Fernandez, Mani Iyer and a mridhangamமணி ஐயருக்கு சாதம் போட்ட பெர்னாந்து

பரிவாதினி ‘பர்னாந்து’ விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. லலிதாராம் எதிர்பார்த்தபடி முதலில் கண்ணில் பட்டு வழக்கமான அன்பும் உற்சாகமுமாக வரவேற்றார்.

பர்னாந்து விருது – மிருதங்கம் உருவாக்கும் கலையில் விற்பன்னராக இருக்கும் குடும்பத்தில் போன தலைமுறை சாதனையாளார் காலம் சென்ற திரு பர்னாந்து என்ற பெர்னாண்டஸ். அவருடைய தகப்பனார் செவத்தியான் என்ற செபாஸ்டியனிடம் கற்று வழிவழியாக வரும் உருவாக்கக் கலை. பரிவாதினி இன்று விருது வாங்கி கவுரவித்தது பர்னாந்துவின் மகனான மிருதங்க உருவாக்கக் கலைஞர் திரு செல்வம் அவர்களுக்கு.

மூத்த இசைக் கலைஞர் திரு டி.கே.மூர்த்தி ‘பெர்னாந்து சாதம் வச்சா அப்புறம் பத்து நாள் சாதம் வேணாம்’ என்று சொன்னதை இசைப் பிரியர்கள் அல்லாதோர் கேட்டிருந்தால் பெர்னாந்துவை பெருஞ் சோற்று உதியஞ் சேரலாதன் போல, மூர்த்தி அவர்களுக்குத் தலைவாழை இலை போட்டு பொலபொல என்று பொன்னி அரிசி வடித்து பத்து கறி, பாயசம, பப்படம், அவியலோடு விருந்து போட்டதாக உருவகித்திருப்பார்கள். மூர்த்தி சார் சொன்னது மிருதங்கத்துக்கு ‘சாதம்’ வைத்துத் தயார்ப் படுத்துவதை.

‘அந்த மிருதங்கத்தை வாசிச்சே பார்க்க வேண்டாம். கச்சேரிக்குப் போய் உட்கார்ந்து சாப்பு வச்சா கனகச்சிதமா இருக்கும்’.

மிருதங்க மேதை பாலக்காடு மணி ஐயரின் புதல்வர் திரு பாலக்காடு ராஜாராம் extempore சொற்பொழிவு பிரமாதமாக இருந்தது. இசைக் கலைஞர்களுக்கும் பர்னாந்து போன்ற ‘தொழில் நுட்ப’க் கலைஞர்களுக்கும் இருந்த – இருந்து வரும் ஒரு delicate equation, பரஸ்பர possessiveness எல்லாம் தெரிய வந்தது.

பேசிய இசைக் கலைஞர்கள் எல்லோருக்கும் பெர்னாந்துவோ செல்வமோ மிருதங்கம் மூலம் நெருக்கமானவராக இருந்ததால் / இருப்பதால், ஒரு நல்ல நண்பரைக் குறிப்பிடும் விதமாக ‘அவன்’ விளிதான். அந்த உருவாக்கும் சிற்பிகளுக்கும் இந்தக் கலைஞர்களோடு சரிக்கு சரி நின்று மோதி வேடிக்கை பார்க்கும் நட்பு இருந்திருக்கிற்து.

ராஜராம் சொன்னார் – செல்வம் உருவாக்கிக் கொண்டு வந்து கொடுத்த மிருதங்கத்தில் ஒலி திருப்திகரமாக இல்லை என்று ஏழெட்டுத் தடவை திருப்பி விட்ட பிறகு செல்வம் ஒரு மிருதங்கத்தைக் கொண்டு வந்து கொடுத்தார். வாசித்தால் வித்தியாசமான ஒலி. இதென்ன என்று கேட்டால் அவர் சொல்ல மாட்டேன் என்கிறார். ரொம்பக் கேட்டதும் சொன்னது – வழக்கமில்லா வழக்கமாக பன்றித் தோலில் செய்ததாம் அது.

பத்து தடவை உருவாக்கின மிருதங்கத்தைத் திருப்பி விட்டால் அவருக்குக் கோபம் வராமல் என்ன செய்யும் என்று ராஜாராம் சொல்லும் போது ஒரு அந்நியோன்யம் தெரிந்தது என்றால் ஓரமாக உட்கார்ந்திருந்த செல்வம் முகத்தில் நாணத்தோடு ஒரு சிறு புன்னகை. ரசமாக காட்சி.

நண்பர்கள் கவிஞர் ரவி சுப்பிரமணியன், அருண் நரசிம்மன் மற்றும் லலிதாராமின் பெற்றோர்கள் ஆகியோரை சந்தித்துப் பேச வாய்த்தது. ஹிந்து பத்திரிகை கோலப்பனையும்.

அருண் தினமலரில் எழுதும் இசை விழா கட்டுரைகளை இனிமேல்தான் படிக்க வேண்டும்.

கோலப்பன் அசல் நெல்லை மனுஷர். நண்பர் ஜெயமோகனோடுஅண்மையில் ஒரு பிறந்த நாள் விழாவில் பேசிக் கொண்டிருந்தபோது சொன்னார் -’கோலப்பன் சென்னையில் இருந்தாலும் , மனசெல்லாம் நெல்லையில் தான்.. இன்னிக்கு கோவில்லே கொடை.. வில்லுப்பாட்டு நடக்கிற நாள்.. இப்படி’. சரியாகத்தான் சொன்னார்.

கோலப்பனிடம் ஒரு சேஞ்சுக்காக இலக்கியம் பேசிக் கொண்டிருந்தேன். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வேளாள – பிராமண சமூக உறவு, ’ இரட்சண்ய யாத்திரீகம்’ ஹென்றி கிருஷ்ண பிள்ளையின் ‘கிருஷ்ண பிள்ளை கிறிஸ்துவன் ஆனது’ ( தமிழில் முதல் வாழ்க்கை வரலாற்று நூல் 1880-கள்), ‘சிறுகதை எழுதாதீங்கன்னு ஒரு பதிப்பாள நண்பர் சொன்னார்.. ஒவ்வொரு சிறுகதையையும் வளர்த்திப் போனால் நாவலாயிடும்’.. இப்படி.

அருண் நரசிம்மன் அதே பதிப்பாளரைப் பற்றிச் சொன்னது – அறிவியல் புத்தகம் எழுதிக் கொடுத்தால் படிச்சுட்டு சொன்னார் : சுஜாதா, இரா.முருகன் பாணியா இருக்கே..

என்ன செய்ய, அறிவியலை அப்படி எழுதினால் தான் படிக்க வாகாக இருக்கு.. தி இந்து போன வாரம் வந்த கட்டுரைக்கு எதிர்வினை இதை உறுதி செய்கிறதால், நம்ம அறிவியல் கட்டுரையில் நடை மாற்று செய்ய உத்தேசம் இல்லை..

நண்பர் சுகாவைத் தான் காணோம்.
————————————

டி எம் கிருஷ்ணா சங்கீத சாகரம் தான்.

முகத்தில் தெரிந்தது restlessness இல்லை. நிறைய விஷயஙக்ளை ஒரே நேரத்தில் சிந்தித்துக் கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

சட்டென்று கரகரப்ரியாவில் தொடங்கி, ஒரு விஸ்தாரமான சக்கனி ராஜா. அவ்வப்போது இசையோடு அவர் உதிர்க்கும் ஆஹா பக்க வாத்தியக்காரர்களுக்கு மட்டுமில்லை, தனக்கும் தான்.

கிட்டத்தட்ட அரை மணி நேரம் சக்கனி ராஜா பவனி வந்த பிறகு ‘இதோட முடிஞ்சுத்துன்னு நினைக்க வேணாம்’ என்று சொல்லி விட்டு இன்னும் கொஞ்சம்…

‘கீழே வாங்க,’ – சாரங்கா கடந்து யமுனா கல்யாணிக்கு வரும்போது வயலின் ஸ்ரிராம் குமாரிடம் கேட்கிறார். ’பஞ்சமம்’ – பின்னால் தம்புரா வாசித்துக் கொண்டிருந்த இளம்பெண்ணிடம் சொல்லி விட்டு, திருப்தி ஏற்படாமல் தானே தம்புராவை வாங்கி மீட்டித் தருகிறார்.

வயலினின் ’இறங்கி வந்த’ இசைப் பெருமழையில் நனைந்து சிலிர்த்தபடி, ‘ஊஹும், நான் பாடி நீங்க வாசிக்கக் கூடாது.. நீங்க வாசியுங்க.. நான் அப்புறமா கலந்துக்கறேன்’.

ஒரு வினாடி தயங்கி விட்டு, கிருஷ்ணா நீ பேகனே பாரோ தனி வயலின் நாதமாகத் தொடர்ந்தது. பத்து நிமிடத்தில் ‘ஜகதோதாரணா, உடுப்பி ஸ்ரீக்ருஷ்ணா’ என்று டி எம் கிருஷ்ணா குரலும் சேர, தனி அழகோடு பூர்த்தியானது.

ஆற்றொழுக்கு மாதிரி கமாஸ் RTP ராகம் தானம் பல்லவி. பிரதானமானதே மனித நேயமே என்று பல்லவி.

முடித்து ராகம் இழுத்தார். ஹரிகாம்போதி போல இருந்தது. எனக்கு மட்டும் அப்படித் தோன்றியதா தெரியவில்லை. ‘நான் என்ன பாடறேன்னு எனக்கே தெரியலே’ பாதி நகைச்சுவையாக அவர் சொல்ல, தயங்கி விட்டு ரசிகர்கள் சிரிக்கிறார்கள். ‘என்ன ஆச்சு இந்தப் பிள்ளைக்கு . யார் கண்ணோ பட்டுடுத்து போலிருக்கு’ – பின் வரிசையில் ஒரு மாமி சொல்கிறார். அவர் சொல்லி முடிக்கும் முன் அடுத்த சுநாதப் பிரவாகம் – பாகேஸ்ரீ.

டி எம் கிருஷ்ணா பாடிக் கொண்டே இருக்கட்டும். பாடிக் கொண்டு மட்டும் என்று சொல்ல நமக்கு உரிமையில்லை…
————————–

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன