பூவெல்லாம் ஏலம் கேட்டுப் பார் – தி இந்து பத்திரிகையில் என் கட்டுரை

இன்றைய தி இந்து பத்திரிகையில் என் கட்டுரை

பூவெல்லாம் ஏலம் கேட்டுப் பார்

’புடவையும், சட்டைத் துணியும், அடுக்குப் பாத்திரமும், குடையும், இங்க் பாட்டிலும், கொண்டை ஊசியும், கடிகாரமும், ரூல்தடியும், பேனாக்கத்தியும், சாமி படமும், குண்டூசி டப்பாவும் என்று உலகில் படைக்கப்பட்ட சகலவிதமான பொருள்களையும் மணியை அடித்து அடித்துக் கொடுக்க, கண்ணாடிக்காரரும், நீலச்சட்டைக்காரரும், கழுத்தில் மப்ளர் சுற்றி இருக்கிறவரும், வலது கோடியில் உசரமாக நிற்கிற அண்ணாச்சியும் வாங்கிக் கொண்டு கூட்டத்தில் கலக்க, ராத்திரி பத்து மணியானதே தெரியாது’.

இது ஐம்பது வருடம் முன்பு தமிழகச் சிற்றூர்களுக்கு வந்த ஏலக்கடைகள் பற்றிய சிறுகதை வர்ணனை. சாதுரியமாக விலை கேட்டுப் பொருள் வாங்குகிற மகிழ்ச்சியையும், ஏலம் கேட்க நிற்கிற இரவுகளில் சந்தோஷமாகப் பொழுது போக்க வாய்ப்பையும் கொடுத்தவை இந்தக் கடைகள்.

ஏலம் என்றால் என்ன? சிறிய கூட்டத்தைக் கூட்டி வைத்துக் கொண்டு ஏலக்காரர் விற்க எடுத்த பொருளுக்கு குறைந்த பட்ச விலையில் தொடங்குவார்.

வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அதைக் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றி, தாங்கள் தரத் தயாரான விலையைக் சொல்வார்கள். இறுதியாக விலை கேட்டவருக்கு அவர் கேட்ட, கூறப்பட்டதிலேயே அதிகமான தொகைக்குப் பொருள் விற்கப்படும். இதை ஆங்கிலேய முறை ஏலம் என்பார்கள்.

ஏலம் எங்கே பிறந்தது? பழையதைக் கிளறினால், இரண்டாயிரத்து ஐநூறு வருடம் முன்னால் பாபிலோனியர்கள் பெண்களை ஏலத்தில் எடுத்துக் கல்யாணம் செய்து கொண்டிருக்கிறார்கள். கி.பி இரண்டாம் நூற்றாண்டில், ரோம சாம்ராஜ்யத்தையே கூவிக் கூவி ஏலம் போட்டார்களாம். போரில் வென்று எதிரி நாட்டிலிருந்து கவர்ந்து வந்த சொத்துகளை மொத்தமாகக் குவித்து வைத்து ஏலம் போட்டும் ஐரோப்பியர்கள் காசு பார்த்திருக்கிறார்கள்.

ஆசியாவில் ஏலம் நுழைந்தது இருநூறு வருடம் முன்பு தான்.

லண்டன் சாத்பீஸ் போன்ற பழம்பெருமை வாய்ந்த ஏலக்கம்பெனிகள் முன்னூறு ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக இயங்க, இந்தத் தொழிலில் புரளும் பணமும், வரும் வருமானமும் முக்கியக் காரணம். பழைய புத்தகம், ஓவியம், நகை, இயந்திரம் என்று சகலமானதும் விற்கப்படும் உலக ஏலத்தொகை மதிப்பு,

ஆண்டுக்குக் கிட்டத்தட்ட முன்னூறு பில்லியன் டாலர். ஒரு டாலருக்கு குத்துமதிப்பாக 60 ரூபாய் விகிதத்தில் மாற்றிப் பார்த்துக் கொள்ளலாம்.

பெரும்பாலும் கடைப்பிடிக்கப்படும் ஆங்கிலேய முறை ஏலத்தை விடச் சற்றே மாறுபட்டது டச்சு முறை ஏலம். காய்கறி, பழம் என விரைவில் அழுகிப் பயன்படுத்த முடியாமல் போகும் பொருட்களைக் குவித்து வைத்து அன்றாடம் ஏலம் போடப் பயன்படுத்தப்படுவது இந்த ஏல முறை.

பொருளின் அதிக பட்ச மதிப்பை ஏலக்காரர் தீர்மானித்து அதைச் சொல்லி ஏலத்தைத் தொடங்குவார். வாங்க வந்தவர்கள், அந்த உயர்ந்த மதிப்பிலிருந்து சிறிது விலையை இறக்கி ஏலம் கேட்பார்கள். பொருளை விற்பவர் உத்தேசித்து வைத்திருந்த குறைந்த பட்ச விலை படியும்போது, பொருள் கைமாறும்.

ரிசர்வ் ப்ரைஸ்-ன்னு விற்பனையாளர் ஒரு குறைந்த பட்ச விலை வச்சிருப்பாங்க. அதுக்குக் கீழே விற்றால் கையைக் கடிக்கும். ரிசர்வ் ப்ரைஸ் 1000 ரூ-ன்னு வச்சுக்குங்க. ஏலம் 2000-ல் ஆரம்பிப்பாங்க. யாரும் ஏலம் கேட்க மாட்டாங்க. கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும் bid. நூறு நூறாகக் குறைஞ்சுட்டுப் போகுதுன்னு வச்சுக்குங்க, 1500-னு சொல்லும்போது பத்து குரல் எழலாம் – 1450, 1470, 1430, 1490… இதில் 1490-க்கு ஏலம் படியும். அமுக்குப் பிள்ளையார் மாதிரி எல்லோரும் வாயைத் திறக்காம இருந்தா, ரிசர்வ் பிரைஸான 1000 போகறதுக்கு முந்தி, வணக்கம் கூறி விடை பெற்றுடுவாங்க !

டச்சு (ஹாலந்து) நாட்டில் பெரிய அளவில் பூக்களை விற்க டச்சு ஏலம் தான் பயன்படுத்தப் படுகிறது. உலகிலேயே மிகப் பெரிய பூ ஏலம் இது. ஹாலந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டாம் நகருக்குப் பத்து மைல் தூரத்தில் உள்ள ஆல்ஸ்மீரில் உள்ள 243 ஏக்கர் பரப்பளவுள்ள பிரம்மாண்டமான பூச்சந்தையில், தினசரி சூரிய உதயத்துக்கு முன் இந்த ஏலம் நடைபெறுகிறது.

உலகின் மொத்தக் குத்தகை பூ வணிகர்கள் பங்கு பெறும் ஏலம் இது. தினசரி ரூபாய் மதிப்பில் ஒவ்வொருவரும் குறைந்தது ஆறு கோடி ரூபாய் அளவுக்கு ஏலம் எடுத்து வியாபாரம் செய்யும் வணிகர்கள் இவர்கள். ஆல்ஸ்மீர் தவிர ஹாலந்தில் இன்னும் ஐந்து இடங்களிலும் சிறிய அளவில் பூ ஏலம் நிகழ்கிறது.

பறித்த 24 மணி நேரத்துக்குள் ஆம்ஸ்டர்டாம் நகரை அடைந்து, தினசரி 3 கோடி மலர்கள் ஏலம் கேட்கப் படுகின்றன. அன்னையர் தினம், காதலர் தினம் போன்ற நாட்களை ஒட்டி விற்பனை அதிகரிக்கிறது. 8 பில்லியன் டாலர் விலை மதிப்பில் வருடந் தோறும் ஆம்ஸ்டர்டாமில் பூக்கள் விற்பனையாகின்றன.

மலர் உற்பத்தியாளார்கள் 6000 பேர் இணைந்து எழுப்பி நிர்வகிப்பது ஆல்ஸ்மீர் பூச்சந்தை. அங்கே, மாபெரும் திரையரங்குகள் போல் வரிசையாக இருக்கைகள் அமைந்த மலர் ஏல மண்டபங்கள் உண்டு. அவற்றில், ஏலம் கேட்க வந்த, விற்க வந்த வணிகர்கள் சாரிசாரியாக அமர்கிறார்கள்.

பூ ஏல அமைப்பை இயக்கும் மென்பொருள், இவர்கள் ஒவ்வொருவர் முன்னும் ஆங்கிலம், பிரஞ்சு, டச்சு, ஜெர்மன் என நான்கு மொழிகளில் தொடு திரையில் விரிக்கிறது. ஒவ்வொரு குவியல் ஏலத்தின் போதும் என்ன மலர், அளவு எவ்வளவு, அதிக பட்ச விலை ஆகியவை திரையில் பளிச்சிட, திரையில் விலை விரைவாகவும், படிப்படியாகவும் குறைத்துப் போகப்படுகிறது. திரையில் தொட்டு, தொகையை வியாபாரி அறிவிக்க, நகரும் கடியார முள் போன்ற வடிவில் ஒவ்வொரு வினாடியும் மாறும் விலை விபரம் திரையில் சுழன்று காட்சி அளிக்கும்.

பூ வாங்க, விற்க என இரண்டு காரியங்களையும் அடுத்து அடுத்து டெர்மினல்களில் வேகமாக நடத்துகிற பல வணிகர்களும் இங்கே உண்டு. வாங்க வேண்டியதைத் தவறுதலாக விற்றும், விற்க வேண்டியதை வாங்கியும் ஏலத்தை நடத்தி விட்டால் அதை மாற்ற முடியாது என்பதால் ஆம்ஸ்டர்டாம் பூ வியாபாரம் செய்ய அனுபவமும் மேலதிகக் கவனமும் தேவைப்படுகிறது.

டூலீப் மலர்கள் அவை மலரும் காலத்தில் மிக அதிக விலைக்கு இந்த ஏலத்தில் விற்கப்படுவது உண்டு. ஒரு டுலீப் பூக்குழிழ் லட்ச ரூபாய் மதிப்புக்கு விலை போன காலங்களும் இருந்தன. இந்தப் பூக்கள் தவிர, பூச்செண்டுகள், மலர் வளையங்களில் இடம் பெறும் இதர மலர்களும், மலர்ச் செடிகளும் ஏலம் கேட்கப் படுகின்றன.

சில நொடிகளில் விலை படிந்து டன் கணக்கில் விமானங்களில் ஏற்றப்படுகின்றன. அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், கென்யா என்று பல நாடுகளையும் விரைவாக அடைந்து, மொத்த, சில்லறை விற்பனைக்கு வருகின்றன.

இணையத்தில் தொலை தூர வணிகம் மூலம் உலகில் எங்கேயிருந்தும் வியாபாரிகள் இந்தப் பூ ஏலத்தில் பங்கு பெறலாம் என்ற வசதி இருந்தாலும், நேரடியாக பூச்சந்தைக்குப் போய் ஏலம் கேட்பதையே, பூ விற்றுக் கோடிக் கணக்கில் வருமானம் ஈட்டும் வர்த்தகர்கள் விரும்புகிறார்கள்.

375-ம் பிறந்தநாள் கொண்டாடிய சென்னையில் பூ வணிகத்தைக் கணினி மயமாக்கினாலும், கோயம்பேட்டுக்குப் போய்க் கொள்முதல் செய்யும் மகிழ்ச்சி கிடைக்காது தான்.

இரா.முருகன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன