவையும் அறிமுகப் படுத்திக் கொண்ட பகல் உணவு நேரம் அது.

தெரிசா இனி என்றும் திரும்பிப் போகும் உத்தேசத்தில் தான் இல்லை என்றாள். இந்த மண்ணுக்குத் தன்னை இழுத்த சக்தி, காலச் சக்கரத்தின் சுழற்சியில், புறப்பட்ட இடத்தில் தன்னைக் கொண்டு சேர்க்க உத்தேசித்திருக்கிறது என்று அவள் நம்பத் தொடங்கி இருந்தாள் என்பது சங்கரனுக்கு வியப்பான செய்தியாக இருந்தது. அன்று புறப்பட்டவள் அவள் இல்லை தான். இன்று திரும்புகிறவளும் அவள் இல்லை என்று மனதில் படுவதாகச் சிரித்தபடி விளக்கினாள் தெரிசா.

தேடி வந்து யார்க்‌ஷயரில் என் வீட்டு முகப்பில் ஆடிய மயிலும், சாவக்காட்டு வயசனின் பாழடைந்த வீட்டில் கட்டி இருந்த பசுவும், ராத்தூக்கத்தில் இருந்து எழுப்பி அவளையும் கலந்து கொள்ளச் சொல்லிக் கேட்ட மூங்கில் குரிசு ஊர்வலமும், அச்சில் கொண்டு வர வேண்டிய வலிய முத்தச்சன் ஆன ஜான் கிட்டாவய்யனின் கீர்த்தனங்களும், இந்த ஊர் அம்பலக் குளக்கரை மனதில் நிறைந்து கவிந்து சதா நீர்வாடை மூக்கில் படுவதும் இன்னும் எதெல்லாமோ அவளை இங்கேயே இருக்கும்படி வேண்டியும் கட்டாயப்படுத்தியும் மன்றாடியும் கேட்டுக் கொண்டிருப்பவை. அது தெரிசாவுக்கு அர்த்தமாகும்.

இங்கே இருக்கச் செலவுக்குத் தாராளமாகத் தன்னிடம் பணம் இருக்கிறது என்றாள் தெரிசா. தேவை என்றால் கால்டர்டெல்லில் மீனும்-வறுவலும் விற்கும் கடையையும் அங்கே ரெண்டு தலைமுறையாக இருக்கும் வீட்டையும் விற்றுப் பணம் அனுப்ப முசாபர் வழி செய்வான். சில லட்சங்கள் இந்திய ரூபாயில் அது இருக்கும். இங்கே நாலு பெரிய பங்களா, அம்பாசிடர் கார் என்று சொகுசாக நாலு தலைமுறை உட்கார்ந்து சாப்பிட அது வழி செய்யும். சிக்கனமாகச் செலவழித்தால், அதற்கு மேலும் நீடிக்கும்.

இந்தத் தீர்மானம் எல்லாம் தன்னைத் தெரிசா சந்திக்கும் முன்னே எடுத்திருந்தாள் என்பதில் சங்கரனுக்கு ஆச்சரியம் எதுவும் இல்லை. அவள் பயணப்பட்ட பாதை தன் வழியில் இணைவது தவிர்க்க முடியாதது என்றாகி இருந்தது அவனுக்கு வியப்பையும் சற்று பயத்தையும் உண்டாக்கியது.

தெரிசா அரசூர் போயிருக்கிறாள். சின்னச் சங்கரனின் பூர்வீக வீட்டை வாசலில் இருந்து பார்த்திருக்கிறாள். உள்ளே வரச் சொல்லி யாரோ முது பெண் தன்னை அழைத்ததாக நம்புகிறாள். சங்கரனின் ஆருயிர் நண்பன் தியாகராஜ சாஸ்திரி தன்னிச்சையாக அரசூரில் தெரிசாவுக்கு எல்லா உதவியும் செய்திருக்கிறார். அது மட்டுமில்லை, தெரிசாவின் மூத்த பாட்டன் எழுதிய கிறிஸ்துவ கீர்த்தனைகளைப் புத்தகமாகக் கொண்டு வரத் தகுந்தவர்களை மதுரையில் அறிமுகப்படுத்தி இருக்கிறான். இதெல்லாம் சங்கரன் செய்ய வேண்டியது.

அரசூர் மட்டுமில்லை, அம்பலப்புழையில் பரம்பரை வீட்டை வாங்கும்படி மேல்சாந்தியின் மனைவி தெரிசாவுக்கும் சொல்லியிருக்கிறாள். சங்கரனிடமும் வசந்தியிடமும் சொன்னது தான் அது. பகவதிக் குட்டி வழித் தோன்றலாகத் தன்னையும், பகவதியின் சகோதரன் ஜான் கிட்டாவய்யனின் பரம்பரையாக தெரிசாவையும் அடையாளம் கண்டவள் அவள். இன்னும் ஏதோ தன்னையும் தெரிசாவையும் ஒரு கோட்டில் இணைக்க உண்டு, அது என்ன? மறந்து விட்டது.

என்ன பலமான யோசனை?

பகல் உணவு முடித்து அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது தெரிசா கேட்டாள்.

நாளை அரசூர் போகணும். அங்கேயிருந்து மதராஸ், பிறகு டெல்லி. வீடு. ஆபீஸ்.

சங்கரன் சொன்னபடி தன் அறைக்கு முன் நின்றான். ஒரு வினாடி அவனைப் பார்த்து விட்டு தெரிசா அடுத்த அறைக்கு நடந்தாள்.

இந்தப் படகு வீட்டு உறவு பகல் சாப்பாட்டோடு முடிகிறது. இனியும் என்னைத் தொந்தரவு செய்யாதே என்று அவன் சொன்னதாக அவளுக்கு அர்த்தமாகியது.

அவள் நாளைக்கு இந்த அறையைக் காலி செய்ய வேண்டும். இந்த ஊரிலோ பக்கத்திலோ மாத வாடகைக்கு வீடு பார்க்க வேண்டும். மூத்த பாட்டனின் புத்தகம் தயாராகிக் கொண்டிருப்பதாக மதுரைத் தமிழ்ப் பண்டிதர் எழுதியிருந்தார். மதுரைக்கு ஒரு தடவை போய் வரணும். பரம்பரை வீட்டை வாங்க முன்னேற்பாடாக அங்கே இயங்குகிற நாட்டுப்புறக் கலை ஆராய்ச்சி மையத்தை வெளியே அனுப்ப வேண்டும். நடக்கிற காரியமா அது?

அந்த வீட்டை வாங்க, மேல்சாந்தியின் மனைவி சொல்லியபடி நான்கு பேர் தயாராக இருக்கிறார்கள். அவளும், சங்கரனும் தவிர ரெண்டு பேர். முதலாவதாக, அங்கே மயிலாட்ட ஆபீஸ் வைத்திருக்கும் மினிஸ்டர் மனைவி சியாமளா. அடுத்து, நேற்று விழாவில் பேசிவிட்டுப் போன ஆப்பிரிக்க நாட்டுத் தூதர் வைத்தாஸ் ரெட்டி. இரண்டு பேரிடமும் தெரிசா பேசிவிட்டாள். வைத்தாஸ் என்கிற நடு வயதை எட்டிய அந்த கனவான் தெரிசா அந்த வீட்டையோ, அம்பலப்புழையில் வேறு வீட்டையோ, இல்லை அந்த ஊர் முழுவதையுமோ வளைத்துப் பிடித்து வாங்குவதில் ஒரு ஆட்சேபமும் இல்லை என்று தெரிவித்து விட்டார். நேற்றைக்குக் காலையில் அவரை இதே ஓட்டலில், கீழே முதல் மாடியில் இருந்த அறையில் ஐந்து நிமிடம் சந்தித்தபோது அவர் தெரிசாவுக்கு இப்படி கண்ணியமும் கருணையுமாக வழிவிட்டு விலகினார்.

ஆனால் சியாமளா கிருஷ்ணன் என்ற மினிஸ்டர் மனைவி அப்படியானவள் இல்லை. போன வாரம் மதராஸ் போகும் முன் போய்ச் சந்தித்தபோது, உன்னோடு பேசி வீணாக்க எனக்கு நேரமில்லை என்று துரத்திவிட்டாள். ஐரோப்பியச் சாயலில் ஆறடி உயரத்தில் அவள் எதிரே ஒரு இளம்பெண் உட்கார்ந்து திகைத்தபடி பார்க்க, சியாமளா இரக்கமே இல்லாமல் விரல் சுட்டி வாசலைக் காட்டி தெரிசாவை வெளியே அனுப்பினாள் அப்போது. இன்னும் அது மனதில் வலித்தாலும் மேல்சாந்தி மனைவி நல்வாக்கு சொன்னபடி நல்லதே நடக்கப் போகிறது என்று திடமாக நம்புகிறாள் தெரிசா.

சோழி உருட்டிப் பார்த்துத்தான் இப்படி எல்லாம் நல்லபடியாக நடக்கப் போகிறது என்று சொல்லியிருக்கிறாள் அந்த முதுபெண். அவள் இன்னொன்றும் சொன்னாள். அதுவும் நடக்கக் காத்திருக்கிறாள் தெரிசா.

கைக்கடியாரத்தில் மணி பார்த்தாள். பிற்பகல் ரெண்டே முக்கால் மணி. மழையில் வெளியேயும் போகமுடியாது. சும்மா நாற்காலி போட்டு உட்கார்ந்து சுவரைப் பார்த்தபடி இருக்கவும் முடியாது. கொஞ்சம் படுத்து உறங்கினாலோ?

சுவருக்கு நடுவே மர பீரோவை அடுத்துத் திரை போட்டு வைத்திருந்த இடத்தில் பார்வை நிலைத்தது. அங்கே காற்றில் திரை விலக, மரக் கதவு தட்டுப்பட்டு திரும்பவும் அது திரை மறைவில் ஆனது.

இந்த அறை அடுத்த அறையோடு சேர்ந்த கூட்டு அறை என்ற எகாம்பனியிங் ரூம் என்று அப்போது தான் அவளுக்குத் தெரிய வந்தது. குழந்தை குட்டியோடு வரும் பெரிய குடும்பங்களில் குழந்தைகளை இங்கேயும் அடுத்த அறையில் பெரியவர்களையும் தங்க வைத்துச் சிறியவர்கள் மேல் கவனமும் கட்டுப்பாடுமாக இருக்கவும் வழி செய்யும் இந்த மாதிரி அறைகள் இங்கிலாந்து தங்கும் விடுதிகளில் அடிப்படை வசதி என்றாலும் இங்கே அப்படி ஒரு அமைப்பைப் பார்க்க அவளுக்கு வியப்பாக இருந்தது. குழந்தை தங்கும் அறையில் நான். அடுத்த அறையில் என்னைக் கண்காணிக்கும் பெரியவர்?

அந்தக் கதவைத் திறந்து பார்க்க, கட்டிலில் சிரசாசனம் செய்தபடி இருந்த சங்கரன் கண்ணில் பட்டான். முழங்கால் வரை வரும் உடுதுணியோடு, மேலே சட்டையில்லாமலும் மேல்கூரைக்குக் கால் உயர்த்தியும் நின்ற அவனைப் பார்த்ததும் சிரிப்பும் வெட்கமும் ஏற்படக் கதவை அவசரமாகத் திரும்ப அடைத்தாள் அவள்.

தாழ்ப்பாளைப் போடுவதற்குள் அந்தக் கதவு மறுபடி திறந்தது. சங்கரன் தான். கால்களுக்கு இடையே தார் பாய்ச்சி இறுகக் கட்டிய உடுப்பில் பதிந்த கண்ணை விலக்கி அவனைப் பார்த்துச் சிரிப்பில் என்ன விஷயம் என்று கேட்டாள் தெரிசா. அவன் இன்னும் நெருங்கி வந்து நின்றான். சங்கரன் மார்பிலிருந்து உருளும் வியர்வைத் துளியை விரல் மேல் வாங்கி உள்ளங்கையில் வைத்தபடி அவள் வசீகரமாகச் சிரித்தாள்.

தெரிசாவை அணைத்தபடி அங்கேயே நின்றான் சங்கரன். அவள் விலகினாள்.

போ வரேன்.

அவள் அலமாரிப் பக்கம் நடந்தாள். அங்கே பெட்டியில் இருந்து எடுத்ததை அவன் பார்க்க, வெட்கத்தோடு கண்களைத் தாழ்த்திக் கொண்டாள் தெரிசா.

நல்லதாப் போச்சு என்று மட்டும் சொன்னான் சங்கரன். முசாபர் கொண்டு வந்திருந்த ஆணுறைகளில் மிச்சம் இருந்தவை அவை.

மழை ஈரமும் இருட்டும் நிலையாகத் தங்கி இருந்த அறையில் தெரிசாவின் கண்ணுக்குள் விரிந்த பழைய வீட்டை அடையாளம் காண அவள் சிரமப்படவில்லை. அரசூரில் அவள் பார்த்தது. பூட்டி வைத்திருந்தது. உள்ளே வாசல் திண்ணையில் ஒரு கிழவி உட்கார்ந்து கனாக் கண்டேன் கனாக் கண்டேன் என்று பாடிக் கொண்டிருந்த வீடு. அது சங்கரனின் வீடு என்று தெரியும் அவளுக்கு.

கட்டிலில் அவளோடு அடுத்திருந்த சங்கரன் பார்வை அவனும் அங்கே இருப்பதைச் சொன்னது. இரண்டு பேரும் வாசலில் நிற்கத் திறந்து கொள்ளும் பூட்டுகள். உள்ளே நுழைகிறார்கள். உள்ளே புழுதி நெடியும் பறந்து தாழ இறங்குவது போல் போக்குக் காட்டி மேலே உயரும் வௌவால்களின் துர்க்கந்தமும் மூக்கில் பட, தெரிசா நடுநடுங்கி அவன் தோளைப் பற்றி இறுக்கிக் கொள்கிறாள். க்ரீச் என்று ஒலியெழுப்பி வீட்டுக் கூடத்தில் ஊஞ்சல் மெதுவாக மழைக் காற்றில் அசைகிறது. சங்கரன் கருத்துச் செழித்த தாடியும், பிடரிக்கு வழிந்து குடுமி கட்டிய தலையுமாக ஊஞ்சலில் இருந்தபடி தெரிசாவைத் தன்னருகில் இழுக்கிறான். அவள் தரைக்கு மேலே சற்றே உயர்ந்து பறந்து ஊஞ்சலைச் சுற்றி வர, பின்னாலேயே அவள் இடுப்பில் கை வைத்து அணைத்தபடி மறுபடி இழுக்கிறான் சங்கரன்.

குருக்கள் பொண்ணே, வாடி. வார்த்தை சொல்லிண்டிருப்போம்.

நீ எனக்கு நாலு தலைமுறை இளையவண்டா அயோக்கியா. ஏன் இப்படி அலைக்கழிக்கறே அறியாப் பொண்ணை? இதெல்லாம் போதும், ஆமா சொல்லிட்டேன். வேணாம். முடியலே. சொன்னாக் கேளு. போதும். வேணாம். ஏய்.

தெரிசா வேறு யாரோவாக அவளுக்குப் பரிச்சயம் இல்லாத மொழியில் லகரி கொண்டு பிதற்றி மோகம் தலைக்கேறச் சிரிக்கிறாள்.

படுடீ.

மாட்டேன் போடா, சாமிநாதா.

வா

சாமா, என்னை விட்டுடு. நான் இனி வரலே.

ஏண்டி மாட்டேங்கறே? இனிமேல் கூப்பிடலே, இப்போ வா. செல்லமில்லையோ.

மாட்டேன் போடா, நூறு வருஷம் உனக்கு மூத்தவ நான். ஆவி வேறே. உனக்கு உடம்பு இருக்கு. எனக்கு?

திரும்பவும் யாரோ பேச வேண்டியதை, பேசியதை தெரிசா பேசுகிறாள். யார் கேள்வியையோ அவள் கேட்கிறாள். யாரிடமோ.

உடம்பா? இதோ பாரு, இது மட்டும் நான். இதோ, இது மட்டும் நீ.

சாமிநாதன், சாமா என்று தெரிசா அழைத்த சங்கரன் விரல் சுண்டிக் காட்டுவது அவளை நாணம் கொள்ளச் செய்கிறது. பார்க்க மாட்டேன் என்று கண்ணை இறுக மூடி இருக்க சாமிநாதன் தெரசாவாகவும், ஆவி ரூபத்தில் வந்த பெண் சங்கரனாகவும் மாறும் கணங்களில் இருவரும் கலந்து கரையத் தொடங்குகிறார்கள்.

மழைச் சாரலின் ஈரம் நனைந்த தலையணைகளும், இரண்டு நாளாக மாற்றப்படாத மெத்தை விரிப்புகளும், சதா காற்றில் அடித்துத் திறந்து கொள்ளும் கழிப்பறையிலிருந்து புறப்பட்டு எங்கும் சூழ்ந்திருக்கும் மெல்லிய பினாயில் வாடையும் அடர்ந்த சூழலில் அவர்கள் முயங்கிக் கிடந்தார்கள்.

கதை என்றாலும் கைகொட்டி நகைத்து, இப்படியும் நடக்குமா என்று எக்காளம் மேலேறிச் சிரிக்க வைக்கும் சூழல் மெய்ம்மைப்பட, இரண்டே நாள் இடைகலந்து பழகிய இருவர் காலமெல்லாம் பிணைந்து கிடந்தது போல் கலவி செய்தார்கள்.

நேற்றைய நினைவுகளைக் காலம் உள்வளைந்து உருப் பெருக்கி நீட்டிய வெளியில் நாளையும் மறுநாளும் இனி எப்போதும் இது மட்டுமே நிலைக்கும் எனும் நிச்சயம் மேலிழைந்து இறுகப் போர்த்த, வியர்த்து உறவு கொண்டார்கள்.

மரபணுக்களில் பதித்த தேடல் இலக்குகளைப் புலன்கள் தொட்டு காலம் உறைய, பனித் திரளாகச் சுட்டு, வெப்பமாகக் குளிர்ந்த உடலும் உயிரும் கூடின.

இந்தக் கணத்தை இறுகப் பிடித்து நிறுத்தும் முயற்சியில் சங்கரன் தோற்றான். தெரிசாவின் கால் விரல் நகங்கள் கோடு கிழித்த விலாவில் இனிய வலி மூண்டது. விலங்காக, பறவையாக, இழிந்து சுவரில் ஊறும் நத்தையாகப் புணர்தலே இயக்கம், போகமே மூச்சு எனச் செயல்பட்டான் அவன். சங்கரனை இறுக அணைத்துக் கிடந்த தெரிசா அழத் தொடங்கினாள். அவளால் அப்படித்தான் மடையுடைத்துப் பெருகிய உணர்வு நதியோடு போக இயலும்.

பற்றிப் படர்ந்து மேலெழும் எல்லாப் புனைவுக்கும் தோற்றங்களுக்கும் சாட்சியாக அந்த ஊஞ்சல் அசைந்தபடி இருக்கிறது.

எந்த ஊஞ்சல்?

ஜன்னலில் தட்டித் தட்டி மழை கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்ல அவர்கள் இருவருக்கும் நேரம் இல்லை.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன