Raathri Vandi – Part 3ராத்திரி வண்டி – பகுதி 3

ராத்திரி வண்டி இரா.முருகன் பகுதி – 3

தேசிகர் ஒடுக்கத்தில் இருக்கிறார். வெளியே ஓதுவார்கள் சத்தம் போட்டுப் பாடிக் கொண்டிருக்கிறார்கள். இது வழக்கமான தேவாரப் பண் இல்லை. இங்கிலீஷ் மோஸ்தரில் கட்டிய பாட்டு…

’துங்கஞ்சார் தருதுரைசை யில்வளர் சுப்பிரமணிய தயாநிதியே…’

அலையில் மிதக்கிற படகுபோல, பெங்குவின் பறவைகள் கூட்டமாக அடியெடுத்து வைக்கிறது போல், தோய்த்து உலர்த்திய காவித் துணிகள் காற்றில் பறந்து அலைக்கழிவது போல… காதிலே ஜவ்வந்திப் பூ வைத்து, கூரை வேய்ந்த மண்டபம் அதிரக் குதித்துக் குதித்து ஆடுகிறார்கள். ராமச்சந்திரன் காதில் பென்சிலைச் செருகிக் கொண்டு குற்றாலம் போக நேரமாகிவிட்டது என்று யாரிடமோ சொல்கிறான். ‘ஸ்டேஷன் மாஸ்டர் டீ போட்டு எடுத்து வரட்டும்.. சாப்பிட்டு விட்டுப் போகலாம்..’ என்கிரார் அவர். எல்லோரும் வெளியே வருகிறார்கள், முதலில் தேசிகர், அப்புறம் மகாவித்துவான். இன்னும் பாட்டை நிறுத்தாமலேயே ஓதுவார்கள். ராமச்சந்திரன் கடைசியில் கையில் ‘என் சரித்திர’த்தை இடுக்கிக் கொண்டு வருகிறான்…

ராமச்சந்திரன் கண்ணை மெல்லத் திறந்து பார்த்தான். ஸ்டேஷன் மாஸ்டர் வீடு வெறிச்சோடிக் கிடக்கிறது.

‘ஒய்ஃப் அம்மா வீட்டுக்குப் போயிருக்காங்க.’

ஸ்டேஷன் மாஸ்டர் டீ போட்டு எடுத்து வந்தான்.

‘குளிச்சிட்டுக் கிளம்பினா, ஒரு கால் அவர்லே டவுனுக்குப் போயிடலாம். ஜட்கா வண்டி இருக்கு. அங்கே ஓட்டல்லே சாப்பிட்டு, மண்டபம் போற பஸ்ஸைப் பிடிச்சா சாயந்திரத்துக்குள்ளே ராமேஸ்வரம் போய்ச் சேர்ந்துடலாம்..’

ராமேஸ்வரத்தில் அப்படி என்ன இருக்கிறது என்று இந்த ஸ்டேஷன் மாஸ்டர் தன்னைப் போகச் சொல்கிறான் என்று புரியவில்லை. அரசாங்கக் கட்டடத்தில் படம் வரைந்தது குற்றமென்று நேற்று ராத்திரி அவசரச் சட்டம் ஏதும் பிறப்பிக்கப்பட்டு, யாராவது பிடிவாரண்டோடு வருகிறார்களோ என்னமோ.

‘டீ குடியுங்க’

ஸ்டேஷன் மாஸ்டர் மேஜைப் பக்கம் கை காட்டினான்.

‘இன்னிக்குப் பால்காரன் வரலை. பால்பொடியிலே தான் போட்டேன். ஏதோ ஒண்ணு.. சூடா இருக்கணும்.. அவ்வளவுதான்..’

‘ஆமா, சூடா இல்லாட்ட வெளிக்குப் போக முடியாது’

ராமச்சந்திரன் சுபாவமாகப் பதில் சொல்லி விட்டு ஸ்டேஷன் மாஸ்டரைப் பார்த்து சிநேகிதமாகச் சிரித்தான். சகஜமான உரையாடலுக்கு இது போதாதோ என்னமோ. கொஞ்சம் யோசித்து விட்டுச் சொன்னான் –

‘வடக்கே எல்லாம் டீத்தூளையும் பாலோட சேர்த்துக் கொதிக்க வச்சுத்தான் டீ தயார் பண்ணுவாங்க’.

’நல்லா இருக்குமா என்ன அது?’

ஸ்டேஷன் மாஸ்டர் கவலையோடு கேட்டான்.

‘நான் வாரணாசியிலே இருந்தபோது அப்படிக் குடிச்சே பழகிடுத்து’

‘வாரணாசின்னா காசிதானே? பெரிய கோயிலெல்லாம் இருக்கு இல்லே?’

‘நான் அங்கே மசான கட்டத்தைத் தான் வரஞ்சுக்கிட்டிருந்தேன். எரிச்சு எரிச்சு கங்கையிலே விடுவாங்க. படிக்கட்டு எல்லாம் சாவு பூசிக்கிட்டு எப்பவும் வைராக்கியத்தோட கிடக்கும்’.

‘பார்க்க எப்படியோ இருக்குமே..’

‘நல்லா இருக்கும். புகையும் நெருப்பும் அழகுதானே.. ஏகப்பட்ட படிக்கட்டுக்கு நடுவே தண்ணியிலே நானே எரிஞ்சுக்கிட்டே மிதக்கறதா வரஞ்சேன்..’

‘இதிலே இருக்கா?’

ஸ்டேஷன் மாஸ்டர் ஹோல்டாலைக் காட்டிக் கேட்டான்.

‘இல்லை. சப்பாத்திக்கு காசு இல்லேன்னு கடைக்காரன் கிட்டே கொடுத்திட்டேன். அவன் அது பைசா பெறாதுன்னு சொன்னான். அவன் அப்பா படம் வரைஞ்சு தரச் சொல்லி போட்டோ கொண்டு வந்து கொடுத்தான். நான் தனியா எரிவானேன்னு அவன் அப்பாவும் கூடச் சேர்ந்து எரியறதா போட்டுக் கொடுத்தேன்..’

ஸ்டேஷன் மாஸ்டர் ஏன் இத்தனை ஆச்சரியமாகப் பார்க்கிறான் என்று தெரியவில்லை. சுபாவமாகக் கூட தன்னால் பேச முடியவில்லை என்று வருத்தமாக இருந்தது.

‘குளிக்கிறீங்களா? சீக்கிரமா கிளம்பினா மத்தியான சாப்பாட்டுக்கு மண்டபம் போயிடலாம்’

சாவி கொடுக்கப்பட்ட பொம்மை போல், காட்டிய திசையில் நடந்தான். பின்னால் குரல் வந்தது –

‘துண்டு எடுத்துக்குங்க’.

ஹோல்டாலில் இருந்து ஒரு கட்டு காகிதத்தை உருவிக் கீழெ போட்டான்.

‘ஸ்கெட்ச். கான்வாஸிலே எல்லாம் போடணும். காசுதான் இல்லே.. அது கிடக்கு… பல்பொடி இருக்கா…உமிக்கரி கூட போதும்..’

‘பாத்ரூமிலே பயோரியா பல்பொடி டப்பா இருக்கு..துண்டு வேணுமா..’

அவன் நாக்கைத் துருத்தினான்.

‘எங்கிட்டே குற்றாலத் துண்டு இருக்கு.. போதும்..’

ஹோல்டாலில் இருந்து பழைய துண்டை எடுத்துப் போட்டான். தேசலாக ஒரு சோப்புத் துண்டும் உள்ளே இருந்து விழுந்தது.

‘நீங்க நல்லா டீ உண்டாக்கியிருந்தீங்க.. தாங்க்ஸ்’

‘பாத்ரூம் மக் வெளியிலே இருக்கு. அந்தப் பக்கம் டாய்லெட்’.

‘ரொம்ப தாங்க்ஸ். நீங்க சரவணன் மாதிரி ஹெல்ப் பண்றீங்க’.

‘யாரு அது?’

‘ஆர்ட் காலேஜ்லே சீனியர். பானர் வரையறான் இப்ப’

‘பாத்ரூமிலே கதவு சரியாச் சாத்தாது. கொஞ்சம் அறைஞ்சு சாத்தணும்’.

குவளை குவளையாகத் தண்ணீரை எடுத்து விட்டுக் கொண்டபோது அவன் குற்றாலத்தில் இருந்தான்.

சந்தோஷமாகப் பாடுகிற, அவ்வப்போது பயம் கொள்ள வைக்கிற, கூகூ என்று கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்யும்படி உற்சாகம் பீறிடச் செய்கிற, அரையில் சிறுநீர் பிரியப் பிரியத் தலைமேல் குளிர்ந்த தாரையாகக் கும்மாளம் போட்டு இறங்குகிற, சுற்றிலும் சின்னச் சின்னத் திவலைகளை வீசி, கண்ணுக்கு முன் நீர்க் கண்ணாடி வழியே எதிரே இருக்கிற மலைகள் எல்லாம் குவி ஆடியில் பார்க்கிறது போல எல்லா விகிதமும் மாற்றிக் காண்பிக்கிற் அருவி. ராமச்சந்திரன் குளித்து விட்டு வருகிறான். பென்னிங்க்டன் துரை அரையில் லங்கோட்டோடு குளிக்கக் காத்துக் கொண்டிருக்கிறார். பின்னால் டிபுடி தாசில்தார் அய்யங்கார், பெருமாளை எழுந்தருளப் பண்ணி நடந்து வருகிறது போல், குடையைப் பொத்தாம் பொதுவாகப் பிடித்துக் கொண்டு பவ்யமாக வருகிறார். யாரோ ராமச்சந்திரன் கையில் காகிதத்தைத் திணிக்கிறார்கள்.

‘பார்த்துப் பாடு’

’பென்னிங்டன் துரையே நின்னைக்
குற்றாலந் தனில்கண்ட குதூகலம் இங்கெவராலும்
கூற ஒண்ணாதே..’

குரல் உச்சஸ்தாயியில் போகும்போது தலையிலிருந்து வழிந்த தண்ணீர் தொண்டையில் இறங்குகிறது.

துரை தடுமாறுகிற தமிழில், ‘நீர் இன்று ஒரு ராத்திரி இங்கே தங்க வேண்டியிருக்கும். குட்ஸ் தரம் புரண்டு ரயில் ஓடாது. சும்மா இருக்கிற நேரத்தில் நன்றாகப் பாடிப் பழகிக் கொள்ளும். ஓதுவார்கள் இங்கிலீஷ் டியூன் சொல்லித் தருவார்கள்’ என்கிறார்.

மூக்கில் தண்ணீர் ஏற, ராமச்சந்திரன் இருமிக் கொண்டு வெளியே வந்தபோது, ஸ்டேஷன் மாஸ்டர் அவன் ஹோல்டாலிலிருந்து எடுத்துப் போட்ட படங்களை ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டு நாற்காலியில் உட்கார்ந்திருந்தான்.

(தொடரும்)

’கணையாழி’யில் தி.ஜானகிராமன் நினைவுக் குறுநாவல் போட்டியில் தேர்வாகி, ஜுன் 1992-ல் பிரசுரமானது. அட்சரா பதிப்பகம் வெளியிட்ட என் முதல் குறுநாவல் தொகுப்பான ‘தகவல்காரர்’ நூலில் இடம் பெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன