Raathri Vandi – Part 2ராத்திரி வண்டி – பகுதி 2

ராத்திரி வண்டி இரா.முருகன் பகுதி – 2

’அசிங்கமாப் படம் போட்டிட்டிருக்கார் சார்.. இங்கே கொஞ்சம் வாங்க..’

புக்கிங் கிளார்க் ராமசாமி குரல் முன்னால் வந்தது. அப்புறம் சங்கடமாகச் சிரித்துக் கொண்டே கலாசி கணபதி.

பெஞ்சில் யாரது?

அவன் கொஞ்சம் வித்யாசமாகத் தெரிந்தான். பிடிவாதம் பிடிக்கும் குழந்தையைப் போல் நாக்கைத் துருத்திக்கொண்டு சிமெண்ட் பெஞ்சின் விளிம்பில் தொக்கினாற்போல் உட்கார்ந்திருந்தான். முன்னால் விரித்து வைத்த பலகை. ஒரு முப்பது வயது. அழுக்கு கதர் ஜிப்பா. தலை காடு. பெஞ்ச் பக்கத்தில் ஒரு ஹவாய் செருப்பும் பாதியும்.

சுற்றி இருந்தவர்கள் சும்மா லாந்தி விட்டுப் போக வந்தவர்கள். இப்படியே ஸ்டேஷன் வழியாக நடந்து கொஞ்சம் தள்ளி மதகடியில் குத்த வைத்துவிட்டு, காலைக்கடன் முடித்த தேஜஸோடு திரும்பி உலகை எதிர்கொள்ளப் புறப்பட்டவர்கள்.

‘ஊர் உலகம் கெட்டுப் போச்சுவே.. படத்தைப் பாத்தீரா? நட்ட நடுவிலே அவன் பாட்டுக்கு பலகையை நிறுத்தி வச்சுக்கிட்டு எளுதறான்….துணிக்கடைக்கு இருக்குமோ…கட்டினா எங்க சேலையைக் கட்டு.. இல்லே…இப்படி முண்டக்கட்டையா தரையிலே கால் பாவாம நில்லு..’

அவன் யாரையும் லட்சியம் செய்யாமல் படம் போட்டுக் கொண்டிருந்தான்.

‘கோன் ஹை பாய்?’

இந்திக்காரன் மாதிரி தெரியலியே. நல்ல கறுப்பா இருக்கான் பய.

‘யாருப்பா அது?’

முகத்தை நிமிர்த்தி அவன் பார்த்தான்.

ராசு.. ராசுப்பய இல்லே…?

அதே உயரம்.. மலங்க மலங்க முழிக்கறது.. நாக்கை வேறே துருத்திக்கிட்டு.. ராசு. தம்பி.. ஸ்டேஷன் மாஸ்டர் வேலையிலே சேர ஒரு நாள் இருக்கும்போது காணாமப் போனானே.. அவனே தான்… அவனா?

‘அப்பாவிப் பய.. தம்பிக்கு ஒரு வழி பண்ணுப்பா.. நீ நல்லா இருப்பே.. உன் உத்தியோகம் மேலே மேலே வரும்.. ராசு இங்கே வாடா.. அண்ணன் வேலையிலே சேரப் போறான்.. உடுப்பை இஸ்திரி போட்டு வாங்கிட்டு வாடா.. போய் டீக்கடையிலே உக்கார்ந்திடாதே… அண்ணன் ஊருக்குப் போகணும்..’

அப்பாவிப் பய டீக்கடைக்கார்ன் பொண்டாட்டியோட ஓடியே போனான்.

இங்கே எப்படி வந்தான்? நான் இருக்கறது தெரிஞ்சிருக்குமோ? மூணு வருஷத்துலே படம் போடக் கத்துக்க முடியுமா என்ன? அந்தப் பொம்பளையை வச்சுப் பழகிக்கிட்டானா? ஒரு சாயலுக்கு.. சாயல் என்ன, எப்படிப் பார்த்தாலும் என்னமா இருப்பா…

இல்லே.. இது ராசு இல்லே.. ராசுன்னா எழுந்து வது கட்டிக்க மாட்டானா என்ன? இவன் சிரிக்க மட்டும் சிரிக்கறான்.

’இதோ முடிச்சுட்டேன். ஃபைவ் மினிட்ஸ்.. கொஞ்சம் காயணும்..’

சிநேகமாகச் சொன்னான்.

டீசண்டான ஆள் தான். கேக்கற தோரணையே சொல்றதே.. என்ன தோணினதோ.. இங்கே எறங்கி வரைஞ்சுக்கிட்டிருக்கான்.. திடீர்னு மூடு வந்திருக்கும்.

‘நீங்க எல்லாரும் போங்க.. நான் பாத்துக்கறேன்.. ஆர்ட்டிஸ்ட்னா அப்படி இப்படித்தான் இருப்பாங்க.. அவங்க கண்ணுலே அசிங்கம் கிடையாது.. மனசும் அப்படித்தான்..’

நமக்குக் கூட இப்படியெல்லாம் பேச வருதே. சொசைட்டி எலக்சனுக்கு நிக்க வேண்டியதுதான்.

சீவகன் பெஞ்ச் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டான். படத்தையும் வரைகிறவனையும் மாறிமாறிப் பார்த்தான்.

ஒரு பெரிய மண்டபம். சுருள் சுருளாக இருட்டும் வெளிச்சமும் மாறி மாறி நிறம் காட்ட, வளைந்து போகும் மாடிப் படிகள். அந்த மாய லோகத்தில் ஒரு பக்கம் ஓட்டை உடசல் நாற்காலி, பழைய கடியாரம், பெடஸ்டல் ஃபேன் என்று அம்பாரமாகக் குவிந்திருக்கிறது. உடம்பில் துணி இல்லாமல், ஒரு இளம்பெண் படிக்கட்டு அருகே தரையில் கால் பாவாமல் மிதந்து கொண்டிருக்கிறாள். கையில் கோல் விளக்கோடு அந்தரத்தில் அலைகிற யட்சி.

சுட்டெரிக்க ஆரம்பிக்கிற வெய்யில். ஸ்டேஷனுக்கு வெளியே சரளைக்கல் பரப்பில் பையன்கள் சைக்கிள் படித்துக் கொண்டிருந்தார்கள்.

ஸ்கூல் லீவ் விட்டா வீட்டுலே உக்காந்து புத்தகம் படிக்கறது.. படம் போடறது.. புறா.. பானை மூடியிலே மலை.. படகு..

சாயந்திரம் அஞ்சு மணிக்கு ஒரு ரயில், காலம்பற ஏழுக்கு ஒண்ணு.. இதுக்காக கோட்டை மாட்டிக்கிட்டு கொட்டக் கொட்ட உட்காந்திருக்கணும்.. இந்தப் படம்.. இத்தனையுமா இங்கே உக்காந்து வரைஞ்சிருப்பான்? பாதி வரஞ்சு எடுத்திட்டு வந்திருப்பானா இருக்கும்.. இதெல்லாம் வெலை போகுமா? எம்புட்டு பெறும்?

டிராயிங் மாஸ்டர் பானை மூடியில் ஓட்டை போட்டு … எப்படித் தான் போடுவாரோ … இயற்கைக் காட்சி வரஞ்சு தருவார்….மஞ்சப் பிள்ளையார் புடிச்சு வச்ச மாதிரி ரெண்டு மலை, தண்ணி, தலப்பா கட்டிக்கிட்டு ஓடத்திலே போறவன்.. எல்லாம் ஒரு ரூபாய்க்கு.

ஆனா.. ஸ்கூல்லே டிராயிங் கிளாஸ்லே புறா மட்டும் தான் வரைவார். அது என்னமோ, வருஷம் பூரா புறா வரஞ்சே ஒப்பேத்திட்டு, தினசரி சாயந்திரம் ஆனந்தா டாக்கீஸிலே டிக்கட் கிழிக்கப் போயிடுவார்.

சீவகன் மணலில் வலது கால் பெருவிரலால் புறா வரைய முயற்சி செய்தான். சரளைக்கல் பரவிய மண் உம்மென்று கிடந்தது.

இந்த மண்ணுலே காலைத் தேச்சா தோல் உரிஞ்சு ரத்தம் தான் வரும். நாகநாதர் கோயில் சுவரா என்ன, எம்மேலே எழுது எழுதுன்னு கூப்பிட? இந்தி ஒழிகன்னு எழுதி, புறா மண்டை வரைஞ்சு, அதிலேயிருந்து குல்லா வச்ச தலை வரஞ்சு… அந்த மாதிரி ஆசாமிங்கதான் திண்டு தலைகாணியிலே சாஞ்சுக்கிட்டு இந்தி வளர்க்க காரியக் கமிட்டி அது இதுன்னு கூட்டுவாங்க.. தமிழ்ப் பத்திரிகையிலே பாதி கருப்பா போட்டோ எல்லாம் வரும்… குல்லா வச்சுக்கிட்டு.. திண்டு தலைகாணியிலே சாஞ்சுக்கிட்டு… கீழே இந்தி ஒழிக எழுதி…பக்கத்திலே ஒத்தை மயிர்க் குடுமியோட இந்திப் பண்டிட்டும் வரஞ்சு.. அதுங்கீழே இந்திப் பண்டிட்டும் ஒழிக…

டிராயிங் மாஸ்டர் பார்த்தா சிரிச்சிருப்பார்.. போர்டைப் பார்த்து ரெட்டைப் புறா வரைங்கடா… கதையா? என்ன கதை? பூசணிக்காய் கதையா? போன வாரம் தானேடா சொன்னேன்.. சரி சொல்றேன்… ஆனந்தா தியேட்டர்லே இண்டர்வெல்லுலே ஊர்ப்பய எல்லாம் குத்த வச்சு மூத்தரம் போற மண்ணுலே பூசணிக்கா கொடி போட்டாங்க… என்னமா காச்சது தெரியுமா? இந்த மாதிரி..இப்படி.. இப்படி…அவன் அவன் எனக்கு உனக்குன்னு தூக்கிட்டுப் போனான்…இவன் பாரு தலையிலே தூக்கிட்டு ஓடுறான்.. இவன்.. சைக்கிள் காரியர்லே..கவுறு போட்டுக் கட்டி.. இவன் அறுத்து கோணிச் சாக்கிலே அடைச்சுக்கிட்டு… எல்லாப் பயபுள்ளையும் வீட்டுலே பூசணிக்கா சாம்பார் வச்சுச் சாப்பிட்டானுங்க.. சாப்பிடறான் பாரு.. மொழங்கையிலேருந்து நக்கிக்கிட்டு.. அப்பறம் என்ன ஆச்சு? என்ன ஆச்சுன்னா.. இதான் ஆச்சு.. சொரி.. உலக மகா சொரி.. எத்தனை கிலோ யூரியா.. சொரியறான் பாரு.. முதுகிலே இழுத்து இழுத்து.. குடுமியா.. போட்டுட்டாப் போச்சு..

குடுமி வைத்தவர்களையும் குல்லா போட்டவர்களையும் தாராளமாகக் கிண்டல் செய்யலாம். இந்தி பண்டிட்களையும். அப்புறம் பெண்டாட்டியைத் தொலைத்த டீக்கடைக்காரர்கள்…

ராசுப்பய ஓடினதுக்கு அப்புறம் கோயில் சுவர்லே எவனோ வடைன்னு ஆரம்பிச்சு எழுதியிருந்தான். பக்கத்திலே பொம்பளை படம். டிராயிஞ் மாஸ்டர் கிட்டே படிச்ச பயதான்… பொம்பளைக்கு எப்படி புறா சாயல் வரும்?

இந்தா வரையறானே இந்தப் பொம்பளைக்கு … பொம்பளையா, மோகினியா… இடுப்பிலே ஏதாவது முண்டு மாதிரி சுத்தியிருந்தா நல்லா இருக்கும்… மறைச்சாத் தானே பார்க்கத் தோணும்..அது என்ன.. கதையிலே வருமே.. இன்ப ஊகங்களுக்கு இடமளித்தது… யட்சிக்கு ரவிக்கை போட்டா? சிவகாசி காலண்டர்லே எட்டுக்கையோட வர்ற உருவம் கூட ரவிக்கை போட்டு, மாரு எடுப்பா இருக்கும்… தையக்காரன் எப்படி தைப்பான்? எப்படிப் போட்டுக்கறது?

சித்திரக்காரன் படத்தைச் சுருட்டி வைத்தான். சோம்பல் முறித்தான்.

‘நீங்க ஊர் மாறி இறங்கிட்டீங்கன்னு நெனைக்கறேன். இங்கே பக்கத்துலே பார்க்க வேண்டிய இடம்னு ஒண்ணும் கிடையாது.’

‘ராமேஸ்வரம் வரைக்கும் டிக்கெட் வாங்கியிருக்கேன்’

‘ராமேஸ்வரம் வண்டி இனிமே நாளைக்குக் காலையிலேதான் வரும்’.

‘அப்படியா?’

‘ஆமா, அதுக்கு வேறெ டிக்கட் வாங்கணும்’

‘சரி’

‘இங்கே சாயந்திரம் வரைக்கும் ஒரு வண்டி கூட வராது. சாயந்திரம் ஆறரைக்கு ராமேஸ்வரத்திலேருந்து திரும்பற வண்டி வரும். அவ்வளவு தான். இங்கே தங்கக்கூட ஓட்டல் அது இதுன்னு எதுவும் கிடையாது.’

‘நீங்க தண்ணி கொடுக்க மாட்டீங்களா? வாரணாசியிலே ஒரு சாமியார் தண்ணியக் குடிச்சு மூணு மாசம் விரதம் இருந்தாராம்.. எனக்கு காப்பி போதும்.. என் மூஞ்சி பிடிக்காம வாசல்லே நிக்க வச்சுப் பேசினாலும், திண்ணையிலே இருக்கச் சொல்லி காப்பி கொடுப்பாங்க..’

என்ன மனுசன் இவன்? கிறுக்கனா? சாமியாரா? சாமியார் ஏன் துணி இல்லாத படம் போடறான்?

இது ரயில்வே சொத்து. அத்துமீறி உள்ளே வந்து தங்கறது தப்புன்னு கறாராச் சொல்லிடலாமா? பாரு, பய திரும்பவும் நாக்கைத் துருத்திக்கிட்டு பரிதாபமா நிக்கறான்.. ராசு.. உன்னைப் பார்த்து பரிதாபப்பட்டுத்தான் அவ வந்தாளாடா? பின்னே அவன்? அந்த டீக்கடைக்காரன்? சாரமில்லேன்னு புதுசா பாய்லர் வாங்கி வேறே எங்கேயாவது கடை போட்டிருப்பான்…

பெஞ்சிலிருந்து ஒரு பெரிய ஹோல்டால் மாதிரி ஏதோ சரிந்து விழ உள்ளே நிறையப் படங்கள்.. ஒரு புத்தகம்..

சீவகன் புத்தகத்தைக் குனிந்து எடுத்தான்.

’என் சரித்திரம்’

சித்திரக்காரன் சந்தோஷமாகச் சொன்னான்.

’என்னுதுன்னா.. என்னோடது இல்ல… உ.வே.சாமிநாத அய்யரோடது..’

சீவகன் புத்தகத்தைப் புரட்ட, உத்தமதானபுரம், பண்டார சந்நிதிகள், ஆறுமுகத்தா பிள்ளை வரவு, இந்திர இழவூர் எடுத்த காதை என்று துண்டு துணுக்காகப் பார்வையில் தெரிந்து மறைந்தன.

‘இதெல்லாம் நல்ல விலைக்குப் போகுமா?’

சீவக்ன படத்தைக் காட்டிக் கேட்டான்.

‘உசைன்… பெந்த்ரே.. விவியன் சுந்தரம்.. பூபேன் கக்கர்.. கீவ் பட்டேல்.. அர்ப்பணா கவுர்.. ‘

ஒரு எழவும் புரியலேடா.

‘ராமச்சந்திரன் இந்த வரிசையிலே இல்லே’

‘அது யாரு?’

’நான் தான்.. எனக்கு குளிக்க மட்டும் ஏதாவது இடம் கிடைக்குமா? குளிச்சுட்டுக் கிளம்பிடறேன்..’

‘வாங்க போகலாம்..கணபதி, புக்கிங் கிளார்க்கை கொஞ்சம் பார்த்துக்கச் சொல்லு.. வீடு வரைக்கும் போய்ட்டு இதோ வந்துடறேன்..’

சீவகன் நடக்க ஆரம்பித்தான். பின்னாலேயே சித்திரக்காரனும்.

(தொடரும்)

’கணையாழி’யில் தி.ஜானகிராமன் நினைவுக் குறுநாவல் போட்டியில் தேர்வாகி, ஜுன் 1992-ல் பிரசுரமானது. அட்சரா பதிப்பகம் வெளியிட்ட என் முதல் குறுநாவல் தொகுப்பான ‘தகவல்காரர்’ நூலில் இடம் பெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன